சிவகாசி ஷூட்டிங்கில்.. நடிகர் விஜய்யை நான் அவமதிச்சுட்டேன்! ரொம்ப தவறு.. வருந்தும் பிரபல டிவி நடிகர்
சென்னை: சிவகாசி செட்டில் நடிகர் விஜய்யை நான் அவமதித்துவிட்டேன் என சீரியல் நடிகர் பிர்லா போஸ் வருத்தத்துடன் பேட்டி அளித்துள்ளார்.
சீரியல் நடிகர் பிர்லா போஸை அனைவருக்கும் தெரியும். இவர் ஒரு மாடல், திரைப்படம் மற்றும் சீரியல் நடிகராவார். இவர் சொந்த ஊர் தருமபுரி. தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவர் ராம் எனும் படத்தில் முதல் முதலில் நடித்தார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளான சமந்தா, வித்யா மோகன், சுதா சந்திரன் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். சில பிரபல தொலைகாட்சித் தொடர்களில் பிர்லா போஸ் நடித்துள்ளார். காவ்யா வர்ஷினி, பாரதி கண்ணம்மா, ஆதிபராசக்தி, எங்கள் வீட்டு பெண், வள்ளி, திருமதி செல்வம், கல்யாண பரிசு, சந்திரலேகா, கோலங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

போலீஸ் கதாபாத்திரம் என்றாலே பிர்லா போஸின் உயரத்திற்கும் மிடுக்கான தோற்றத்திற்கும் பொருத்தமாகிவிட்டது. அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இவர் நடித்துள்ள நிலையில் நடிகர் விஜய்யுடன் நடித்துள்ள அனுபவத்தை யூடியூப் சேனல் ஒன்றுக்கு சுவாரஸ்யமான பேட்டி அளித்துள்ளார். அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:
"தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு என்ற ஊரில் தான் பிறந்தேன். அம்மா, அப்பா படிக்கவில்லை. ஆனாலும் என்னை நன்றாக படிக்க வைத்தார்கள். நான் போலீஸ் ஆக வேண்டும் என அம்மா ஆசைப்பட்டார். இதற்காக நான் சென்னை வந்தேன். ஆனால் அது நடக்கவில்லை. டிகிரி முடித்திருந்ததால் அது தொடர்பான வேலைக்கு ஏதும் போகலாம் என தேடி கொண்டிருந்தேன்.
அப்போது எனது நண்பன் பிர்லா டிரான்ஸ்போர்ட் எனும் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அவர் மூலம் எனக்கு அங்கு வேலை கிடைத்தது. அதனால் எனக்கு பிர்லா என்ற பெயர் ஒட்டி கொண்டுள்ளது. அந்த டிரான்ஸ்போர்ட்டின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் தயாரிப்பாளர். பாலசந்தர் சாரின் மின்பிம்பங்கள் எனும் சீரியலில் நடிக்க சென்றேன். அவர்தான் எனது பெயரை பிர்லா போஸ் என மாற்றினார்.
வாழ்க்கையில் நிறைய போராட்டங்கள், சினிமாவையும் பார்த்துவிடலாம் என நினைத்து இறங்கிவிட்டேன். விஜய் சாருக்கும் எனக்கும் நல்ல நட்பு இருந்தது. அவர் அனைவரிடமும் அத்தனை எளிதில் கனெக்ட் ஆக மாட்டார். ஒரு முறை ஆகிவிட்டால் ,கடைசி வரை விடவே மாட்டார். ஆனால் எனக்கும் விஜய் சாருக்கும் ஒரு தவறான புரிதல் ஏற்பட்டுவிட்டது.

சிவகாசி படத்தின் ஷூட்டிங்கின் போது பேரரசு சார் என்னை வரச் சொல்லியிருந்தார். நான் போனேன். அங்கு விஜய் சாருடன் இருக்கும் ஒருவரும் இருந்தார். அவர் தான் சுக்ரன் படம் செய்த போது விஜய் சார் கூட இருந்தேன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார். அந்த பழக்கத்தால் சிவகாசி செட்டிலும் அந்த நபர் இருந்ததால் அப்போது அவரிடம் என்ன சார் நல்லா இரு்க்கீங்களா என கேட்டேன். உடனே அவர் வாய்ப்பு வேணும்னா எதுக்கு இங்கே வர்றீங்க, போய் புரொடியூசர் ஆபிஸ்ல பாருங்க என முகத்தில் அடித்தாற் போல் சொல்லிவிட்டார். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. உடனே இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். அதன் பிறகு அங்கிருந்த உதவி இயக்குநர்கள் என்னை அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டனர்.
நான் கோபத்தில் நின்று கொண்டிருந்தேன். விஜய் சார் ஓபனிங் சாங் முடித்துக் கொண்டு வந்து ஏன் வெயிலில் நிக்கிற உள்ளே வா என அவருடைய அறைக்கு என்னை அழைத்தார். அதற்கு முன்பு நடந்த அந்த மோதலை மனதில் வைத்துக் கொண்டு விஜய் சார் பேசிய போது நான் எந்த பதிலையும் கொடுக்கவில்லை. இதை நினைத்தாலே இப்போதும் எனக்கு கஷ்டமாக இருக்கிறது.
அவர் எவ்வளவு பெரிய நடிகர். நான் வெயிலில் நிற்கிறேன் என்பதற்காக ஏசி அறைக்கு என்னை அழைத்திருக்கிறார். நான் அவருடன் இருந்தவருடன் போட்ட சண்டையை மனதில் வைத்துக் கொண்டு அப்படி நடந்திருக்கக் கூடாது. இத்தனைக்கும் எங்களுக்குள் சண்டை நடந்ததே விஜய் சாருக்கு தெரியாது. இதுவரை இந்த விவகாரம் வெளியே தெரியாது. ஒரு வேளை இந்த இன்டர்வியூ மூலம் விஜய் சாருக்கு தெரிந்தால் நன்றாக இருக்கும் என பிர்லா போஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications