இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை! பெருமாளுக்கு மாவிளக்கு போட்டு படையலிடுவது எப்படி?
சென்னை: அனைத்து பெருமாள் கோயில்களிலும் இன்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் நன்மை கிடைக்கும். இன்றைய தினம் கோயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி. இந்த மாதம் தற்போது தொடங்கியுள்ள நிலையில் பெருமாள் கோயில்கள் திருவிழா கோலம் பூண்டுள்ளன. இன்று முதல் சனிக்கிழமை என்பதால் நேற்றைய தினமே பெருமாள் கோயில்களில் அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வழிகள் ஏற்படுத்தப்பட்டன.

குறிப்பாக சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், முகப்பேர் வரதராஜ பெருமாள் கோயில், சந்தான சீனிவாச பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அலங்கார மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பெருமாளை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த முறை புரட்டாசி முதல் சனிக்கிழமை, செப்டம்பர் 21 ஆம் தேதியான இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி பெருமாளுக்கு பூஜை செய்து வழிபட வேண்டும். திருப்பதி வெங்கடாஜலபதியை சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் பாக்கியம் ஆகும்.
முடிந்தால் திருப்பதிக்கே சென்று பெருமாளை தரிசிக்கலாம். இல்லாவிட்டாலும் வீட்டில் அவருடைய படத்தை வைத்து பூஜை செய்யலாம். ஆடம்பர பூஜைகளை விட ஏழைகளின் பூஜைகளைதான் பெருமாள் ஏற்பார். கோவிந்தா நாமம் சொல்லி பூஜை செய்ய வேண்டும். குறிப்பாக துளசியால் பெருமாளை அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பானது.
சனிக்கிழமை அன்று மாவிளக்கு ஏற்றி பெருமாளை வழிபட வேண்டும். அப்படி செய்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். மகிழ்ச்சியும் அதிகரிக்கும். எப்போதும் மாவிளக்கை ஒற்றை விளக்காக ஏற்றக் கூடாது. இரு தீபங்கள், 4 தீபங்கள் என ஏற்றுவது நல்லது. மாவிளக்கை பூஜைக்கு பிறகு நாம் அதை உண்பதால் சுத்தமான பசு நெய்யை பயன்படுத்தி தீபம் ஏற்றலாம்.
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு இன்றைய தினம் பெருமாள் கோயில்களில் அதிகாலை 4 மணி முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கோவிந்தா, வாசுதேவா என முழங்கியபடி பெருமாளை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பெருமாளுக்கு துளசி மாலையை வாங்கிச் சென்றனர்.
வீடுகளில் முதல் சனிக்கிழமை என்பதால் இன்றைய தினம் அவரவர் பழக்கவழக்கத்திற்கேற்ப 7 அல்லது 9 வகையான காய்கறிகளை சமைத்து , சாதம் , சாம்பார், தயிர், வடை பாயாசம், பழங்கள், நெய் ஆகியவற்றை படையலிட்டு நெய்வேத்தியம் செய்ததும் அவற்றை பிசைந்து உண்ண வேண்டும்.
பெருமாளின் பிரசாதத்தை வீணடிக்கக் கூடாது. பெருமாளுக்கு படைத்த தலைவாழை இலையை குப்பையில் போடாமல் செடியில் வைக்க வேண்டும். இன்றைய தினம் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் சொன்னால் விசேஷமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications