பிதுர்காரகன், மாதுர்காரகன் .. தை அமாவாசைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? பித்ரு தர்ப்பணம் அவசியம்!
சென்னை: தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வணங்கி வருகின்றனர் பொதுமக்கள். வருடத்தில் பல அமாவாசைகள் இருந்தாலும் தை அமாவாசை முக்கியத்துவம் பெறுவதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. காரணம் அன்று தான் தாகத்தோடு இருக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, பித்ரு லோகத்துக்கு அனுப்பி வைக்கும் நாள் ஆகும்.
மாதம் தோறும் அமாவாசை வந்தாலும் தை மாதம் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த தினத்தில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பதும் இறை வழிபாடு நடத்துவதும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு தை அமாவாசை ஜனவரி 29ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. ஜனவரி 28ஆம் தேதி இரவு 8.10 மணிக்கு தொடங்கி ஜனவரி 29ஆம் தேதி இரவு 7.21 வரை இருக்கிறது. அந்த குறிப்பிட்ட நேரத்தில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பது மிகச் சிறந்த பலன்களை அளிக்கும்.
அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்து விட்டு வீட்டில் முன்னோர்கள் படங்களை வைத்து சந்தனம், குங்குமம், துளசி மாலை சூட்டி வழிபடலாம். முன்னோர்களின் படங்கள் கிழக்கு திசையில் இருக்க வேண்டியது அவசியம். முன்னோர்களுக்கு பிடித்த உணவுப் பொருட்களை படைத்து வழிபாடு நடத்துவதோடு அவற்றைக் காகங்களுக்கு உணவாக அளிக்கலாம். மேலும் கோதுமை தவிடு, அகத்திக் கீரை ஆகியவற்றை பசுவிற்கு தானமாக வழங்கினால் கூடுதல் பலன் கிடைக்கும்.
தர்ப்பணம் முடிக்கும் வரை வீட்டில் தெய்வ வழிபாடுகளை ஒத்தி வைக்க வேண்டும். தர்ப்பணம் பூஜைகள் முடிந்த பிறகு தான் தினசரி பூஜைகளை செய்ய வேண்டும். மாமிசம் சாப்பிடாமல் இருப்பது கூடுதல் பலன் அளிக்கும். அமாவாசை அன்று வழிபாடு தர்ப்பணம் என எது செய்தாலும் கிழக்கு திசை நோக்கி செய்ய வேண்டியது அவசியம். அதே நேரத்தில் ஆலய வழிபாடும் தை அமாவாசை பலன்களை அள்ளித் தரும்.
தை மாத அமாவாசை முக்கியத்துவம் பெறுவதற்கும் முக்கிய காரணம் இருக்கிறது. தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை தான் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் படையல் கொடுக்க வேண்டிய முக்கியமான நாட்களாக இருக்கிறது. ஆடி அமாவாசைக்கு பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு வரும் மூதாதையர்களுக்கும் முன்னோர்களுக்கும் மஹாளய அமாவாசை அன்று உணவளிக்கிறோம்.
தொடர்ந்து தாகத்தோடு இருக்கும் அவர்களுக்கு தை அமாவாசை அன்றுதான் விடை கொடுத்து பித்ரு லோகத்திற்கு அனுப்புவதாக நம்பப்படுகிறது. அதன் காரணமாகத்தான் தை அமாவாசை நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் ஆகியவற்றை கொடுத்து அவர்களின் தாகத்தை தீர்ப்பதாக நம்பப்படுகிறது. அவ்வாறு செய்வதால் நாம் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களது கோபம் குறைந்து ஆசீர்வதித்து செல்கிறார்கள்.
தை அமாவாசை என்பது சூரியனின் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. காரணம் தை மாதத்தில் வரும் அமாவாசை அன்றுதான் சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். சனியின் வீடான மகரத்தில் சனியின் தந்தையாக கருதப்படும் சூரியன் பிரவேசிக்கும் நாள் மிகச்சிறப்பானதாக கருதப்படுகிறது. சூரியனை பிதுர்காரகன் என்றும் சந்திரனை மாதுர்காரகன் என்றும் முன்னோர்கள் கூறுகின்றனர். இந்த இருவரும் சனியின் வீட்டில் சஞ்சரிக்கும் நாள்தான் தை அமாவாசை. இதனால்தான் அது புண்ணிய காலமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications