ஶ்ரீரங்கம்: ஜன.10-ல் வைகுண்ட ஏகாதசி- இன்று திருநெடுந்தாண்டகம் நிகழ்வு-நாளை முதல் பகல் பத்து உற்சவம்!
திருச்சி: ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி (அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில்) கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள் திருநெந்தாண்டகம் எனும் நிகழ்வுடன் இன்று தொடங்கியது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் திருமொழி திருநாள் நிகழ்வுடன் நாளை முதல் 21 நாட்கள் நடைபெறும். ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி- சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு ஜனவரி 10-ந் தேதி நடைபெறும்.
ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில்- பூலோக வைகுண்டம் என பக்தர்கள் போற்றப்படுகிற, வணங்கப்படுகிற திருத்தலம். ஶ்ரீரங்கம் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் வைகுண்ட ஏகாதசி என்கிற திருஅத்யயன உற்சவம்தான் சிறப்புக்குரியதாகும்.

ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது பகல் பத்து-ராப் பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று முதல் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் தொடங்கியது. திருநெடுந்தாண்டகம் என்ற நிகழ்ச்சியுடன் இன்று வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது.
இதனையடுத்து பகல் பத்து நிகழ்வுகள் நாளை, திருமொழி திருநாள் நிகழ்வுடன் நாளை தொடங்கும். நாளை செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுவார். முதலில் காலை 8.30 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைவார் நம்பெருமாள். இதனையடுத்து காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை திவ்யபிரந்த பாடல்களை அரையர்கள் பாடுவர். அர்ஜூன மண்டபத்தில் இருந்து இரவு 7 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். நாளை முத்தங்கி சேவையில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தர இருக்கிறார்.
மொத்தம் 21 நாட்கள் பகல் பத்து உற்சவம் நடைபெறும். பகல் பத்தின் 10-வது நாள் உற்சவமானது ஜனவரி 9-ந் தேதி நடைபெறும். அன்றைய தினம் மோகினி அலங்காரம் அல்லது நாச்சியார் திருக்கோலத்தில் நம்பெருமாள் எழுந்து அருள் பாலிப்பார்.
பகல் பத்தைத் தொடர்ந்து ராப்பத்து உற்சவம் தொடங்கும். இதன் முதல்நாள்தான் வைகுண்ட ஏகாதசி. அன்றைய தினம் அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். அன்று ரத்தின அங்கியுடன் பக்தர்களுக்கு நம்பெருமாள் அருள் பாலிப்பார்.
இந்த வைகுண்ட ஏகாதசி- சொர்க்கவாசல் திறப்பு நாளில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் பங்கேற்பர். இதற்கான ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications