ஓவியாவுக்கு ‘கொக்கு’.. செண்ட்ராயனுக்கு ‘வாத்து’... மஹத்துக்கோ ‘குரங்கு’!
பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட்டிற்காக 'கனா காணும் காலங்கள்’ எனும் டாஸ்க் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரித்விகா தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சீருடை அணிந்து குழந்தைகளாக வீட்டில் உலவி வருகின்றனர்.
'நீ இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட’ என ரித்விகாவை டீச்சர் ஆக்கி விட்டார் பிக் பாஸ். அதுவும் எடுத்தவுடனேயே தலைமை ஆசிரியர் பொறுப்பு. அதிகம் கலகலப்பில்லாத, கண்டிப்பான ரித்விகா இதற்கு பொருத்தமானவர் தான்.
ஆனால், பொன்னம்பலம் உட்பட மற்ற போட்டியாளர்கள் சீருடை அணிந்து செய்யும் அலப்பறைகளைப் பார்க்கும்போது தான் கண்ணோடு சேர்த்து, இதயமும் வலிக்கிறது.

டீச்சராக சினேகன்:
பள்ளி மாணவர்கள் டாஸ்க் என்றால் சினேகன் இல்லாமலா. போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக கையில் குச்சியுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் சினேகன். ஆனால், அவரைப் பார்த்ததும் ஏனோ நமக்கு, ‘தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் யார்?' என்ற கேள்விதான் டக்கென ஞாபகத்திற்கு வந்தது.

வீட்டுப்பாடம்:
கடந்த சீசனைப் போலவே முழு சந்திரமுகியாக மாறிய ஜோதிகா போல், சினேகன் ஆசிரியராகவே மாறி மாணவர்களுக்கு வகுப்பெடுக்கத் தொடங்கினார். ஒவ்வொருவருக்கும் ஒரு பாடல், திருக்குறள், பழமொழி என மனப்பாடம் செய்ய வீட்டுப்பாடம் வழங்கினார்.

தோசையம்மா தோசை:
‘குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்' என்கிற பழமொழி மஹத்திற்கு. வளர்ந்த குழந்தை பொன்னம்பலத்திற்கு "தோசையம்மா தோசை', சென்றாயனுக்கு ‘குவா குவா வாத்து'.

கொக்கு பாடல்:
மாணவர்கள் தங்களுக்கு கற்றுத் தரப்பட்டதை ஆசிரியரிடம் பிறகு சொல்லிக் காட்டினர். ஆனால், யாரும் கடந்த சீசன் போட்டியாளர் ஓவியா மாதிரி ரசிக்க வைக்கவில்லை. ஓவியாவிற்கு கடந்த முறை, ‘கொக்கு பாடல்' ஒன்று அளிக்கப்பட்டது.

பொய்த்துப் போன எதிர்பார்ப்பு:
அதனை குணா ஸ்டைலில் பாட்டாகவே பாடி அசத்தினார் ஓவியா. கேமரா முன் நின்று ஆடிப்பாடி பயிற்சி செய்த ஓவியா, ஆசிரியர் சினேகன் முன்பும் அதே ஸ்டைலில் பாடி அசத்தினார். இம்முறையும் அதேபோல் யாராவது பாடி அசத்துவார்கள் என எதிர்பார்த்து தான் பிக் பாஸ் இந்த டாஸ்க்கை அளித்திருப்பார் போல.

குடுமி ஓகே:
ஆனால், நிஜமாகவே குழந்தைப்புள்ள கணக்காக எல்லாரும் கண்ணும் கருத்துமா ஆசிரியர் கற்றுக் கொடுத்ததை மனப்பாடம் செய்து ஒப்பித்தனர். இதனால் டேனியின் குடுமியைத் தவிர மற்றபடி அவர்களின் பாடல்கள் நம் மனதில் இடம் பிடிக்கவில்லை என்பது உண்மை.












Click it and Unblock the Notifications