பிக் பாஸ்க்கு போக மாட்டேன், காரணம் இதுதான்! பணத்துக்காக இப்படியா? ஷாலின் ஜோயா சொன்ன அதிர்ச்சி தகவல்
சென்னை: 3 வயதில் குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரைப்படங்களில் அறிமுகமாகி இன்று பிரபல தொகுப்பாளினியாக வலம் வரும் ஷாலின் ஜோயா, எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஒரு விஷயத்தை மட்டும் செய்ய மாட்டேன் என உறுதியாக தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறிய இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கலையின் மீது காதல்
ஷாலின் ஜோயா தனது 3வது வயதிலேயே மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கினார். பள்ளிப் பருவத்தில் சூர்யா டி.வி.யில் தொகுப்பாளராகப் பணியாற்றினார். இது அவரது இன்னொரு திறமையை வெளிப்படுத்தியது. அதற்குப் பிறகு மலையாளத்தில் அவர் நடித்த சீரியல்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன.
தமிழில் களமிறங்கிய ஷாலின்
மலையாளத்தில் பிரபலமாக நடித்துக் கொண்டிருந்த போது தமிழில் 'ராஜா மந்திரி' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ் தெரியாவிட்டாலும் அதில் நடித்து நல்ல பெயரைப் பெற்றார். அதன் பிறகு அவருக்கு 'கண்ணகி' திரைப்படத்தில் சவாலான கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவரது கதாபாத்திரம் மிகவும் சவாலானது என்றும், அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றிணைந்து நடித்ததாகவும் ஷாலின் ஜோயா தெரிவித்தார். அந்த கேரக்டர் அதிகமான விமர்சனங்களை சந்தித்தாலும் அதில் நடித்தது தனக்கு சந்தோஷம்தான் என்று ஷாலின் கூறியிருக்கிறார்.
கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம்:
அவர் ஒரு பேட்டியில், "கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்ற எண்ணம் தனக்கு இல்லை, இரண்டு காட்சிகள் வந்தாலும் அந்த கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும்" என்று உறுதியாகக் கூறினார். தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி பெரிதாக அறியாத ஷாலின் இங்கு வந்த பிறகுதான் அதன் பிரம்மாண்டத்தை உணர்ந்தார். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி அவருக்கு மக்களிடையே நிறைய அன்பைப் பெற்றுத் தந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி - ஷாலின் ஜோயாவின் நிலைப்பாடு
இந்த நிலையில் தற்போதைய பிக் பாஸ் தமிழ் சீசன் 9ஆவது நிகழ்ச்சியில் ஷாலின் ஜோயா கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியானது. அது குறித்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது "பணம் தேவைதான் என்றாலும் அதற்காக பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன்" என்று ஷாலின் ஜோயா ஒரு பேட்டியில் உறுதியுடன் கூறியுள்ளார்.
காரணம்
ஒரு தனிப்பட்ட நபரின் வாழ்க்கை பொது வெளியில் பேசுவது தனக்குப் பிடிக்காது என்றும், அதனாலேயே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் பிரம்மாண்டம் தனக்குத் தெரியும் என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தை தான் பார்த்திருக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 - புதிய அப்டேட்
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த சீசனை போலவே இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார். இதில் பங்கேற்கப் போகும் பிரபலங்களின் பெயர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சமூக வலைத்தளங்களில் பல பெயர்கள் உலாவந்தாலும் ஜீ பிளஸ் தொகுப்பாளர் அகிலா, நடிகர்கள் வினோதினி, அப்புக்குட்டி, அமிர்தா, ரம்யா, பாண்டியன் மற்றும் வசுந்தரா, வினோத் பாபு உட்பட சில குக் வித் கோமாளி பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications