சாராயம் காய்ச்சுறவங்களும், ரவுடிகளும் தான் அரசியலுக்கு வரணுமா? விஜய்க்கு ஆதரவாக நடிகர் ஆதங்கம்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்க அழைப்பு வராதது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை இன்னும் பூர்த்தியாகாததால் கூட்டணி அரசியல் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்த சூழலில், பாக்கியலட்சுமி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் சதீஷ் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் அவர் அரசியலுக்கான தகுதி குறித்த கேள்வியை மிகவும் நேரடியாக முன்வைத்துள்ளார்.

சீரியல் நடிகர் வீடியோ
"அரசியலுக்கு வருவதற்கு ஊழல் செய்திருக்கணுமா? ரௌடியாக இருக்கணுமா? தவறு செய்திருக்கணுமா?" என கேள்வி எழுப்பிய அவர், நல்ல மனசு இருந்தாலே மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்பதே உண்மையான தகுதி. ஜாதி, மதம், இனம் போன்ற வேறுபாடுகளைப் பார்க்காமல் எல்லோருக்கும் நல்லது செய்யும் எண்ணமே ஒரு தலைவரின் பெரிய குணம் என்று கூறி இருக்கிறார்.
தனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி அவர் பேசுகையில், இதுவரை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வந்ததாகவும், அது கட்சிக்காக அல்ல, எம்.ஜி.ஆர் மீது இருந்த மரியாதைக்காக என்றும் தெரிவித்தார். ஆனால் தற்போதைய சூழலில், தனியாக நிற்கும் ஒரு இளைஞன் மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றிருப்பதால், அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தன்னிடம் உருவாகியுள்ளதாக கூறினார்.
நடிகர் சதிஷ் ஆதங்கம்
மேலும், இரண்டு பெரிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சிப்பது போன்ற தகவல்கள் வருவது வேதனையாக இருப்பதாகவும், மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். "ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள்; அவர் நல்ல ஆட்சி செய்யவில்லை என்றால் மக்கள் பிறகு தீர்மானிக்கலாம்" என்ற அவரது கருத்து சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்படுகிறது.
வீடியோவின் இறுதியில், "ஜோசப் விஜய்... ஐ லவ் யூ... நீங்கள் நல்லா வருவீங்க... ஆல் தி பெஸ்ட்" என்று உணர்ச்சிப்பூர்வமாக ஆதரவு தெரிவித்ததும் கவனம் பெற்றுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கேள்வி
சதீஷ்குமார், பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த கதாபாத்திரம் மூலம் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தவர். அந்த கதாபாத்திரத்திற்காக விமர்சனங்களும் பாராட்டுகளும் ஒன்றாக வந்தாலும், அவரது நடிப்பு மிகவும் இயல்பானதாக இருந்தது என்று பலரும் கருத்து தெரிவித்தனர். சீரியல் முடிந்த பிறகு அவர் பெரிதாக திரையில் தோன்றாத நிலையில், திடீரென அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டது ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
மொத்தத்தில், தற்போதைய அரசியல் குழப்பநிலைக்கு நடுவில் சினிமா மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களின் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகர் சதீஷ் வெளியிட்ட இந்த வீடியோவும் அதில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications