Tirumala Tirupati Reels ban: திருப்பதிக்கு போனோமா சாமி கும்பிட்டோமானு இருக்கணும்! ரீல்ஸ் எடுக்க தடை
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி ரீல்ஸ் எடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை பாயும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே திருமலை திருப்பதியில் கோயில் முன்பு ரீல்ஸ் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டதால் பரபரப்பு எழுந்தது.

திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். அதிலும் முக்கிய நாட்கள், விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். ஆன்மீக தலமான திருமலையில் பக்தர்கள் அனைவரும் பயபக்தியுடன் வந்து ஏழுமலையானை தரிசித்துவிட்டு செல்கிறார்கள்.
அப்படியிருக்கும் போது சிலர் ரீல்ஸ் எடுப்பதற்காகவும் குறும்படங்களை எடுப்பதற்காகவும் திருமலைக்கு வந்து கோயில் முன்பு ரீல்ஸ் எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிடுகிறார்கள். கோயில் கோபுரம் முன்பு டான்ஸ் ஆடி ரீல்ஸ் போடுவது உள்ளிட்டவைகளை பார்க்கும் போது பக்தர்களின் மனம் புண்படுகிறது.
இதை தேவஸ்தானத்திடம் பலர் முறையிட்டனர். இந்த நிலையில் திருமலையில் ரீல்ஸ் எடுப்பதற்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி யாராவது ரீல்ஸ் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேவஸ்தானம் அறிவித்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சில தனிநபர்கள், திருமலை கோயில் வளாகத்தில் குறும்புத்தனமான வீடியோக்களை எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றியுள்லனர். இதுபோன்ற நடவடிக்கைகள் பக்தர்களின் உணர்வுளை புண்படுத்துவதுடன் கோவிலின் புனிதத்தையும் மீறுவதாகும்.
எனவே, 'ரீல்ஸ்'களை பக்தர்கள் கோயில் வளாகத்தில் எடுக்கக் கூடாது. ஆட்சேபனைக்குரிய பதிவுகளை வீடியோவாக எடுப்பவர்கள் மீது போலீசார் மற்றும் கோவில் பணியாளர்கள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுப்பர். எனவே, கோவில் வளாகத்தில் ஆன்மிக சூழலை பேணவும், கோவிலின் புனிதத்தை பாதுகாக்கவும் பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் திருப்பதி அலிபிரி மலையடிவாரத்தில் சோதனை சாவடி அருகே இளம்பெண் ஒருவர் காரில் வந்தார். அவர் அங்கே ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு, புஷ்பா பாடலுக்கு நடனம் ஆடினார். மேலும் அந்த ரீல்ஸை செல்போனில் பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த செயல் ஆலயத்தின் மரியாதைக்கு மாறானது என கண்டனம் தெரிவித்ததுடன், திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அந்த பெண்ணை அடையாளம் கண்டு விசாரித்த நிலையில் அந்த பெண் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டார். இது தொடர்கதையாகி வருவதால் தேவஸ்தானம் இத்தகைய கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications