போன் பண்ணுவது யாராக இருந்தாலும் தெரிஞ்சுடும்.. டெலிகாம் நிறுவனங்களுக்கு வரும் கட்டுப்பாடு
சென்னை: செல்போனுக்கு அழைப்பு விடுப்பவர்களின் விவரங்களை காட்டும் வசதியை நடைமுறைப்படுத்துவதற்கான இறுதி பரிந்துரையை மத்திய அரசிடம் டிராய் சமர்பித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த சேவையை பயனர்களுக்கு அளிப்பது கட்டாயம் ஆக்கப்படும் எனத் தெரிகிறது.
செல்போனுக்கு வரும் அழைப்புகளை யார் மேற்கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள பலரும் ட்ரூ காலர் போன்ற செயலிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். இத்தகைய செயலிகள், செல்போனுக்கு அழைப்பு மேற்கொள்பவர்களின் பெயர்களை கால் வரும் போதே திரையில் காட்டுகின்றன. 100 சதவிகிதம் துல்லியமாக காட்டாது என்றாலும் அழைப்பு மேற்கொள்பவர்களின் விவரங்களை ஓரளவு தெரியப்படுத்தி விடும் என்பதால் பலரும் இத்தகைய செயலிகளை பயன்படுத்துகிறார்கள்.

இந்த நிலையில், தான் அழைப்பு மேற்கொள்பவர்களின் விவரங்களை தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களே வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே டிராய் முன்வைத்தது. இதை எப்படி அமல்படுத்தலாம் என்பது குறித்து பல்வேறு பரிந்துரைகளை டிராய் கோரியிருந்தது. தங்களுக்கு வரும் அழைப்புகளை யார் மேற்கொள்கிறார்கள் என்ற விவரங்கள் ஒரு வாடிக்கையாளருக்கு தெரிய வேண்டியது அவசியம் என்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார்.
எந்த எண்ணில் சிம் கார்டு வாங்கப்பட்டதோ: நார்மல் வாய்ஸ் கால், வாட்ஸ் அப் கால், பேஸ்டைம் அல்லது வேறு ஏதாவது ஓடிடி அழைப்புகளை மேற்கொண்டாலும் அழைப்பவர்களின் பெயர் இடம் பெற வேண்டும் என்றும் இதற்கான வசதிகளை செல்போன் தயாரிப்பு நிறுவனங்களும் செய்ய வேண்டும் என்று டிராய் கூறியிருந்தது. இந்த நிலையில், காலர் ஐடியை அறிமுகம் செய்வது எப்படி? என்பது தொடர்பான தனது இறுதி பரிந்துரைகளை டிராய் மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.
இதன்படி, தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் வேண்டுகோளின் பேரில், அழைப்பாளர் பெயர்களைக் காண்பிக்கும் முறையை செயல்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. டெலிகாம் நிறுவனங்களில் எந்த எண்ணில் சிம் கார்டு வாங்கப்பட்டுள்ளதோ அவர்களின் பெயரை திரையில் காட்டும் வகையில் இந்த காலர் ஐடி சிஸ்டம் செயல்படும் என்று தெரிகிறது.
ட்ரூ காலர் செயலிக்கு பாதிப்பு?: பயனர்களின் விருப்ப அடிப்படையில் மட்டுமே இது இயங்கும் எனத் தெரிகிறது. டிராயின் இந்த பரிந்துரைகள் தொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதுவும் தற்போது வரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. டிராய் பரிந்துரைத்துள்ள இந்த புதிய வசதி அமலுக்கு வந்தால், அழைப்பவர்களின் விவரங்களை திரையில் காட்டும் ட்ரூ காலர் போன்ற செயலிகள் பெரும் பின்னடைவை சந்திக்கும் எனக் கூறப்படுகிறது.
எனினும், தங்கள் நிறுவனம் செல்போன் அழைப்பவர்களின் விவரங்கள் மட்டும் இன்றி இதர சேவைகளையும் வழங்கி வருவதால் தங்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படாது என ட்ரூ காலர் சேவை நிறுவனம் கூறி வருகிறது. இதன் காரணமாக விரைவில் இந்த சேவை பயன்பாட்டு வரலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications