காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 5,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ள நிலையில், ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகம் - தமிழகம் இடையே காவிரி நீர் பங்கிட்டு கொள்வதில் வறட்சி காலங்களில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. ஜூன் மாதமும் ஆகஸ்ட் மாதமும் மழை சரியாக பெய்யவில்லை. ஜூலையில் மட்டுமே ஓரளவு மழை பெய்துள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் தமிழகத்திற்கு 52 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் நீர் குறைவான அளவே இருப்பதால் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

தற்போது உள்ள 54 டிஎம்சி நீரை வைத்து பெங்களூரு, மண்டியா, மைசூரு, ராமநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே முடியாத நிலை இருப்பதாக கர்நாடகா அரசு கூறி வருகிறது. இதனிடையே, கடந்த மாதம் 29 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் காவிரியில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
ஆனால், நீர் இருப்பு குறைவாக உள்ளதாகக் கூறி கர்நாடக அரசு வழக்கம் போல பிடிவாதம் பிடித்தது. தொடர்ந்து காவிரி ஒழுங்காற்று குழு அளித்த பரிந்துரையை ஏற்ற காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு செப்டம்பர் 12 ஆம் தேதி (இன்று) வரை வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சுப்பிரமணியன், காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கடந்த 4 நாட்களாக வினாடிக்கு 4,000 கன அடி நீர் மட்டுமே கர்நாடக அரசு திறந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, கர்நாடகா அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு முக்கிய பரிந்துரையைச் செய்துள்ளது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 5,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications