குலசேகரன்பட்டினம் தசராவில் நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹாரம்! திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசல்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா கொண்டாட்டத்தின் கடைசி நாளான சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. இதனால் குலசை நோக்கி ஏராளமானோர் படையெடுப்பதால் திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அது போல் வீரபாண்டியபட்டினத்திலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா நடைபெறும். இந்த திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த திருவிழாவையொட்டி 23 ஆம் தேதி, முதல் நாள் இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்திலும், 2ஆம் நாள் இரவில் கற்பக விருட்சம் வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலத்திலும் 3ஆம் நாள் இரவில் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும் 4ஆம் நாள் இரவில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும் 5ஆம் நாள் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்திலும், 6ஆம் நாள் இரவில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்திலும் 7ஆம் நாள் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும் 8ஆம் நாள் இரவில் கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்திலும் 9ஆம் நாள் இரவு அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும், 10 ஆம் நாளான இன்று நள்ளிரவு 12 மணிக்கு மகிஷனை சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடக்கிறது.
இந்த தசரா விழாவை காண கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த விழாவில் காளி, அம்மன், சிவன், பார்வதி, முருகன், அரக்கர், குரங்கு, தாடகை, குறவன்- குறத்தி போன்று வேடமிட்டு ஊர்வலமாக செல்வது வழக்கம்.
இந்த விழாவின் கடைசி நாளான இன்று மகிஷாசுரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறும். இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பாக எழுந்தருளி மகிஷாசுர நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை காண பலர் குலசேகரன்பட்டினம் நோக்கி வருவதால் திருச்செந்தூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அது போல் வீரபாண்டியபட்டினத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications