மோடி செய்த பெரிய மிஸ்டேக்? கொந்தளித்த டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட 700 சமூக ஆர்வலர்கள்! சரமாரி புகார்
டெல்லி: மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக, மத்திய அரசு கொண்டு வந்திருந்த 131-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை, எதிர்க்கட்சிகள் தோற்கடித்திருந்தன. இந்நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்தார். இது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் என சமூக செயற்பாட்டாளர்கள் கொந்தளித்துள்ளனர்.
குறிப்பாக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உட்பட, 700ம் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள், மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

கடும் விமர்சனம்
ஏப்ரல் 17 அன்று, பெண்கள் இடஒதுக்கீட்டை 2029-லேயே அமல்படுத்த வழிவகுக்கும் '131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா, 2026', மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது. இதற்கு அடுத்த நாள் (ஏப்ரல் 18), பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில், எதிர்க்கட்சிகள் (காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி) இந்த மசோதாவைத் தோற்கடித்ததன் மூலம் "பெண்ணினத்திற்கு எதிராகக் கருக்கலைப்பு செய்துவிட்டனர்" என்று கடுமையாகச் சாடினார்.
தேர்தல் நடத்தை விதிமீறல்
இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளித்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது (மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்கள்), பிரதமர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தையும், அரசு ஊடகங்களையும் அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகளை விமர்சிக்கப் பயன்படுத்தியது விதிமீறல் என்று, 714 சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நடுநிலையான சூழல்
ஒரு குறிப்பிட்ட கட்சியின் நிலைப்பாட்டை ஆதரித்தும், எதிர்க்கட்சிகளைத் தாக்கியும் பிரதமர் ஆற்றிய உரை, நடுநிலையான தேர்தல் சூழலைப் பாதிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
பாதிக்கப்பட்டிருக்கும் சூழலை சரி செய்ய, பிரதமரின் உரையை அனைத்து அரசு இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
யார் யார் கையெழுத்து போட்டது?
இந்தக் கடிதத்தில் முன்னாள் அதிகாரிகள் நஜீப் ஜங், எம்.ஜி. தேவ சகாயம், சமூக ஆர்வலர்கள் யோகேந்திர யாதவ், அஞ்சலி பரத்வாஜ், மற்றும் இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா உள்ளிட்ட 714 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையம் மீதான விமர்சனம்
தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இந்நிலையில்தான் தேர்தல் ஆணையத்திடம் சமூக ஆர்வலர்கள் புகார் அளித்திருக்கின்றனர். எனவே புகாரின் மீது ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று கூறி, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கொடுத்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மீண்டும் பதவி நீக்க நோட்டீஸை கொடுக்க எதிர்க்கட்சிகள் ரெடியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications