வெள்ளையாய் மாறிய யானை தெய்வானை! ஆச்சர்யமாய் பார்த்த திருச்செந்தூர் முருக பக்தர்கள்! இதுதான் விஷயம்!
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு வெள்ளை யானை வீதி உலா வந்தது. விடுமுறையை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் குழந்தைகளுடன் வெள்ளை யானையை கண்டு வியந்தனர்.
அறுபடை வீடுகளில், இரண்டாம் படைவீடாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் போற்றப்படுகிறது. மற்ற இடங்களில் குன்றின் மேல் உள்ள கோவில்களில் குடிகொண்டிருக்கும் எம்பெருமான் முருகன் திருச்செந்தூரில் கடலோரத்தில் அரசாங்கம் புரிகிறார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகனை வழிபடுவதன் மூலம், திருமண தடை நீங்கும், தொழில் அபிவிருத்தி அடையும் என்பது பக்தர்களின் நீண்ட கால நம்பிக்கை. இதுமட்டுமல்லாமல் தொழில் அபிவிருத்தி, எதிரிகள் ஒழிய விஸ்வரூப தரிசனத்தில் முருகனை தரிசிப்பது மிகச் சிறப்பானதாகும்.
இந்த கோவிலில் ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். இதை நினைவுகூரும் வகையில், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து மாலை கோவில் யானை தெய்வானையின் உடல் முழுவதும் அரிசி மாவு திருநீறு பூசப்பட்டு யானை வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது. இதைத் தொடர்ந்து வெள்ளை நிற யானை தங்கசப்பரத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்திரமூர்த்தி நாயனாரும் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து 108 மகாதேவர் சன்னதியில் வெள்ளை நிற யானை முன்பு சேரமாள்பெருமானும், மாணிக்கவாசகரும் எழுந்தருளி காட்சி கொடுத்தனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். அவர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளுடன் ஆர்வத்தோடு இந்த வெள்ளை யானை உலா வருவதை பக்தி பரவசத்துடன் பார்த்து ரசித்தனர். பின்னர் கோவிலிலிருந்து தெய்வானை யானை வெள்ளை நிறத்தில் மேளதாளங்களுடன் புறப்பட்டு தங்க சப்பரத்தில் நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளி உள்மாட வீதி மற்றும் வெளிமாட வீதி என எட்டு ரதவீதிகளையும் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தது.
அப்போது பொதுமக்கள் வெள்ளை யானையை வணங்கி நின்றனர். அப்போது வெள்ளை யானையாக வலம் வந்த தெய்வானை யானைக்கு பக்தர்கள் பழங்கள் கொடுத்து ஆசி பெற்றனர். தொடர்ந்து வெள்ளை நிறம் பூசிய தெய்வானை யானையை மீண்டும் பழைய கருப்பு நிறத்துக்கு மாற்றுவதற்காக அதனை குளிக்க வைப்பதற்காக சரவணப் பொய்கைக்கு அழைத்து வரப்பட்டது.
ஐந்தரை அடி ஆழம் கொண்ட சரவண பொய்கை நீச்சல் குளத்தில் இறங்கியது. தொடர்ந்து நீச்சல் குளத்தில் இறங்கிய யானை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தது. தன்னுடைய தும்பிக்கை மூலம் தண்ணீரை பீச்சியடித்து உடலை குளிர வைத்ததோடு மட்டுமல்லாமல் மேல ஒட்டியிருந்த திருநீற்றை அகற்றியது. அதைத் தொடர்ந்து ஷவர் உள்ள மேடையில் காலை வைத்து விளையாடி மகிழ்ந்ததோடு, தனது பாகனுடன் கொஞ்சி விளையாடியது.












Click it and Unblock the Notifications