பிக்பாஸ் 2 : ஓவியாவாக மாறிய ஷாரிக்... ஆரவ்வாக மாறிய ஐஸ்வர்யா!
பிக்பாஸ் சீசன் 2வில் புதிய காதல் பறவைகளாக ஷாரிக், ஐஸ்வர்யா ஜோடி உருவாகியுள்ளது.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இலைமறை காயாக இருந்த காதலை ஷாரிக், ஐஸ்வர்யாவிடம் போட்டுடைத்துள்ளார்.
கடந்த சீசனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஆரவ் - ஓவியா காதல். பிக்பாஸ் வீட்டிற்கு வந்தது முதல் ஆரவ்வை காதலிப்பதாகக் கூறத் தொடங்கினார் ஓவியா. ஆரம்பத்தில் ஓவியாவை காதலிப்பது போல் காட்டிக் கொண்ட ஆரவ், பின்னர் அவரிடம் இருந்து விலகத் தொடங்கினார்.
இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான ஓவியா, ஒரு கட்டத்தில் அந்த வீட்டில் தொடர்ந்து இருக்க முடியாமல், பாதியிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனபோதும், ஆரவ் அவருக்கு அளித்ததாகக் கூறப்படும் மருத்துவ முத்தம் பிரபலமானது.

காதல் ஜோடி:
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதிலும் நிச்சயம் ஆரவ்- ஓவியா போன்ற காதல் ஜோடி நிச்சயம் இருக்கும் என ஆரம்பத்திலேயே எதிர்பார்க்கப்பட்டது. அதை நிரூபிப்பது போல், இந்த வீட்டில் இளம் நாயகர் மற்றும் நாயகிகள் அதிகளவில் உள்ளனர்.

யாருடன் டேட்டிங்:
அவர்களில் நட்சத்திர தம்பதி ரியாஸ்கான் - உமா ரியாஸின் மகன் ஷாரிக்கும் ஒருவர். ஒரு டாஸ்க் ஒன்றில் யாருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறீர்கள் என இவரிடம் கேட்கப்பட்ட போது, நடிகை ஐஸ்வர்யா தத்தாவைக் கை காட்டினார். அதனைத் தொடர்ந்து அவ்வீட்டில் இருப்பவர்கள் அவ்வப்போது ஷாரிக் மற்றும் ஐஸ்வர்யாவை இணைத்து கலாய்த்து வருகின்றனர்.

மாற்றிப் பேச்சு:
இந்த சூழ்நிலையில் நேற்று ஒளிபரப்பான எபிசோட்டில் இரவில் விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகு, ஐஸ்வர்யாவும், ஷாரிக்கும் தனியே அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றன. அப்போது பேசிய ஷாரிக் ஏறக்குறைய ஓவியா போன்று தன் காதலைத் தெரிவிக்கிறார்.

ஐஸ்வர்யாவின் பதில்:
தனக்கு ஐஸ்வர்யாவை மிகவும் பிடித்திருப்பதாக அவர் கூறுகிறார். அதற்குப் பதிலாக ஆரவ் போன்று தனக்கு நிறைய பொறுப்புகள் இருப்பதாக பதில் கூறுகிறார் ஐஸ்வர்யா. இதனால் இனி வரும் எபிசோட்களில் நிச்சயம் இவர்களது காதல் மேலும் வளர்ந்து பிரச்சினைகளுக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications