வடக்கம்பட்டி முனியாண்டிக்கு 2500 கிலோ பிரியாணி படையல்..அண்டா அண்டாவாக பிரசாதம்
நாடு முழுவதும் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் வடக்கம்பட்டி முனியாண்டி சாமிக்கு பிரியாணி படையல் போட்டு வழிபட்டனர்.
மதுரை: திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி முனியாண்டி கோயிலில் நடைபெற்ற 88வது ஆண்டு பிரியாணி திருவிழாவில், 2500 கிலோ அரிசியில் பிரியாணி தயார் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் வசித்தவர்களும் குடும்பத்தோடு வந்து முனியாண்டி சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனர்.

இன்றைக்கு எத்தனையோ கடைகளில் பிரியாணி விற்பனை செய்யப்பட்டாலும் முன்பெல்லாம் பிரியாணி என்றாலே முனியாண்டி விலாஸ் ஹோட்டல் பிரியாணிதான். சீரக சம்பா அரிசியில் சுவையாக செய்யப்பட்ட பிரியாணிக்கு தனி சுவை பிரியர்கள் இருந்தனர். முனியாண்டி சுவாமியை குல தெய்வமாக வழிபடுபவர்கள் ஆண்டுதோறும் முனியாண்டி சாமிக்கு கிடா வெட்டி பிரியாணி படையல் போட்டு வழிபடுகின்றனர்.
அசைவ உணவுக்கு புகழ் பெற்ற முடியாண்டி விலாஸ் ஹோட்டல்களை நடத்துபவர்கள் மதுரை வடக்கம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள். தமிழகம் எங்கும் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களின் உரிமையாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டி, வடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் ஆண்டுதோறும் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.

வடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களும் மாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்களும் நடத்தி வரும் பிரியாணி திருவிழா வெகுவிமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டுக்கான திருவிழா மாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் அசைவ உணவக உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஒன்று கூடினர். இதனை தொடர்ந்து சுவாமிக்கு ஆயிரக்கணக்கானோர் பால்குடம் எடுத்து பாலாபிஷேகம் நடைபெற்றது.

இவ்விழாவின் பக்தர்களுக்கு பிரசாதமாக பிரியாணி வழங்கப்பட்டது. இந்த பிரசாத பிரியாணி உண்டால் கொடி நோய்களும் நீங்கிவிடும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த விழாவில் சுற்றுப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
88வது ஆண்டாக நடந்த இந்த திருவிழாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, சிங்கப்பூர், துபாயில் முடியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள், குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர். இந்த விழாவை முன்னிட்டு, கையில் காப்புக்கட்டி ஒரு வாரம் விரதம் இருந்த பக்தர்கள், பால் குடம் எடுத்து முடியாண்டி சாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

பெண் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களிலில் இருந்து எடுத்து வந்த தேங்காய், பழம், பூதட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலை மாலையை கோவிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர்.
மலை போல குவித்து வைக்கப்பட்ட பிரியாணி அரிசி மூட்டைகள், கோவிலுக்கு காணிக்கையாக அளிக்கப்பட்டிருந்த 200 ஆடுகள் மற்றும் 800க்கும் அதிகமான கோழிகளை கொண்டு தங்களுக்கே உரிய பக்குவத்தில் பிரியாணி சமைத்து சாமிக்கு படைத்தனர். 2500 கிலோ பிரியாணி அரிசியில் தயார் செய்யப்பட்ட பிரியாணி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த பிரியாணி திருவிழாவில் 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.














Click it and Unblock the Notifications