திருப்பதி பிரம்மோற்சவம்.. ஏழுமலையானுக்கு அணிவிக்க திருமலைக்கு புறப்பட்ட ஆண்டாள் சூடிய மாலை
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று காலையில் சிம்ம வாகனத்தில் நரசிம்மராக வலம் வந்தார் மலையப்பசுவாமி. வெள்ளிக்கிழமை கருட வாகனத்தில் உலா வரும் மலையப்பசுவாமிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருமலைக்கு புறப்பட்டுள்ளது.
திருமலையில் அருள்பாலிக்கும் சீனிவாச பெருமாளுக்காக அந்த பிரம்மனே எடுத்த விழா பிரம்மோற்சவம். பல நூறு ஆண்டுகாலமாக பிரம்மோற்சவ விழா திருமலையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பிரம்மோற்சவம் திங்கட்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினசரியும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலிக்கிறார் மலையப்பசுவாமி. மலையப்ப சவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வீதி உலா வரும் போது அவருக்கு முன்னால் பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடியபடி சென்றனர். கோலாட்டம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் சாமி வீதி உலாவுக்கு முன்னால் அணிவகுத்து சென்றன.
நேற்றிரவு அன்னவாகனம் எனப்படும் ஹம்ச வாகனத்தில் உலா வந்தால் மலையப்பசுவாமி. பறவைகளில் வலிமைக்குக் கருடனும், சுகத்திற்குக் கிளியும் அடையாளமாக இருப்பதைப் போலவே அறிவுக்கும் ஞானத்திற்கும் குறியீடாக இருப்பது அன்னமாகும். அறிவுக் கடவுளான பிரம்மதேவன் அன்ன வாகனத்தில் பவனி வருகிறார். அன்பர்கள் தெய்வங்கள் தமக்கு அறிவையும், தூய்மையையும் ஆராய்ந்து தெளியும் திறத்தையும் அருள்வதைக் குறிக்கும் வகையில் தாம் வணங்கும் தெய்வங்களை அன்னவாகனத்தில் அமர்த்தி பவனி வரச் செய்கின்றனர்.
பாலிலிருக்கும் நீரைப் பிரித்து பாலை மட்டுமே அருந்தும் அரிய குணம் கொண்டது அன்னப் பறவை. அதுபோல உயர்ந்தவர்கள், உலகில் மாயைகளை ஒதுக்கி உண்மையான மெய்ப்பொருளான கடவுளை நாடுவர். ஹம்ஸ என்றால் மேலானது என்று பொருள். எனவேதான் மகிமை மிக்க மகான்களை பரமஹம்ஸர் என்று போற்றுகிறோம். அத்தகைய மகான்களின் மனதில் தான் வாழ்கிறேன் என்று சொல்லும் வகையில் அன்ன வாகனம் எனப்படும் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார் மலையப்பசுவாமி.
இன்று காலையில் உற்சவரான மலையப்ப சுவாமி, யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்து அருள் பாலித்தார். இன்று இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் வலம் வருகிறார் மலையப்பசுவாமி. நாளைய தினம் கேட்ட வரம் அருளும் கற்பக விருட்ச வாகனத்திலும் இரவு சர்வ பூபால வாகனத்திலும் மலையப்பசுவாமி எழுந்தருளி அருள்பாலிப்பார்.
ஐந்தாம் நாளான வெள்ளிக்கிழமை காலையில் மோகினி அலங்காரத்தில் வலம் வருவார் மலையப்பசுவாமி. மாலையில் கருட வாகனத்தில் எழுந்தருளுவார். இதனையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மாலையும், கிளியும் நாளைய தினம் திருமலைக்கு வர உள்ளன.
ஆண்டாள் சூடிய மாலை கொண்டு செல்லும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று நடைபெற்றது. ஆண்டாளுக்கு பிரம்மாண்ட மாலை சூடப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் ஆண்டாள் சூடிய மாலை, கிளி மற்றும் வஸ்திரம் ஆகியவை மேள தாளங்கள் முழங்க மாட வீதிகள் வழியாக திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் திருப்பதிக்கும் இடையே பட்டு வஸ்திரங்கள், மாலை, மங்கலப்பொருட்கள் பரிமாறிக்கொள்வது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. ஆடிப்பூரம் நாளில் ஆண்டாள் பிறந்தநாளுக்கு பட்டு வஸ்திரம் பரிசளிப்பார் திருமலை ஏழுமலையான். இந்த ஆண்டும் பிரம்மோற்சவத்திற்கு ஆண்டாள் சூடிக்களைந்த மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாலையும், கிளி உள்ளிட்ட மங்கல பொருட்களும் நாளைய தினம் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். நாளை மறுநாள் மலையப்பசுவாமிக்கு அணிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications