கேதுவை சமாளிக்க வரும் குரு.. மஞ்சள் நிற கயிற்றில் தாலி கட்டுவது ஏன்? கணக்கா மூன்று முடிச்சு ஏன்?
சென்னை: மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுகளை போடுவது ஏன் தெரியுமா?
திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள், வீட்டை கட்டி பார், கல்யாணத்தை செய்து பார் என்பார்கள். அந்த அளவுக்கு திருமணம் செய்வது என்பது சற்று ரிஸ்க்கான வேலைதான்.

இந்த பட்ஜெட்டில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்றெல்லாம் சரியாக கணக்கிட்டு செய்யவே முடியாது. நாம் போடும் பட்ஜெட்டுக்கு கூடவும் போகும் , குறையவும் இருக்கும்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலையில் திருமணத்திற்கென சில சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் நாம் பின்பற்ற வேண்டியது அவசியம். இது அவரவர் மதத்திற்கேற்ப, சமூகத்திற்கேற்ப பின்பற்றப்படுகிறது. இந்த சம்பிரதாயத்தில் முக்கியமானது மாங்கல்ய தாரணம்.
மங்களம் பொங்கும் திருமாங்கல்யத்தில் மூன்று முடிச்சு போடுவார்கள். இது ஏன் தெரியுமா? அது போல் எத்தனை வசதி இருந்தாலும் தாலி கட்டும் பழக்கம் கொண்டவர்கள், மஞ்சள் கயிற்றில்தான் தாலியை கட்டுவார்கள். மூன்று முடிச்சுக்குள் எத்தனையோ காரணங்கள் உள்ளன.
விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் ஆகிய 3 நிலைகளை இந்த 3 முடிச்சுகள் குறிக்கும். இந்த மூன்று நிலையிலும் ஒரு பெண் தெய்வீக உணர்வுடன் இருக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மை மிக்கவளாக திகழ வேண்டும். தெய்வ பக்தி, குடும்ப பெரியவர்களிடம் மதிப்பு, கணவரிடம் அன்பு ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.
மூன்று முடிச்சுக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது இறைவன், தேவர்கள் மற்றும் விண்ணவர்களின் சாட்சியாக போடுவது முதல் முடிச்சு. முன்னோர்களின் சாட்சியாக இரண்டாவது முடிச்சு. பெற்றோர்கள், திருமணத்திற்கு வருதை தந்தவர்களின் சாட்சியாக போடுவதுதான் மூன்றாவது முடிச்சு.
அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றின் படி வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதுதான் இந்த மூன்று முடிச்சு! பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரா ஆகிய மும்மூர்த்திகளின் பெயரால் உறவை உறுதிப்படுத்துவது. பெண்ணானவள் எத்தனை நகைகளை அணிந்தாலும் மஞ்சள் கயிறுதான் அழகு. அது போல் அம்பாளுக்கும், தாயாருக்கும் எத்தனை விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை போட்டாலும் திருமாங்கல்யம்தான் அழகு என்பதை மறுக்கவே முடியாது.
இன்று தாலி சரடுகள் தங்கத்தில் வந்துவிட்டாலும் அதை காட்டிலும் மஞ்சள் கயிறே அழகு என கூறி பலர் அதையே கட்டி வருகிறார்கள். அது போல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது புதிய மஞ்சள் நிற தாலி சரடை மாற்றுவதும் தெற்கு மாவட்டங்களை சேர்ந்தவர்களின் பழக்கமாக இன்றளவும் இருக்கிறது.
அழுக்கு கயிற்றில் தாலி அணியக் கூடாது. அப்படி அணிந்தால் வறுமைதான் கிட்டும். தாலி கயிற்றை அவ்வப்போது மாற்றுவது அவசியம். தினமும் குளிக்கும் போது தாலிக் கயிற்றுக்கு மஞ்சள் பூச வேண்டும். அப்போதுதான் மங்கலகரமாக இருக்கும்.
திருமாங்கல்யத்தை எதற்காக மஞ்சள் கயிற்றில் அணிகிறார்கள் தெரியுமா? ஜோதிடப்படி கயிறு என்பது கேதுவின் அம்சமாக கருதப்படுகிறது. அந்த கயிற்றால்தான் திருமாங்கல்யம் கட்டுகிறோம். கேது என்பவர் பிரச்சினைகளை தரக் கூடியவர். எனவே அவரை சமாளிக்க குருவின் அம்சமான மஞ்சள் தேவைப்படுகிறது. இதனால்தான் மஞ்சள் கயிற்றில் தாலி கட்டுகிறோம். மஞ்சள் கயிறுதான் மணமக்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய உதவும் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications