Kumbam to Meenam: இன்று சனிப்பெயர்ச்சி 2025: சனீஸ்வர பகவானின் தாக்கம் குறைய என்ன செய்ய வேண்டும்?
சென்னை: திருக்கணித பஞ்சாங்கப்படி, இன்றைய தினம் சனிப்பெயர்ச்சி நடைபெறுவதாக கணிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று இரவு 9.44 மணிக்கு தனது சொந்த வீடான கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரம் 3ஆம் பாதத்தில் இருந்து மீனத்தில் உள்ள பூரட்டாதி 4ஆம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
பொதுவாகவே ராகு, கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி ஆகியவற்றின் மீது மக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு என்பது இருக்கத்தான் செய்கிறது. இந்த பெயர்ச்சிகள் நமக்கு நன்மையை அளிக்குமா என மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி என சொல்லப்பட்டது. ஆனால் இதை சில ஜோதிடர்கள் மறுத்தனர். பிரபல ஜோதிடர் ஒருவர் கூட இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியே இல்லை, யாரோ கிளப்பிவிட்டுவிட்டார்கள் என்றார்.
ஆனாலும் மக்கள் சனிப்பெயர்ச்சி பலன்களை எதிர்பார்த்துதான் காத்திருந்தனர். மேலும் சனிப்பெயர்ச்சி நாளில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் அந்த கோயிலில் கூட சனிப்பெயர்ச்சி தினம் என சொல்லப்படும் மார்ச் 29ஆம் தேதி அதற்கான சிறப்பு விசேஷம் ஏதும் திருநள்ளாறில் செய்யப்படவில்லை என கோயில் நிர்வாகம் சொன்னது.
அந்த விளக்கத்திலேயே அதற்கான காரணத்தையும் சொன்னது. அதாவது அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரம்பரிய கணக்கு முறைப்படி, 2025 மார்ச் மாதம் 29ஆம் தேதி நிகழாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 29ஆம் தேதி, திருநள்ளாறு கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும். 2026 ஆம் ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. சனிப்பெயர்ச்சி நடைபெறும் தேதி பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.
எனினும் இன்று சில கோயில்களில் திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சனி பகவான் தனது 3ஆம் பார்வையால் கால புருஷ 2ஆம் இடமான ரிஷப ராசியையும் 7ஆம் பார்வையால் கால புருஷ 6ஆம் இடமான கன்னி ராசியையும், 10 ஆம் பார்வையால் கால புருஷ 9ஆம் இடமான தனுசு ராசியையும் பார்க்கிறார்.
தற்போது கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்கிறார் என்பதால் அவர் நன்மை செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சனி நன்மையை தருவாரா என்பது அவரவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்தே அமையும். இன்றைய தினம் தனது குலதெய்வத்தை வணங்கலாம். பெருமாளையும் வணங்கி வேண்டிக் கொள்ளலாம்.
தானம் செய்ய வேண்டும், செடிகளுக்கு நீருற்ற வேண்டும், உதவி என கேட்டு வந்தால் தன்னால் இயன்றதை செய்ய வேண்டும், இன்று இறைச்சி உண்ண கூடாது, வாயில்லா ஜீவன்களை வதைக்கக் கூடாது உள்ளிட்டவைகளை செய்தால் சனி நன்மையை கொடுப்பார் என்பது நம்பிக்கை!












Click it and Unblock the Notifications