தை அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் ராமநாதசுவாமி தீர்த்தவாரி.. நீராட குவியும் பக்தர்கள்
ராமேஸ்வரம்: தை அமாவாசை வரும் 9ஆம் தேதி கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கவும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். பக்தர்களின் வசதிக்காக ராமநாதசுவாமி கோவிலில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தைமாத அமாவாசை யொட்டி ராமநாதசுவாமி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து திதி, தர்ப்பணம் கொடுத்து சுவாமி தரிசனம் செய்யக்கூடும் என்பதால் பக்தர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பணியானது விருவிருப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் போன்ற நூல்களில் அமாவாசையின் சிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. மறைந்த முன்னோர்களுக்கு அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதால் முக்தி கிட்டும் என்றும், அவர்களின் பரிபூரண ஆசிர்வாதம் சந்ததியினருக்கு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக அமாவாசையன்று புண்ணிய நதிகள், கடல் போன்ற நீர் நிலைகளில் நீராடி திதி கொடுப்பார்கள். குல தெய்வ ஆலயங்களில் வழிபாடு செய்து இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வார்கள். மறைந்த தாய், தந்தையர் படங்களுக்கு வீட்டில் மாலை அணிவித்து அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை தலை வாழை இலையில் படையலிட்டு வணங்குவார்கள்.
வடஇந்தியாவில் காசி, கயா, பத்ரிநாத், அலகாபாத் திரிவேணி சங்கமம் மற்றும் கேரளாவில் ஐவர் மடம் தர்ப்பணம் அளிப்பதற்கு பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் புனித தலங்களான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமக தீர்த்தகுளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு, கன்னியாகுமரி ஆகிய தலங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும் தலங்களில் முக்கியமானவை.
உலக பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்கும் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவிலில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து, கோவிலில் இருக்கும் 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் தங்களுடைய முன்னோர்களுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் வைத்து திதி, தர்ப்பணம் கொடுப்பது ஜதீகமாக உள்ளது.
பிப்ரவரி 9ஆம் தேதி அன்று தை அமாவாசை கடைபிடிக்கப்படுவதால் அந்நாளில் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து சுவாமி வழிபாடு செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியானது கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெறத்தொடங்கி உள்ளது.
முதற்கட்டமாக கிழக்கு கோபுர வாசல் பகுதியில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிதவிக்காமல் இருக்க மூங்கில் கம்புகள் வைத்து வரிசைகள் அமைக்கப்பட்டு, அதிக கூட்டம் இருக்கும் என்பதால் நீண்டநேரம் வரிசையில் நின்று செல்வதற்கு வசதியாக தற்காலிக நிழற்குடை அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் பிப் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். பகல் 11 மணிக்கு மேல் ராமர் தங்க கருட வாகனத்திலும், ராமநாதசுவாமி - பர்வதவர்த்தினி அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்தக் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும்.
தை அமாவசை நாளில் அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்து இருக்கும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெரிசலை தடுக்கும் வகையில் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications