பூஜைக்கேத்த பூவிது... எந்தெந்த மலர்கள் எந்த கடவுளுக்கு ஏற்றவை? இந்த பூக்களை வீட்டில் வைப்பது நல்லதா?
சென்னை: இறைவனுக்கு பூஜை செய்யும்போது, மலர்களை கொண்டே அர்ச்சனை செய்யப்படுகிறது.. மலர்களை கொண்டே அலங்காரம் செய்யப்படுகிறது.. ஆனால், அனைத்து விதமான பூக்களையுமே பூஜைக்கு பயன்படுத்த கூடாது. சில மலர்களை கடவுள்களுக்கு வைத்து பூஜிக்ககூடாது என்பார்கள். அது என்னென்ன மலர்கள்? என்னென்ன பூக்கள் பூஜை செய்ய உகந்தது?
எப்போதுமே கைகளால் தொட்டு பறிக்கப்பட்ட பூக்களை கடவுளுக்கு அர்ப்பணிக்கக்கூடாது.. தானாக விழுந்த பூக்கள், அசுத்தமான இடங்களில் பூத்த மலர்கள், அசுத்தமான பைகளில் கொண்டுவரப்பட்ட பூக்களையும் பயன்படுத்தக்கூடாது. புழு கொண்ட, காய்ந்த, நுகர்ந்த, தரையில் விழுந்த மலர்களை அர்ச்சனைக்கு உபயோகிக்கக் கூடாது. சிவனுக்குத் தாழம்பூவிலும், விஷ்ணுவுக்கு அட்சதையாலும், லட்சுமிக்கு தும்பையாலும், சரஸ்வதிக்கு பவளமல்லியாலும் அர்ச்சனை செய்யக்கூடாது..

துண்டு துண்டு பூக்கள்
அதேபோல, வாடிப்போன பூக்கள், பழைய பூக்கள், பறித்த பிறகு மலர்ந்த பூக்கள், பூச்சிகள் கடித்த பூக்கள், பறவைகள் எச்சமிட்ட பூக்கள், நீரில் மூழ்கிய பூக்கள் போன்றவையும் பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது . அதேபோல கைகளாலேயே பூக்களை துண்டாக்கி சுவாமிக்கு செலுத்தக்கூடாது. எப்போதுமே சுத்தமான மலர்ந்த பூக்களை இறைவழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பூஜை செய்யப்பட்ட மலர்களை வைத்து மறுபடியும் அர்ச்சனை செய்யக்கூடாது.. வில்வம் துளசியை மட்டும் மீண்டும் உபயோகிக்கலாம்.
வீட்டில் சில பூக்களை வைப்பது அழகுக்காக என்பதையும் தாண்டி ஆன்மீக ரீதியான நன்மைகளும் அதில் அடங்கி உள்ளன. சில மலர்களின் நிறம், வாசனை போன்றைவை தெய்வத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. இத்தகைய மலர்களை வீட்டில் வைத்திருக்கும்போது செல்வம், மனநிம்மதி, வெற்றி போன்றவற்றை தரக்கூடியதாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
செண்பகமே செண்பகமே
அந்தவகையில், பவளமல்லி மலரை செலுத்தலாம்.. கிருஷ்ணரால் பூமிக்கு கொண்டு வரப்பட்ட இந்த மலர், திருமாலுக்கு ஏற்றது.. பகலில் பூக்காமல் இரவில் பூக்கக்கூடிய இந்த மலரை வைத்து, பூஜையறையில் இறைவனை வழிபடலாம். அதேபோல, ஆரஞ்சு நிறத்திலான செண்பக பூக்கள் சிவப்பெருமானுக்கு உரியதாகும். இதில், மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால், செல்வ வளம் பெருகும்..
மனோரஞ்சித மலர்களையும் வைத்து பூஜை செய்தால், வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். தேவர்களே, இறைவனை மனோரஞ்சித மலர்களால் தான் பூஜை செய்வார்களாம்.. இந்த பூவை கையில் வைத்து கொண்டு, வேறு ஏதாவது வாசனையை நினைத்தால், அந்த வாசனையை உங்களால் உணர முடியும்.. இந்த பூக்களை வியாபாரம் செய்யும் இடங்களில் வைத்திருப்பதால், நிதி நிலைமை சீராகும்.
இரவு நேர பூக்கள்
வீட்டில் எதிர்மறை ஆற்றல், தீய சக்திகளிடமிருந்து விலக வேண்டுமானால், பிரம்ம கமலம் மலர்களை வைத்து பூஜிக்கலாம்.. இந்த பூக்களை வீட்டில் வைப்பதால் அதிர்ஷ்டமும் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.
விஷ்ணு சம்பந்தப்பட்ட தெய்வங்களுக்கு மட்டும் துளசியால் பூஜை செய்யலாம். சிவன் சம்பந்தப்பட்ட ஈஸ்வரர்களுக்கு வில்வார்ச்சனை விசேஷம். தும்பை, வெள்ளெருக்கு, கொன்றை, ஊமத்தை கொண்டு அர்ச்சிக்கலாம். இரவு நேரத்தில், கடம்பம், ஊமத்தை, ஜாதி ஆகிய பூக்களை இரவில் மட்டுமே உபயோகிக்கலாம்.. பூஜைக்கு ஆகாத மலர்களை, இறை அலங்காரத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications