வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா 29ல் கொடியேற்றம்.. சுற்றுலா போறவங்களுக்கு சூப்பர் அப்டேட்
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் தேர்விழா வரும் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
உலகப் புகழ்பெற்ற சுற்றுலாதலங்களில் ஒன்றாக இருப்பது வேளாங்கண்ணி. அங்கு புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பெருவிழா நடத்தபடுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பெருவிழா வரும் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 8 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.

திருவிழா நாட்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை மக்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது. அதனால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க உள்ளனர். அதனால் குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வேளாங்கண்ணி கடற்கரையில் திருவிழா நாட்களான ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரைபாதுகாப்பு கருதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார். அதனால் இங்கு சுற்றுலா வரும் பயணிகள் ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு 2 நாட்கள் வேளாங்கண்ணி சுற்றுலாவை நடத்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு-ஒகேனக்கல், மைசூர்-பெங்களுர், குற்றாலம் மற்றும் மூணார் என மூன்று நாட்கள் செல்லும் சுற்றுலா பயண திட்டங்களும், சென்னை-மாமல்லபுரம், காஞ்சிபுரம்- மாமல்லபுரம், திருப்பதி, திருவண்ணாமலை, ஶ்ரீபுரம் தங்க கோவில், புதுச்சேரி, ஆடி அம்மன் சுற்றுலா என ஒரு நாள் சுற்றுலா பயண திட்டங்களும், எட்டு நாட்கள் பயணம் செய்யும் தமிழ்நாடு சுற்றுலா, கோவா-மந்த்ராலயம் சுற்றுலா பயண திட்டங்களும், 14 நாட்கள் பயணம் செய்யும் தென்னிந்திய சுற்றுலா பயண திட்டங்களும், யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பழமையான பண்பாட்டு சின்னங்களை பார்வையிடும் சுற்றுலா பயண திட்டம் என பல்வேறு வகையான சுற்றுலா பயண திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த பயண திட்டங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் இயங்கி வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகளில் தங்குவதற்கான அறை வசதியும், உணவு வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், வருடாந்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8 வரை கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் 2 நாட்கள் வேளாங்கண்ணி சுற்றுலாவை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 7 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா பயணத்திட்டத்தில் முதல் நாள் இரவு 10.00 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10.00 மணிக்கு பேருந்து சென்னை வந்தடைகிறது. இந்த சுற்றுலாவில் 3 வேளை உணவுடன் மற்றும் உணவு இல்லாமல் என இருவகையாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா செல்லும் அனைவருக்கும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும்.
வேளாங்கண்ணி சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண் 180042531111 மற்றும் தொலைபேசி எண்கள் 044-25333333, 044-25333444 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் விவரங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications