பத்து வித பாவங்களைப் போக்கும் பாபஹரதசமி..கங்கையில் புனித நீராடினால் என்னென்ன நன்மைகள்
பிறர் சொத்தை அபகரிக்க நினைப்பது, மற்றவர்களின் வாழ்க்கையை கெடுக்க நினைப்பது, சம்பந்தமில்லா விசயங்களைப் பேசி பிறர் மனதை புண்படுத்துவது மனதால் செய்யும் பாவம்.
டெல்லி: வைகாசி மாத சுக்லபட்ச தசமி இன்று பாபஹர தசமியாகவும் கங்கா தசராவாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கங்கையில் நீராடினால் நாம் செய்த பத்து வித பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். கங்கா தசமியை முன்னிட்டு இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கானோர் கங்கையில் புனித நீராடினர்.
வைகாசி மாதம் கன்னி ராசியில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்க சூரியன் ரிஷபத்தில் பயணிக்கும் போது சுக்ல பட்சம் தசமி திதி ஒரு புதன்கிழமை நாளில் வியாதிபாத யோகம் கூடி வரும் நல்ல நாளில் கங்கை நதி இந்த தேவலோகத்தில் இருந்து இந்த புண்ணிய பூமியில் பிரவாகம் செய்ததாக சொல்கின்றன புராணங்கள். தேவலோகத்தில் இருந்து கங்கை நதி ஒன்றும் சாதாரணமாக வந்து விட வில்லை. பகீரதன் செய்த கடும் தவத்தின் பலனாகவே இந்த பூமியில் கங்கையின் பிரவேசம் நிகழ்ந்துள்ளது.
கங்கா நதி பூமிக்கு வந்தது பற்றி புராண கதை உள்ளது. தேவலோகத்தில் மந்தாகினியாக ஓடும் புண்ணிய நதி பாதாள உலகத்தில் பாகீரதியாகவும், பூமியில் கங்கையாகவும் பாய்ந்து வளப்படுத்துகிறாள்.

பகீரதன் தவம்
தனது முன்னோர்கள் செய்த பாவங்கள் தீர பல ஆண்டுகள் தவம் செய்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்தவர் பகீரதன். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவமிருந்ததன் பலனாக பூமிக்கு வர சம்மதித்த கங்கை தனது வேகத்தை கட்டுப்படுத்த சிவபெருமானால் மட்டுமே முடியும் என்று கூறினார். சிவனிடம் சம்மதம் வாங்க மீண்டும் தவமிருந்தார் பகீரதன். ஒருவழியாக சிவனின் சம்மதமும் கிடைக்கவே, மகிழ்ச்சியாக பாய்ந்து வந்தார் கங்கை.
சிவபெருமான்
தனது சடாமுடியால் கங்கையின் வேகத்தை கட்டுப்படுத்தினார் சிவபெருமான். வேகம் குறைந்து அமைதியாக பூலோகத்தில் பாய்ந்தார் கங்கை அன்னை. உடனே பகீரதன் கங்கை அன்னையிடம் வேண்டுகோள் வைத்தார். பாதாள லோகத்தில் உள்ள முன்னோர்களின் அஸ்தியை கரையச் செய்து புனிதப்படுத்திய பின்னர் பூவுலகத்தில் பாய்ந்து புனிதப்படுத்துவீராக என்று கேட்கவே கங்கை அன்னை அவ்வாறே செய்தார்.

பத்து நாட்கள் பண்டிகை
புனித கங்கை நதி இந்த பூமிக்கு வந்த நாளை கொண்டாடும் விதமாக வைகாசி மாத அமாவாசைக்கு பிறகான பத்து நாட்களும் கங்கா தசராவாக கொண்டாடுகின்றன. இந்த நாளில் கங்கை நதியில் புனித நீராடுவதோடு கங்கையை வணங்குகின்றனர். புனிதமான கங்கை நதியில் நீராடுவதன் மூலம் நாம் செய்த பத்து வித பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். அதென்ன பத்து வித பாவங்கள் என்று கேட்கலாம். மனதாலோ, உடலாலோ, பேச்சினாலே ஒருவரை காயப்படுத்துதான் பத்து வித பாபங்கள். நாம் இந்த பத்துவிதமான பாவங்களில் ஏதாவது ஒன்றினை நம்மையும் அறியாமல் செய்திருந்தால் அதனை போக்கிக்கொள்ள இந்த பாபஹர தசமியை, காங்கா தசரா தினத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்பதோடு நமது முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.

பத்துவிதமான பாவங்கள்
பிறர் சொத்தை அபகரிக்க நினைப்பது, மற்றவர்களின் வாழ்க்கையை கெடுக்க நினைப்பது, சம்பந்தமில்லா விசயங்களைப் பேசி பிறர் மனதை புண்படுத்துவது மனதால் செய்யும் பாவம். பிறர் பொருளை அபகரிப்பது, அடித்து காயப்படுத்துவது, பிற பெண்களை மனதால் நினைப்பது உடலால் செய்யும் பாவங்கள். தகாத வார்த்தைகளை பேசி பிறர் மனதை காயப்படுத்துவது, பொய் சொல்லுவது, அவதூறாக பேசி பிறரை புண்படுத்துவது, அறிவுக்கு பொருத்தமில்லாத விசயங்களை பேசி பிறரை காயப்படுத்துவது என பத்துவிதமான பாபங்களில் ஏதாவது ஒன்றினை செய்திருந்தாலும் இந்த புனித நாளில் போக்கிக்கொள்ளலாம்.

ரமேஸ்வரத்தில் புனித நீராடல்
கங்கை பாயும் பகுதிகளில் இந்த கங்கா தசரா விழா கொண்டாடப்படுவது போல ராமேஸ்வரத்திலும் பாபஹர தசமி விழா கொண்டாடப்படுகிறது. ராவணனை வதம் செய்த ராமபிரான் சீதா தேவி, லட்சுமணர் உடன் ராமேஸ்வரத்தில் கடற்கரை மணலில் லிங்கம் உருவாக்கி வழிபட்டு தன்னுடைய பிரம்மஹத்தி தோசத்தையும் பாவங்களையும் போக்கிக்கொண்டார். இந்த நாளும் பாபஹர தசமி நாள் என்கிறது புராணம். ராமலிங்க பிரதிஷ்டை தினமாகவும் ராமேஸ்வரத்தில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications