திருநள்ளாறு கோவிலில் நாளை சனி பெயர்ச்சி விழா.. குவியும் பக்தர்கள். டிச.23 வரை பள்ளிகளுக்கு விடுமுறை
காரைக்கால்: திருநள்ளாறு கோவிலில் சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு நாளை டிசம்பர் 20 முதல் 23ஆம் தேதி வரைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் கூட நடத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி நாளை 20ஆம் தேதி மாலை 5.20 மணிக்கு சனி பெயர்ச்சி விழா திருநள்ளாறு கோவிலில் விமரிசையாக நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புவோர் உணவு பாதுகாப்புத் துறையின் சிறப்பு அனுமதி பெற்று அன்னதானம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு முகாம் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் அன்னதானம் செய்ய விண்ணப்பித்துள்ளனர்.
பக்தர்கள் இ-சேவை, இ-நவகிரக சாந்தி, இ-காணிக்கை சேவைகளை www.thirunallarutemple. என்ற ஆன்லைன் மூலம் பெறலாம். ரூ.1000, ரூ.600 ரூ.300 என்ற கட்டணத்தில் பதிவு செய்யப்படுகிறது. சிறப்பு அபிஷேகத்திற்கு ரூ.500-ம், சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ.300-ம், சிறப்பு திலசூரண நைவேத்ய அர்ச்சனைக்கு ரூ.300ம் சிறப்பு ஒரு மண்டலம் 48 நாட்கள் அஷ்டோத்திர அர்ச்சனைக்கு ரூ.2400-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
சனி பெயர்ச்சி நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மாவட்டம் மற்றும் கோவில் நிர்வாகங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு 20ம் தேதி காரைக்கால் மாவட்டம் முழுவதும் உள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதே போல காரைக்காலில் நாளை 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை காரைக்கால் மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறையாக கணக்கிடப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. சனி பெயர்ச்சி நிகழ்ந்து ஒரு மாதம் வரைக்கும் திருநள்ளாறு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications