திருப்பதி விஐபி பிரேக் தரிசனத்தில் முறைகேடு? நடிகை ரோஜாவுக்கு சிக்கல்? பழித்தீர்க்க நாயுடு முடிவு?
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி பிரேக் தரிசன முறைகேட்டில் நடிகையும் அமைச்சராக இருந்தவருமான ரோஜா செல்வமணிக்கு தொடர்பிருப்பதாக விஜிலென்ஸ் பிரிவு கண்டறிந்துள்ளது. அவருக்கு மட்டுமல்லாமல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வரை வருகிறார்கள். அது போல் மாநிலங்கள் என பார்த்தால் வட மாநிலங்களில் இருந்தும் அதிக நபர்கள் திருப்பதிக்கு வருகிறார்கள்.

திருப்பதி அமைந்துள்ள ஆந்திராவின் அண்மை மாநிலங்களான தமிழகம், தெலுங்கானா, கேரளம், கர்நாடகம், ஒடிஸா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்கிறார்கள்.
அது போல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு என தனி க்யூ அமைக்கப்பட்டு அவர்களுடைய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. பொதுவாக பக்தர்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய 3 முறைகளில் வருகிறார்கள். அதாவது தர்ம தரிசனம், திவ்ய தரிசனம் (நடைபாதை) , ரூ 300 சிறப்பு தரிசனம் ஆகியவை ஆகும்.
மேலும் பல பக்தர்கள் சேவைகள் மூலமும் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்கள். ரூ 300 தரிசனத்திற்கு 3 மாதங்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டியது அவசியம். மாதந்தோறும் 24 ஆம் தேதிகளில் இந்த பதிவானது நடைபெறுகிறது. இந்த தரிசன வழிமுறைகள் அல்லாது விஐபி பிரேக் தரிசனம் மூலமும் தரிசிக்கிறார்கள்.
அந்த வகையில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்த போது விஐபி பிரேக் தரிசனத்தில் முறைகேடுகள் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தற்போது புதிதாக அமைந்துள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு கண்டுபிடித்துள்ளது. மேலும் இது குறித்து விசாரணையும் நடத்தி வருகிறது.
லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்களில் சிலர் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒரே ஒரு விஐபி தரிசன டிக்கெட்டில் நிறைய பேர் சென்றது அம்பலமாகியுள்ளது. அது போல் பலருக்கு வரம்பை மீறி சிபாரிசு கடிதங்களை வழங்கியதும் தெரியவந்தது.
சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ரோஜா செல்வமணி, பெட்டிரெட்டி ராமசந்திர ரெட்டி, முன்னாள் எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர் ஆகியோர் யாத்ரீகர்களுக்கு ஒதுக்கீட்டு வரம்பை மீறி பரிந்துரை கடிதங்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத் துறை கண்டறிந்துள்ளது.
அமைச்சராக இருந்த ரோஜாவும் தன்னுடன் ஏராளமானவர்களை அழைத்துச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ததாக தெலுங்கு தேசம் கட்சியினரும் ஜனசேனா நிர்வாகிகளும் புகார் தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டியும் ஒரே நேரத்தில் 54 பக்தர்களை விஐபி பிரேக் தரிசனத்தில் அனுப்பி வைத்தது தெரியவந்தது.
இது மட்டுமல்லாமல் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் மோசடி குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை தொடங்கியுள்ளது. ஏற்கெனவே ஆடுதாம் ஆந்திரா என்ற நிகழ்ச்சியில் ரூ 100 கோடி வரை மோசடி செய்ததாக அமைச்சராக இருந்த ரோஜா மீது புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் விஐபி பிரேக் தரிசன மோசடியும் சேர்ந்து கொண்டுள்ளதால் ரோஜாவுக்கு சட்ட சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் சந்திரபாபு நாயுடுவை கைது செய்யும் நடவடிக்கைக்கு ரோஜா உறுதுணையாக இருந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த முறைகேடு புகாரில் ரோஜா கைது செய்யப்படவோ வழக்குப் பதிவு செய்யவோ வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications