நீங்க ஓட்டு போடக் கூடாது! சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் நடிகை ரவீனாவுக்கு அனுமதி மறுப்பு
சென்னை: சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்கவிடவில்லை என நடிகை ரவீனா தாஹா வேதனை தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் பிரபல சீரியலில் இருந்து நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டிருப்பதால் அவர் வாக்களிக்க முடியாது என கூறிவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் சென்னை, விருகம்பாக்கத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதில் 2000 உறுப்பினர்கள் வாக்களிக்கிறார்கள். தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகிய 3 பேர் தலைமையில் 3 அணிகள் போட்டியிட சுயேச்சையாக தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் ஆர்த்தி கணேஷ்கர்.

இந்த தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் கடந்த ஜூலை 22 ஆம் தேதி தொடங்கியது. சிவன் சீனிவாசன் தலைவராகவும், போஸ் வெங்கட் செயலாளராகவும் இருந்து தற்போதைய நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளைத் தவிர இரண்டு துணைத் தலைவர்கள், 4 இணைச் செயலாளர்கள், 14 கமிட்டி உறுப்பினர்கள் என மொத்தம் 23 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது.
மூன்று அணிகளின் சார்பாக மொத்தம் 69 பேர் போட்டியிடுகின்றனர். தினேஷ், பரத், நிரோஷா, நவீந்தர், துரைமணி, ராஜ்காந்த், அழகப்பன், லொள்ளு சபா பழனியப்பன், மீனா குமாரி, பிரேமி வெங்கட், ரவீனா மற்றும் மறைந்த நடிகர் நேத்ரனின் மனைவி தீபா உள்ளிட்டோர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் காலை முதலே, சின்னத்திரை நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நடிகர், நடிகைகள் தேர்தலில் வாக்களித்து வருகிறார்கள். இந்த நிலையில் வாக்களிக்க சென்ற நடிகை ரவீனா தாஹாவுக்கு வாக்குரிமை இருந்தும் அவரை வாக்களிக்கவிடவில்லை என தெரிவித்துள்ளார்.
அதாவது ரெட் கார்டு வழங்கப்பட்டிருப்பதால் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் என்னை வாக்களிக்கவிடவில்லை. ரெட் கார்டு இருந்தால் போட்டியிடதான் முடியாது. வாக்களிக்கலாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் இப்போது என்னுடைய வாக்குரிமையும் பறிக்கப்பட்டது என ரவீனா தெரிவித்தார்.
நடிகை ரவீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். நடிகர் தனுஷ் நடித்த 3 படத்திலும் நடித்துள்ளார். ரவீனா 7 சி எனும் சீரியல் மூலம் சின்னத்திரையிலும் தனது பயணத்தை தொடங்கிய இவர் மௌன ராகம் எனும் சீரியலில் நடித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் பைரவி கச்சேரி ஆரம்பம் எனும் சீரியலில் நடித்திருந்தார். இந்த சீரியலுக்கான ப்ரோமோ வெளியானது. இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதையடுத்து அவரிடம் சமாதானம் பேசியும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
இதையடுத்து சீரியல் தயாரிப்பாளர், அவர் மீது சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். பின்னர் இனி ரவீனா எந்த சீரியலில் நடிக்கக் கூடாது, ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொள்ள கூடாது என ரெட் கார்டு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications