உங்களை தொட்டாலே போதும்.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை சொல்லும் ரோபோ.. இது எப்படி சாத்தியம்
வாஷிங்டன்: வரும் காலத்தில் ரோபோக்கள் தான் நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது. இதனால் ரோபோ சார்ந்து இப்போது பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகிறது. இந்தச் சூழலில் வரும் காலத்தில் நமது தோலில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே நாம் என்ன யோசிக்கிறோம் என்பதைக் கண்டுபிடிக்கும் வகையில் ரோபோக்கள் இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நவீனக் காலத்தில் தொழில்நுட்ப ரீதியாக நாம் வேற லெவலில் வளர்ந்து வருகிறோம். குறிப்பாக ரோபோக்கள் இப்போது தொடர்ந்து அதிநவீனமான ஒன்றாக மாறி வருகிறது.

இதற்கிடையே ரோபோக்கள் இப்போது அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு ரெடியாகிவிட்டது. இனி வரும் காலத்தில் வெறுமன மனித தோலைத் தொடுவதன் மூலம் நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதை ரோபோக்களால் அறிய முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ரோபோக்கள்:
இது தொடர்பான விரிவான ஆய்வு ஐஇஇஇ அக்சஸ் (IEEE Access) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. skin conductance எனப்படும் தோல் கடத்துத்திறன் மூலம் ஒருவர் என்ன உணர்கிறார் என்பதைக் கணக்கிட முடியும் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தோல் கடத்துத்திறன் என்பது நமது தோல் எவ்வளவு மின்சாரத்தைக் கடத்துகிறது என்பதின் அளவீடாகும். அதாவது நமது உடலில் சுரக்கும் வியர்வை, நரம்பு செயல்பாடுகள் பொறுத்து மிக மிக மெல்லிய மின்சாரம் தோலில் பாயும். அதை வைத்து ரோபோவால் நாம் என்ன மனநிலையில் இருக்கிறோம் என்பதைக் கண்டறிய முடியுமாம்.
பொதுவாக இதுநாள் வரை முகத்தில் தெரியும் உணர்ச்சி, பேச்சு ஆகியவை கொண்டே ஒருவரது மனநிலையை ரோபோவால் முடிவு செய்ய முடியும். இருப்பினும், இதில் பிழைகள் வர வாய்ப்புகள் அதிகம். இதற்கு ஒரு மாற்றாகவே தோல் கடத்துத்திறன் அடிப்படையில் மனநிலையைக் கண்டறியும் முயற்சியில் ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர்.
தோலில் ஏற்படும் மாற்றம்:
முதற்கட்டமாக இந்த ஆய்வுக்காக 33 பேருக்கு பல்வேறு உணர்ச்சிகளைத் தூண்டும் வீடியோக்களை போட்டுள்ளனர். அப்போது ஒவ்வொரு வகையான வீடியோவை பார்க்கும் போதும் அவர்களது தோலில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்படுவது தெரிய வந்துள்ளது. அதாவது ஒவ்வொரு உணர்ச்சிக்கும் அவர்களின் தோலில் குறிப்பிட்ட பேர்ட்டனில் உணர்ச்சிகள் தெரிந்துள்ளது. குறிப்பாக அச்சுறுத்தும் வீடியோக்களை பார்த்த போது, தோலின் மின் கடத்தல் மாற்றம் அதிக காலம் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
அதேநேரம் குடும்ப பிணைப்பு, மகிழ்ச்சி மற்றும் சோகம் ஆகியவை தொடர்பான வீடியோக்களை பார்த்த போது தோலில் சிறியளவிலேயே மாற்றம் இருந்துள்ளது. நகைச்சுவை வீடியோக்களை பார்த்த போது தோலில் மாற்றம் சீக்கிரம் இருந்தாலும் அது மிக விரைவில் நின்றுவிட்டதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ரோபோ தொட்டாலே போதும்:
இது தொடர்பாக ஆய்வாளர்கள் கூறுகையில், "இதுவரை தோலில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து ஒருவரது உணர்ச்சியைக் கண்டறிவது குறித்து பெரியளவில் ஆய்வுகள் நடந்தது இல்லை. எனவே, எங்கள் ஆய்வு முக்கியமானதாக இருக்கிறது. இத்துடன் உடலில் ஏற்படும் மற்ற மாற்றங்களையும் வைத்து துல்லியமாக ஒருவரது மனநிலையைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை உருவாக்கப் போகிறோம்" என்றார்.
பொதுவாக எந்தவொரு சூழ்நிலையிலும் உடலில் உணர்ச்சி மாற்றம் ஏற்பட்டால் அது சிறியளவில் வியர்வை சுரபிகளை தூண்டும். இது தோலின் மின்சார பண்புகளை மாற்றுகிறது. அதன் அடிப்படையிலேயே ஆய்வாளர்கள் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறார்கள். இதை வரும் காலத்தில் ரோபோவில் பயன்படுத்தி, தொட்டாலே நாம் என்ன மனநிலையில் இருக்கிறோம் என்பதை ரோபோவால் புரிந்து கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications