திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போறீங்களா?.. ஆகஸ்ட் மாதம் ஆர்ஜித சேவை, அங்கப்பிரதட்சண டிக்கெட் ரிலீஸ்
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை ஆகிய ஆர்ஜித சேவைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. மே 20 ஆம் தேதி வரை தேவாஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்துக்கான அங்கபிரதட்சண டிக்கெட்டுகளின் கோட்டா வரும் மே 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
திருமலைக்கு செல்லும் ஏழுமலையான் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகள் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. சிறப்பு தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும். இலவச தரிசனத்திற்கு செல்ல ஒரு நாள் முழுவதும் வரிசையில் நிற்க வேண்டும். கோடை விடுமுறை காலம் என்பதால் தினசரியும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய திருமலைக்கு வருகின்றனர். திங்கட்கிழமையன்று 70,366 பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பக்தர்களின் காணிக்கையாக ரூ.4.32 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள், 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள், தங்கும் அறைகள் ஆகியவற்றை தேவஸ்தான நிர்வாகம் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு நாளில் ஆன்லைனின் வெளியிட்டு வருகிறது. இதனால் எந்த நாளில், எப்போது டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்ற குழப்பம் பக்தர்களிடையே ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இனிமேல் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களில் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது பற்றி தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு மாதமும் 18ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அபிஷேகம் ஆகிய டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு அவற்றை முன் பதிவு செய்யும் பக்தர்களுக்கு டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். குழுக்கள் மூலம் டிக்கெட்டைகளை பெற்ற பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை உரிய கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும் 21ஆம் தேதி கல்யாண உற்சவம், டோலோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் 23ஆம் தேதி மூத்த குடிமக்கள், ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான டிக்கெட்டுகளும் வெளியிடப்படும்.
ஒவ்வொரு மாதமும் 23ஆம் தேதி அன்று ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு உரிய ஸ்ரீவாணி விஐபி தரிசன டிக்கெட்டுகள், அங்க பிரதட்சன டோக்கன்கள் ஆகியவையும், 24ஆம் தேதி அன்று 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளும், 25ஆம் தேதி அன்று தங்குவதற்கான அறைகளும் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் சுப்ரபாதம், தேமாலை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கு இன்று மே18ஆம் தேதி காலை 10 மணி முதல் மே 20 ஆம் தேதி வரை தேவாஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்துக்கான அங்கபிரதட்சண டிக்கெட்டுகளின் கோட்டா வரும் மே 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இதை பக்தர்கள் இலவசமாக தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து, அங்கபிரதட்சண சேவையில் பங்கு கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications