நடிகர் கிங்காங்கின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன ஒரு மணி நேரத்தில் சோகம்! மாரடைப்பால் தாய் மரணம்
சென்னை: நடிகர் கிங்காங்கின் தாயார் காசியம்மாள் நள்ளிரவு 1.30 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். தனது பிறந்த நாளன்றே தனது தாய் இறந்துவிட்டதால் கிங்காங்கும் அவருடைய குடும்பத்தினரும் சொல்லொண்ணா துயரத்தில் உள்ளார்கள். அவர்களுக்கு நண்பர்களும் திரைத்துறையினரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் கடந்த 1988ஆம் ஆண்டு வெளியான நெத்தியடி படத்தின் மூலம் அறிமுகமானவர் கிங்காங். அவருக்கு அப்போதே வயது 17 இருந்தது. இதைத் தொடர்ந்து ரஜினி உள்ளிட்ட நடிகர்களுடனும் இவர் நடித்துள்ளார். அது போல் நடனமும் சிறப்பாக ஆடுவார்.

முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் சில ஆண்டுகளாக வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் போக்கிரி படத்தில் வடிவேலுவுடன் நடித்து கம்பேக் கொடுத்தார். அந்த படத்தில் தண்ணீர் லாரி ஓட்டுநராக நடித்த இவர் வடிவேலுவுடன் காமெடியில் கலக்கியிருந்தார்.
அந்த காட்சியை இன்று கண்டாலும் சிரிப்பை அடக்க முடியாது. அத்துடன் பாலிவுட்டில் முதல் படத்திலேயே ஷாரூக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. இவர் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
நடிகர் கிங்காங்கிற்கு இன்று பிறந்தநாள் ஆகும். தனது பிறந்தநாளைக் கொண்டாட தயாராகி வந்தார். இந்த நிலையில் வழக்கம் போல் கிங்காங்கின் தாய் காசியம்மாள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை சரியாக 12.30 மணிக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து கிங்காங்கும் தனது தாயை கட்டி அணைத்து காலில் விழுந்து வணங்கினார்.
இதையடுத்து சிறிது நேரத்தில் காசியம்மாளுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். தனது பிறந்தநாளில் தனது தாயை பறிகொடுத்ததால் கிங்காங் வேதனையில் உள்ளார். தாய் காசியம்மாளுக்கு வயது 72 ஆகிறது. கிங்காங்கிற்கு அவருடைய நண்பர்கள், அக்கம்பக்கத்தினர், திரை பிரபலங்கள் என ஆறுதல் கூறி வருகிறார்கள்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் கிங்காங்கை ரஜினிகாந்த் தொடர்பு கொண்டு பேசினார். அவர் பேசுகையில், வணக்கம் கிங்காங்.. எப்டி இருக்கீங்க.. உங்க வீடியோ பார்த்தேன்.. எனக்கு அனுப்பியிருந்தாங்க. நீங்க அவார்டு வாங்கி 10 வருஷமா என் கையில கொடுத்து வாங்க முயற்சி பண்றதா சொல்லியிருக்கீங்க.
எனக்கு இந்த விஷயம் தெரியவே இல்ல. யாரும் சொல்லல. வீடியோ பார்த்ததும் ரொம்ப கஷ்டமா போச்சு. சென்னையிலதான இருக்கீங்க.. நானும் ஊர்ல இருக்கேன். குவாரண்டைன்லாம் முடியட்டும். அடுத்த மாசம் டைம் சொல்றேன் நாம மீட் பண்ணலாம் கண்ணா. வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா? என அந்த ஆடியோவில் விசாரித்தார் ரஜினிகாந்த்.
இதையடுத்து தனது தாயிடம் பேசுமாறு கிங்காங் சொல்ல, அவரும் "கிங்காங்கை எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா. விருது விஷயம் எனக்கு தெரியாது, யாரும் சொல்லவில்லை, கொரோனா கொஞ்சம் குறைந்ததும் நான் பார்க்கிறேன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பணம் ஏதாவது வேண்டும் என்றால் கூச்சப்படாமல் கேளுங்க கிங்காங் என ரஜினி கூறுகிறார். மேலும் ஒரு நாள் அம்மா ஆசைப்படி குழு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications