இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோபுரம்.. நடக்காத பூஜைகள்.. நாட்டிற்கு ஆபத்தா?.. அச்சத்தில் பக்தர்கள்
திருச்சி: ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் சுவாமி கோவிலில் கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் சுவர்கள் இடிந்து விழுந்ததால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமோ என பக்தர்களிடையே அச்சம் எழுந்துள்ளது. பரிகார பூஜைகள் செய்யப்படாமல் இருப்பதால் நாட்டிற்கு ஏதேனும் பாதிப்பு வருமோ என்று பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் பெருமைக்குடையது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் முதல்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். பிரம்மாண்டமான இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. 21 கோபுரங்களையும் கொண்டது இந்த ஆலயம். சுக்கிரன் தலமாக போற்றப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும் மேற்கூரை பூச்சுகளும் அதனை தாங்கி நிற்கும் தூண்களும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாலும், பராமரிப்பு பணிகளுக்கான முதற்கட்டமாக சாரம் அமைக்கும் பணிகள் துவங்கியிருப்பதால் அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் கோபுரத்தின் இரண்டாம் நிலையில் பாதிக்கப்பட்டிருந்த பகுதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலமுறை முறையிட்டும் பராமரிப்பு செய்யாமல் விட்டது ஏன் என்றும் பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனிடையே ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் இடிந்து விழுந்த பகுதியில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, "ஒட்டுமொத்தமாக இந்த ஸ்ரீரங்கம் கோயிலில் இருக்கின்ற 21 கோபுரங்களையும் என்ஐடி ஆய்வு மேற்கொள்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இங்குள்ள கோபுரத்தை என்ஐடி ஆய்வு செய்து, அதன் அறிக்கையை ஓரிரு நாட்களில் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இடிந்த விழுந்த இந்த கோபுரம் மட்டுமன்றி, இக்கோயிலில் உள்ள 21 கோபுரங்களையும், ஆய்வு செய்து கோபுரங்களின் ஸ்திரத்தன்மை குறித்த அறிக்கையையும் கேட்டுள்ளோம். அந்த அறிக்கை கிடைத்தவுடன், உடனடியாக பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். 2015ஆம் ஆண்டுதான் ரூ.34 லட்சம் செலவில் இடிந்த விழுந்த கோபுரத்தின் பழுதுபார்க்கும் பணிகள் நடந்திருக்கிறது. தற்போதுகூட, இந்த கோபுரம் சிதிலமடைந்திருப்பதாக ஊடகத்தின் வாயிலாக வந்த செய்தியை அறிந்து ரூ.94 லட்சம் செலவில், மராமத்துப் பணிகளுக்காக ஒரு திட்ட மதிப்பு தயாரிக்கப்பட்டு, அதற்கு ஆணையரிடத்தில் ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் 3 பிரகாரங்களிலும் இருக்கின்ற மரங்கள் சிதிலமடைந்திருக்கின்றன. அவை அனைத்தையும் மாற்றும் பணிகளையும் செய்ய வேண்டி இருப்பதால், இந்தப் பணிகளை முடிக்க ஓராண்டுக்கு மேலாகும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் சேகர்பாபு கூறினார்.
இதனிடையே கோவிலில் ஏதாவது தீ விபத்து நிகழ்ந்தாலோ, கொடிமரம் சேதமடைந்தாலோ, கோபுரம் இடிந்தாலே ஆலயத்தில் பரிகார பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். ஆனால் ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் சிதிலமடைந்து இரண்டாவது நிலை சுவர் இடிந்து விழுந்து சில நாட்கள் ஆகியும் பரிகார பூஜைகள் செய்யாமல் உள்ளதாக பக்தர்கள் புகார் கூறியுள்ளனர். இதனால் நாட்டிற்கு எதுவும் ஆபத்து வருமோ என்றும் பக்தர்கள் சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications