அமாவாசையன்று திருச்செந்தூரில் அரங்கேறிய அதிசயம்.. கடலில் என்ன பச்சை பச்சையாய்! முருகன் திருவிளையாடல்
தூத்துக்குடி: நேற்று அமாவாசை கடைபிடிக்கப்பட்ட நிலையில், புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில், அமாவாசை அன்று திருச்செந்தூர் கடல் சுமார் 60 அடி வரை உள்வாங்கி காணப்பட்டது. உள்வாங்கிய பகுதியில் தென்பட்ட பச்சை படிந்த பாறைகள் மீது சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுத்ததோடு, அந்த பாறைகளை கடந்து சென்று ஆபத்தை உணராமல் குளித்தனர்.
தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானுக்கு தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீடுகள் உள்ளது. இந்த கோவில்கள் மலைமேல் அமைந்துள்ள நிலையில், கடலோரம் உள்ளது திருச்செந்தூர் கோவில் மட்டுமே.
திருச்சீரலைவாய் என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட திருசெந்தூரில் முருகப் பெருமான் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியாய் காட்சி தருகிறார். இந்த கோவிலில் முருகனை வழிபடுவதன் மூலம், திருமண தடை நீங்கும், தொழில் அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை.

மேலும், முருகனுக்கு உகந்த நாட்களில் விரதமிருந்து திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசித்து விட்டு மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யும் சிறப்பு வழக்கமும் இந்த தலத்தின் தனிச் சிறப்பு. கடந்த பல ஆண்டுகளாகவே திருசெந்தூர் முருகப் பெருமானின் புகழ் பரவ பரவ, கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தலையா? கடல் அலையா என தெரியாத அளவுக்கு மக்கள் வெள்ளம் திருச்செந்தூர் நோக்கி அணி அணியாக செல்வார்கள்.
அதிலும், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முருகனுக்கு உகந்த நாட்களோடு சூரசம்காரத்தின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசிக்க வருவர். அது மட்டுமல்ல சுப முகூர்த்த தினங்களில் நூற்றுக்கணக்கான திருமணங்களும் இங்கு நடப்பது வழக்கம். இந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் அமாவாசை பௌர்ணமி தினங்களில் கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம். அந்த வகையில், கோவில் முன்புள்ள கடற்கரையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை கடல் அவ்வப்போது உள்வாங்கி காணப்படும்.

ஆனால் கடந்த 6 மாத காலமாக கடலில் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் கடலில் சுமார் 50 அடிக்கு கடல் அரிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கோவில் முன்புள்ள கடற்கரையில் பக்தர்கள் நீராட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கடல் அரிப்புகள் சீராகி வருகிறது. இந்நிலையில், 6 மாத காலத்திற்கு பிறகு கடந்த மாதம் கடல் உள்வாங்கியது.
இந்த நிலையில் நேற்று அமாவாசை தினம் என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் திடீரென உள் வாங்கி காணப்பட்டது. இதனால் கோவில் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடற்கரையில் இருந்து கடலுக்குள் 60 அடி உள்வாங்கி காணப்பட்டது. கடல் உள்வாங்கிய காரணத்தினால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிகின்றன. அதன்மேல் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் ஆபத்தை உணராமல் நீராடியும் புகைப்படம் எடுத்தனர்.












Click it and Unblock the Notifications