ஓயாத சண்டை..குருஷேத்திர போர்களமாக மாறும் குடும்பங்கள்..சண்டை தீர பெட்ரூம் வாஸ்து டிப்ஸ்
சென்னை: ஆசை ஆசையாக புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்து குடி போனால் நிம்மதியே இல்லை என்று பலர் புலம்புவார்கள். குடும்பமே குருஷேத்திர போர்களமாக இருக்கிறது. தினம் தினம் சண்டைதான் ஏன்தான் வீட்டிற்கு போகிறோமோ என்று பலரும் விரக்தியில் பேசுவார்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் வந்தாலே வசிக்கும் வீட்டில் குறிப்பாக படுக்கை அறையில் வாஸ்து குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம். பெட்ரூமில் வாஸ்து குறைபாடு இருந்தால் அதை எப்படி சரி செய்வது என்று பெங் சூயி விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.
கணவன் மனைவி இடையே நெருக்கமும் அன்பும் அதிகரிக்க 10 பொருத்தமும் சரியாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். மண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நீடித்திருக்க நம் வீட்டில் உள்ள படுக்கை அறையில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சரி செய்ய வேண்டும்.

தென்மேற்கு எனப்படும் கன்னி மூலை பகுதியில் மாஸ்டர் பெட்ரூம் அமைப்பது சிறப்பு. தாம்பத்ய உறவுக்கு ஏற்ற இடம் தென்மேற்கு பகுதிதான். தென்மேற்கு மூலையில் உள்ள படுக்கை அறையில் வாஸ்து தோஷங்கள் இருந்தால் தம்பதியர் இடையே ஒற்றுமை ஏற்படாது. வாஸ்து குறைபாட்டினை நீக்குவதற்கு பெங் சூயி கூறியுள்ள பரிகாரங்களைப் பார்க்கலாம்.
கடலில் கிடைக்கும் சங்குகள், கற்கள், கிரிஸ்டல்கள் குவார்ட்ஸ் கற்கள் வாங்கி அதனை படுக்கையின் கீழே சேகரித்து வைக்கலாம். கண்ணாடி உருண்டைகளை பேப்பர் வெயிட் போல தென்மேற்கு மூலையில் பயன்படுத்தலாம். படுக்கை அறையில் உள்அலங்காரம் செய்யும் போது சிறிய சாண்ட்லியர் விளக்குகளை தொங்க விடலாம்.
பெட்ரூம் ஜன்னல் அருகில் சின்னச் சின்ன கண்ணாடி பந்துகளை மாட்டி வைக்க அதில் மாலை நேர சூரிய ஒளி பட்டு இந்த படுக்கை அறையில் பல வண்ணங்களை சிதறடிக்கும். அது தம்பதியர் இடையே காதல் உணர்வுகளை அதிகரிக்கும். படுக்கை அறையில் காதல் ஓவியங்களை மாட்டி வைக்கலாம் மயில் இறகினால் செய்த விசிறியை மாட்டி வைக்கலாம். அழகான மலர் கொத்துக்களை கொண்ட பூ ஜாடிகளை படுக்கை அறை மேஜையில் வைப்பதும் சிறப்பு.
படுக்கை அறையில் எந்த காரணம் கொண்டும் மிருகங்கள், கொடூர விலங்குகளின் படங்களை மாட்டி வைக்கக் கூடாது. வீட்டின் மத்தியில் சாண்ட்லியர் மாட்டி தொங்க விட்டாலும் தம்பதியர் இடையே மன ஒற்றுமையும் கருத்து ஒற்றுமையும் ஏற்படும்.

தென்மேற்கு மூலை எனப்படும் கன்னி மூலையில் வாஸ்து தோஷம் இருப்பின் சில தெய்வ வழிபாட்டின் வாயிலாக சரி செய்யலாம். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும். பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு. அந்த தீர்த்தத்தை கொண்டு வந்து வீடுகளில் தெளிக்கலாம்.
ராகுவுக்கு ராகு காலத்தில் மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம். திருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும். காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும். தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.












Click it and Unblock the Notifications