ஓடிடியில் காமெடி சீன்களை ஓட விட்டு பார்க்கும் ஒரே படம் அரண்மனை- 4 தான்..சுந்தர். சி நிலைமையை பாருங்க
சென்னை: சுந்தர். சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4 திரைப்படம் ஜூன் 21ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ், கோவை சரளா போன்ற பலர் நடித்திருக்கிறார்கள். 100 கோடி வசூலை தாண்டியதாக கூறப்படும் இந்த திரைப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.
சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் திகில் காமெடி திரைப்படமாக உருவாக்கப்பட்ட நிலையில் கடந்த மே 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மூன்று வாரங்களுக்கு பிறகு 100 கோடி ரூபாய் வசூலை எட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்று கூறப்படுகிறது

அதே நேரத்தில் இந்த திரைப்படம் லாஜிக் இல்லாமல் சினிமாவை விரும்பும் ரசிகர்களுக்கானா படமாக தான் இருக்கிறது. லாஜிக் பார்த்தால் இந்த திரைப்படத்தில் பல லாஜிக் மிஸ்டேக் இருக்கிறது. சுந்தர் சி பல இடத்தில் தன்னுடைய முகபாவனையை ஒரே போல வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் என்ட்ரி கொடுக்கும் கோவை சரளாவின் ரியாக்ஷன் காஞ்சனா படத்தில் தொடங்கி இப்போ வரைக்கும் பல பேய் படங்களில் ஒரே போல இருக்கிறது.
கோவை சரளாவின் இயல்பான நடிப்பை விடவும் பேய் படங்கள் என்றாலே இவர் இப்படித்தான் இருப்பார் என்று சொல்லும் வகையில் தான் பல இடத்தில் அவருடைய நடிப்பு இருக்கிறது. அதுபோல சுந்தர் சி அரண்மனைக்கு வந்த பிறகு யோகி பாபு, விடிவி கணேஷ், சேது, காமெடி பெரியதாக எடுபடவில்லை.
பொதுவாக இயக்குனர் சுந்தர் சி திரைப்படம் என்றாலே அங்கு காமெடியும், கவர்ச்சியும் தூக்கலாகவே இருக்கும். இதுவே அவருடைய டிரேடு மார்க்காக இருக்கிறது. உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தில் சொல்லவே வேண்டாம். கவுண்டமணி கார்த்திக் கூட்டணியில் காமெடி எல்லாம் அவ்வளவு தூள் பறக்கும். அதற்குப் பிறகு அருணாச்சலம் திரைப்படம் செண்டிமெண்ட் திரைப்படமாக இருந்தாலும் அதிலும் செந்தில், ரஜினி மாப்பிள்ளை காமெடியை மறக்க முடியாது. அதுபோல முறைமாமன், தலைநகரம், ஜானகிராமன் போன்ற படத்தை எல்லாம் மறக்க முடியாது.
ஆனால் அரண்மனை 4 காமெடி பெரிய அளவில் பலரையும் சிரிக்க வைக்க முடியவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது. கதையில் வேகம் இருந்தாலும் காமெடி காட்சிகளில் தியேட்டரில் பார்க்கும்போது பார்வேர்ட் செய்ய முடியாது என்பதற்காகவே பலர் பொறுமையாக இருந்திருப்பார்கள் போல, ஓடிடியில் வெளியானதும் அதை பலர் ஃபார்வர்ட் செய்து பார்த்து வருவதாகவே கூறி வருகிறார்கள்.

அதிலும் மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் விடிவி கணேசனை அடிக்கும் போது இன்னும் எவ்வளவு நேரம் இந்த காட்சிகள் போகுமோ என்றுதான் மனதிற்குள் தோன்றுகிறது. அதுபோல ராசி கண்ணாவிடம் தன்னுடைய காதலை சொல்ல வேண்டும் என்று யோகி பாபு முயற்சி செய்வது, பிறகு ராசி கண்ணாவிற்கு முத்தம் கொடுக்கிறேன் என்று அவருடைய தாத்தாவிற்கு முத்தம் கொடுப்பது போன்ற இடங்களில் எல்லாம் காமெடி செல்ஃப் எடுக்கவில்லை.
அரண்மனை 4 விமர்சனம்: முதல் பாதி ப்ளஸ், காமெடி மிஸ்! படம் எப்படி இருக்கு?
அரண்மனையை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக ராசி கண்ணாவை காதலிக்க வேண்டும் என்று யோகி பாபு எடுக்கும் முயற்சிகளை கிரி படத்தில் பேக்கரியை கைப்பற்ற வடிவேலு எப்பவோ எடுத்து விட்டார். ஆனால் அப்போ கூட ஒவ்வொரு இடத்திலும் காமெடி அவ்வளவு அழகாக இருக்கும். இப்பவரையிலும் அதில் பல காமெடி பார்க்கும்போதெல்லாம் குபீர் என்று சிரிப்பு வந்துவிடும்.
பொதுவாக பல இயக்குனர்கள் அடுத்த பட காட்சிகளை காப்பி அடித்து தங்களுடைய படத்தில் வைத்து விடுவார்கள். ஆனால் சுந்தர் சி தன்னுடைய படத்திலிருந்து சில காட்சிகளை உருவி அரண்மனை 4 படத்தில் சொருகி இருக்கிறார். ஆனால் அது ஏனோ பெரிதாக ரசிக்க முடியவில்லை.
அதே நேரத்தில் மந்திரவாதி ரூபத்தில் பேய் வீட்டிற்குள் வரும்போது ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேசன் எல்லோரும் மந்திரவாதியை தடுக்க முயற்சி செய்யும் போது சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. மற்றபடி பல இடங்களில் காமெடி என்கிற பெயரில் க்ரிஞ்ச் தான் செய்து இருக்கிறார்கள். எது எப்படியோ சுந்தர். சி படம் என்றாலே காமெடி என்று நம்பி இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான்.












Click it and Unblock the Notifications