தைப்பூசம் திருவிழா..முருகன் ஆலயங்களில் குவியும் பக்தர்கள்..எங்கும் எதிரொலிக்கும் அரோகரா முழக்கம்
முருகன் ஆலயங்களில் தைப்பூசம் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
சென்னை: கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா...வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் முழக்கம் முருகன் ஆலயங்களில் எதிரொலிக்க தைப்பூசம் திருவிழா தமிழ்கடவுள் முருகனுக்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. காவடிகள் சுமந்து பாதையாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
தமிழ்கடவுள் முருகனுக்கு கார்த்திகை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகிய விழாக்கள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். தை மாதத்தில் பவுர்ணமியும் பூச நட்சத்திரமும் இணைந்த நாள் தைப்பூச திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த வாரம் முருகன் ஆலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முருகப் பெருமானின் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜனவரி 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தந்தப் பல்லக்கு, தங்க மயில் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் வீதி உலா வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக காலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தோளுக்கினியானில் சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, காலை 11 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு விநாயகர் மற்றும் வீரபாகு சுவாமி தேர்கள் முன் செல்ல வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரை 'அரோகரோ' முழக்கத்துடன் நான்கு ரத வீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று நடைபெறுகிறது. சுப்பிரமணிசாமியின் வேலுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. மேள தாளம் முழங்க கடலுக்கு கொண்டு வரப்பட்ட முருகப்பெருமானின் வேலுக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது.
தைப்பூசத்தன்று சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். சாலையில் நடந்து வரும் பக்தர்கள் எப்போதும் வலது புறமாக நடந்து செல்ல வேண்டும். மேலும் கோயிலுக்குள் பக்தர்கள் சாதி ரீதியான அடையாளங்கள் அச்சிடப்பட்ட உடைகளை அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து சர்ப்பக் காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவுகளை மீறினால் அந்த நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் சுமார் 600 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையம் என்ற பகுதி அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில் அந்த பகுதி மக்கள் மத்தியில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. சிவன் பார்வதி திருமணம் இமயமலையில் நடந்த போது அந்த திருமணத்திற்கு காண்பதற்கு முனிவர்கல், தேவர்கள் குவிந்தனர். இதனால் வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது
இதனை அடுத்து சமநிலையை அடைய அகத்தியர் தென்பகுதிக்கு வந்தார். அந்த இடம்தான் தோரணமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு வருடமும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை, மருதமலை, வயலூர், எட்டுக்குடி முருகன் ஆலயங்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
வெளிநாடுகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் தைப்பூசம் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் அலகு குத்தியும் காவடிகள் சுமந்து வந்தும் முருகப்பெருமானை வழிபட்டனர்.












Click it and Unblock the Notifications