கூகுள்பே, போன்பே வைத்திருப்போரை குறிவைக்கும் புதுவித மோசடி! பணத்தை இழக்காமல் இருக்க என்ன செய்யணும்?
டெல்லி: இப்போதெல்லாம் நாம் பெரும்பாலும் யுபிஐ மூலமாகவே பணப் பரிவர்த்தனை செய்ய விரும்புகிறோம். பெட்டிக் கடை முதல் பெரிய மால் வரை எல்லா இடங்களிலும் யுபிஐ இருப்பதால் அதையே மக்கள் விரும்புகிறார்கள். இதற்கிடையே யுபிஐ முறையைக் குறிவைத்து இப்போது Jumped Deposit என்ற புதுவித சைபர் மோசடி நடந்து வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
முன்பெல்லாம் நாம் வெளியே செல்லும் போது கையில் ரொக்கமாக பணத்தை எடுத்துச் செல்வோம். அப்போது கார்டு இருந்தாலும் ரொக்கத்தையே பலரும் விரும்புவார்கள்.

யுபிஐ:
ஏனென்றால், நாம் கார்டு மூலம் பணம் செலுத்தும் போது அந்த கடைக்காரர் குறிப்பிட்ட சதவிகித கமிஷன் செலுத்த வேண்டி இருக்கும். இதனால் பெரிய கடைகள் தவிர அனைவரும் ரொக்கத்தையே விரும்புவார்கள். ஆனால், யுபிஐ இதை மொத்தமாக மாற்றிவிட்டது. யுபிஐ முறையில் எந்தவொரு கட்டணமும் யாருக்கும் இல்லை. அதாவது நீங்களும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.. கடைக்காரரும் கமிஷன் கொடுக்க தேவையில்லை. இதனால் பலரும் யுபிஐ முறையைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
சில்லறை பிரச்சினை இல்லை, திருட்டு பயம் இருக்காது எனப் பல காரணங்களால் யுபிஐ பயன்பாடு அதிகரித்தது. ஒவ்வொரு ஆண்டும் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யப்படும் தொகை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கடந்தாண்டு மட்டும் சுமார் 23.25 டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான தொகை பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதுபோல யுபிஐ பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், இப்போது இதை வைத்து புதுவித மோசடி அரங்கேறி வருகிறது.
சைபர் மோசடி:
Jumped Deposit என்று அழைக்கப்படும் இந்த சைபர் மோசடியில் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த மோசடியில் இருந்து நாம் எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்துப் பார்க்கும் முன்பு, இது எப்படி நிகழ்கிறது என்பதை நாம் பார்க்கலாம்.
எப்படி நடக்கும்:
உங்களுக்கு அடையாளம் தெரியாத யுபிஐ கணக்கில் இருந்து திடீரென ஒரு தொகை வரும். உதாரணமாக ஒரு ரூ.5000 வந்து விழுகிறது என வைத்துக் கொள்வோம். என்னடா இது திடீர்னு யார் இவ்வளவு பெரிய தொகை அனுப்பினார்கள் என நாம் ஷாக் ஆவோம். இது ஏதாவது மோசடியா என செக் செய்ய உடனடியாக வங்கி பேலன்ஸை செக் செய்வோம். இங்கு தான் நாம் சிக்குகிறோம்.
அதாவது ரூ.5000ஐ அனுப்பும் அந்த சைபர் குற்றவாளி உடனடியாக வேறு ஒரு பெரிய தொகை, உதாரணத்திற்கு ரூ.25,000 கேட்டு ரெக்வஸ்ட் கொடுப்பார். நாம் ஆர்வ கோளாறில் பேலன்ஸ் செக் செய்ய போகும் போது அந்த ரெக்வஸ்ட்டை கிளிக் செய்து யுபிஐ பின்னை பதிவிட்டால் ரூ.25,000 நமது வங்கிக் கணக்கில் இருந்து போய்விடும். இதன் மூலம் அந்த நபருக்கு ரூ.20 ஆயிரம் கூடுதலாகக் கிடைக்கும். இதைத் தான் Jumped Deposit எனச் சொல்கிறார்கள். இப்போது இந்த வகையில் மோசடி செய்வது அதிகரித்துள்ளதாம்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி:
இதில் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்க சில எளிமையாக விஷயங்களைப் பின்பற்றினாலே போதும். முதலில் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வருகிறது என்றால்.. ஒரு 30 நிமிடத்திற்கு பேலன்ஸ் எல்லாம் செக் செய்ய வேண்டாம். பொதுவாக 30 நிமிடங்களில் அந்த ரெக்வஸ்ட் காலாவதியாகிவிடும். அல்லது முதல் முறை யுபிஐ பின்னை வேண்டும் என்றே தவறாகப் போடுங்கள். அது ரெக்வஸ்ட்களை கேன்சல் செய்துவிடும். இதைச் செய்தாலே போதும் நாம் தப்பிவிடலாம்.
ஆனால், இதுபோன்ற மோசடி நம்பர்களில் இருந்து உங்களுக்குப் பணம் வந்தால் உடனடியாக நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்ட் போர்ட்டலில் இது தொடர்பாகப் புகார் அளிக்கவும். நீங்கள் இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அருகே உள்ள சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம்.












Click it and Unblock the Notifications