இளையராஜாவுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்.. அலுவலகத்தில் நடந்த சம்பவம்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் இசைஞானி இளையராஜாவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து அவருக்கு பரிசு ஒன்று வழங்கியிருக்கிறார். அதோடு இளையராஜா லண்டனில் முதல் சிம்பொனி இயற்றி இருக்கும் நிலையில் அதற்கு வாழ்த்துகளும் சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார்.
இசையால் ரசிகர்களின் மனதை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் இல்லாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவருடைய பாடல்கள் பல இடங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எந்த பங்க்ஷனாக இருந்தாலும் சரி, பயணத்தில் கேட்கும் பாடல்களாக இருந்தாலும் சரி அதில் அதிகமாக இளையராஜாவின் பாடல்கள் தான் இடம் பிடித்திருக்கும்.

பரபரப்புக்கு சொந்தக்காரர்
இளையராஜாவுக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவரைக்கும் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா பல மேடை நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றி இருக்கிறார். அதேபோல இளையராஜா பேசும் வார்த்தைகள் அடிக்கடி பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்திவிடும்.
வருடும் இசை
இளையராஜா பேசுவது திமிராக இருக்கிறதே என்று பலரும் கருத்து கூறி வந்தாலும் அவருடைய இசை பலருடைய மனதில் வலிகளை வருடும் மயிலிறகாக இருக்கிறது. அதை யாராலும் மறுக்க முடியவில்லை. அதேபோல வரும் எட்டாம் தேதி லண்டனில் முதல் சிம்போனியை இளையராஜா அரங்கேற்ற இருக்கிறார். இதற்காக அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இளையராஜாவின் சிம்பொனி
முதல்வர் மு க ஸ்டாலின் முதல் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் இன்று சிவகார்த்திகேயன் இளையராஜாவை நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 35 நாட்களில் உருவாக்கப்பட்ட சிம்பொனியை லண்டனில் இளையராஜா அரங்கேற்றுகிறார். ஒரு சிம்பொனியை உருவாக்குவதற்காக பலர் பல வருடங்களாக தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.'

சிவகார்த்திகேயன் கொடுத்த பரிசு
ஆனால் இளையராஜா 35 நாட்களில் உருவாக்கியது பெரிய அளவில் பேசப்படுகிறது. இது ஆசியாவிலே யாரும் செய்யாத ஒரு சாதனையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இளையராஜாவின் அலுவலகத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் அவருக்கு பூங்கொத்து மற்றும் யாழ் ஒன்றையும் நினைவு பரிசாக வழங்கி இருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதிய பராசக்தி
சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து இப்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு இருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே கெட்டப்பில் தான் இப்போது இளையராஜாவை சந்தித்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications