நாடு சுதந்திரம் வாங்கியதிலிருந்து வாக்கு செலுத்துகிறேன்! ஆனால் இந்த முறை.. ரேவதி சங்கரன் ஆதங்கம்
சென்னை: நாடு முழுவதும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை நகரில் வாக்களிக்க வந்த மேடைப் பேச்சாளர் மற்றும் நடிகை ரேவதி சங்கரன் தெரிவித்த கருத்துகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

தேர்தல் அனுபவம்
வாக்குச்சாவடியில் பேசிய ரேவதி சங்கரன், தனது அனுபவத்தை எமோஷனலாக பகிர்ந்தார். "நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து எனக்கு தேர்தல் தெரியும். நான் 1942-ல் பிறந்தேன். அதிலிருந்து எத்தனை தேர்தல்களை பார்த்திருக்கிறேன் என்று கணக்குப் போட்டுப் பாருங்கள். எல்லா தேர்தல்களும் நல்ல முறையில் நடந்தது. ஆனால் இந்த முறை எனக்கு ஒரு சிறிய மன வருத்தம் இருக்கிறது," என்று கூறினார்.
முதியவர்களுக்கு வசதி இல்லை
அவர் குறிப்பிட்ட முக்கிய பிரச்சனை - முதியவர்களுக்கு போதுமான வசதி இல்லாதது."வயதானவர்கள் வந்தால் குறைந்தபட்சம் வீல் சேர் தயார் நிலையில் இருக்க வேண்டும். நடக்க முடியாதவர்களுக்கு வாகனத்தை உள்ளே கொண்டு வர அனுமதி தர வேண்டும். இங்கே யாரும் தவறு செய்ய வரவில்லை; அனைவரும் ஓட்டு போட வருகிறார்கள்," என அவர் சுட்டிக்காட்டினார். சில இடங்களில் வீல் சேர் கூட இல்லாத நிலை இருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு பாராட்டு
அதே நேரத்தில், சில இளைஞர்கள் தனக்கு உதவியதை அவர் பாராட்டினார். "நான் வந்தபோது சில இளைஞர்கள் வீல் சேர் கொடுத்து உதவினார்கள். அதை பார்க்கும்போது அடுத்த தலைமுறையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்று தோன்றுகிறது," என்றார்.
ரசிகர்களின் பதில்
ரேவதி சங்கரன் சினிமா மற்றும் சின்னத்திரையில் பிரபலமானவர் ஆனால் இப்போது சமீப காலமாக எந்த நிகழ்ச்சிகளிலும் இதுவரை காணவில்லை. இந்த நிலையில். பல ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் களத்தில் ரேவதி சங்கரனை பார்த்த ரசிகர்கள், அவரை நினைவுகூர்ந்து பேசத் தொடங்கியுள்ளனர்.
சிலர், "பட்ஜெட் பத்மநாதன் படத்தில் வடிவேலு பின்பகுதியில் அடிபட்டு குப்புற படுத்து இருக்கும்போது, குற்றால அருவியில் குளித்தது போல இருக்குதா? என்று கிண்டல் செய்வாரே அந்த நடிகையா இவங்க என ஆச்சரியப்பட்டுள்ளனர். மற்றொருபுறம், "நாங்கள் குழந்தை பருவத்திலிருந்தே இவருடைய மேடைப் பேச்சுகளை கேட்டிருக்கிறோம். ஆன்மீகம் முதல் சமையல் வரை மிகத் தெளிவாக பேசுவார்" என்று ரசிகர்கள் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
2026 தேர்தல் களம் நிலவரம் என்ன?
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுவதும் பல கட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முக்கிய அரசியல் கட்சிகள் - திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
சினிமா பிரபலங்களும் இந்த தேர்தலில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். பல நடிகர்கள் வாக்களித்து, மக்களிடம் வாக்குரிமையை பயன்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் ஆதரவு
ரேவதி சங்கரன் கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. "முதியவர்களுக்கு தனி வசதி அவசியம்", "ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வீல் சேர் இருக்க வேண்டும்" போன்ற கருத்துகள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இறுதியாக, ரேவதி சங்கரன் அனைவரையும் வாக்களிக்க அழைத்து, "அடுத்த தலைமுறை இந்த நாட்டை நல்லபடியாக ஆள வேண்டும். அதற்கு அனைவரும் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்," என கூறினார்.













Click it and Unblock the Notifications