குருவாயூரில் துர்கா ஸ்டாலின்.. அன்று துலாபாரம்.. இன்று தங்க கிரீடம் காணிக்கை.. பலமான வேண்டுதல்
குருவாயூர்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு 32 சவரன் எடை கொண்ட தங்க கிரீடத்தைக் காணிக்கையாக வழங்கியுள்ளார். சந்தனம் அரைக்கும் இயந்திரத்தையும் குருவாயூரப்பனுக்கு காணிக்கை அளித்துள்ளார் துர்கா ஸ்டாலின்.
பகுத்தறிவு சிந்தனைகளை அதிகம் பேசும் கட்சி திமுக. அதே நேரத்தில் திமுகவினர் பலரும் கோவிலுக்கு சென்று வருகின்றனர். பலர் ஆன்மீகவாதிகளாகவும் உள்ளனர். கடவுள் மறுப்பு கொள்கை உடைய திராவிட குடும்பத்தைச் சேர்ந்த துர்கா ஸ்டாலின் கோயில்களில் வழிபாடு நடத்துவதற்கு விமர்சனங்கள் பல எழுந்தன. ஆனாலும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு சென்று வழிபடுவதை எப்போதும் நிறுத்தியதில்லை. இது அவரின் தனிப்பட்ட உரிமை என்ற அளவிலேயே அணுகப்பட்டுள்ளது.

துர்கா ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் மட்டும் அல்லாது திருப்பதி உள்ளிட்ட நாட்டின் பிற மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கும் சென்று வழிபட்டு வருகிறார். ஏற்கனவே மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவருடன் செல்லும் துர்கா ஸ்டாலின் அப்படியே அங்கிருக்கும் கோயில்களில் வழிபட்டு வேண்டுதல் வைத்து விட்டு வந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகும் துர்கா ஸ்டாலின் அனைத்து கோயில்களுக்கும் சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்.
திருச்செந்தூர், திருப்பதி சென்று நேர்த்திக்கடன் செலுத்திய துர்கா ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். 40 ஆயிரம் ரூபாய் செலவில் சுற்று விளக்கு நேர்த்திக் கடனை தொடர்ந்து துலாபாரம் நேர்த்திக் கடன் செலுத்தினார். எடைக்கு எடை சர்க்கரையை குருவாயூரப்பனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தினார்.

ஆடி மாதம் பிறந்ததில் இருந்து பல கோவில்களுக்கு சென்றுள்ள துர்கா ஸ்டாலின், கடந் வெள்ளிக்கிழமையன்று காஞ்சிபுரம் சென்று காமாட்சியம்மனை மனதார வேண்டிக்கொண்டு வழிபட்டார். இந்த நிலையில் குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமையான இன்றைய தினம் குருவாயூர் கோயிலுக்கு துர்கா ஸ்டாலின் வருகை தந்தார். குருவாயூரப்பனுக்கு பொருத்தமான தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கி உள்ளார். துர்கா ஸ்டாலின் காணிக்கையாக வழங்கியுள்ள 32 சவரன் தங்க கிரீடத்தின் மதிப்பு சுமார் ரூ.14 லட்சம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கிரீடம் தயாரிப்பதற்கான அளவு, கோவிலில் இருந்து வாங்கப்பட்டது. கலைத்திறன் மிக்க இந்த கிரீடம் துல்லியமான அளவீடுகளை கொண்டு கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவஞானம் என்பவர் செய்தார்.
அதோடு சந்தனம் அரைக்கும் இயந்திரம் ஒன்றையும் கோவிலுக்கு வழங்கினர். இயந்திரத்தின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் ஆகும். இன்று பகல் 11.35 மணிக்கு துர்கா ஸ்டாலின் கோவிலுக்குள் சென்று இதனை காணிக்கையாக வழங்கினார். துர்கா ஸ்டாலின் இன்று கோவிலுக்கு வரும் முன்னதாகவே சந்தனம் அரைக்கும் இயந்திரம், நேற்று மாலை குருவாயூருக்கு கொண்டு செல்லப்பட்டது. குருவாயூரப்பனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட இந்த தனித்துவமான இயந்திரத்தை திருச்சூர் புத்தோல் ஆர்எம் சத்யம் இன்ஜினியரிங் உரிமையாளர் கே.எம்.ரவீந்திரன் வடிவமைத்துள்ளார்.
குருவாயூரப்பனை வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றி பெற்ற உடன் எடைக்கு எடை சர்க்கரை துலாபாரம் கொடுத்த துர்கா ஸ்டாலின் தற்போது தங்க கிரீடத்த காணிக்கையாக அளித்துள்ளார். பலமான வேண்டுதலை வைத்து விட்டு வந்திருக்கிறார் துர்கா ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications