கூலியை மீறி 400 தியேட்டரில் கெத்து காட்டும் கேப்டன் பிரபாகரன்! இவ்வளவு சம்பவம் நடந்திருக்கு! ஆர்கே செல்வமணி ஓபன்
சென்னை: நடிகர் விஜயகாந்த், சரத்குமார் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் 34 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. மறைந்த விஜயகாந்தின் ரசிகர்கள் இந்த செய்தியைக் கேட்டு கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். இந்தப் படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது குறித்து படத்தின் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி உருக்கமாகப் பேசியிருக்கிறார். அப்போது ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவான கூலி படம் தியேட்டரில் ஒடி கொண்டிருக்கும் நேரத்தில் அந்த படத்தையும் தாண்டி எங்களுக்கு 400 திரையரங்குகளில் கேப்டன் பிரபாகரன் படத்தை வெளியிடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து இருந்தார்.

கேப்டன் பிரபாகரன் கதைச்சுருக்கம்
1991 ஆம் ஆண்டு வெளியான 'கேப்டன் பிரபாகரன்' வீரப்பன் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் விஜயகாந்த் வனத்துறை அதிகாரியாக நடித்திருந்தார். அவரது சிறப்பான நடிப்பும் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படம் விஜயகாந்தின் 100வது படம் என்பதால் ரசிகர்கள் இந்தப் படத்திற்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர்.
படக்குழுவினர்
இந்தப் படத்தில் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். மன்சூர் அலி கான் படத்தின் வில்லனாக அறிமுகமானார். இவர்களுடன் நடிகை ரூபினி, ரம்யா கிருஷ்ணன், மற்றும் லிவிங்ஸ்டன் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நடிகர் சரத்குமார் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் செல்வமணியும் விஜயகாந்தும் இணைந்து பணியாற்றிய இரண்டாவது படமாகும்.
இசை
இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன. குறிப்பாக 'ஆட்டமா தேரோட்டமா' என்ற பாடலுக்கு ரம்யா கிருஷ்ணன் ஆடிய நடனம் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படுகிறது.
படத்தின் வெற்றி
ஆர்.கே. செல்வமணி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய போது, "கூலி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் எங்கள் படத்திற்கு 400 திரையரங்குகள் கிடைத்திருக்கிறது. இதுவே எங்களுக்கு பெரிய வெற்றி தான்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார். இந்தப் படம் ரிலீசான போது விஜயகாந்தின் 100வது படம் என்பதால் சென்டிமென்டாக ஓடாது என்று சிலர் சொன்னார்கள். மேலும் ரம்யா கிருஷ்ணன் இந்தப் படத்தில் நடித்ததால் படம் ஓடாது என்று ஒரு பேச்சும் இருந்தது. ஆனால் அனைத்தையும் முறியடித்து இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது.
கடின உழைப்பு
"இந்தப் படம் 290 நாட்களுக்கு மேலே படமாக்கப்பட்டது. அதில் 100 நாட்களுக்கு மேலே காட்டில் தான் சூட்டிங் நடைபெற்றது. அங்கு எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. அந்த காட்டிற்கு போவதற்கு சரியான பாதை கூட கிடையாது. நாங்கள் தான் அந்த காட்டிற்கு பொருட்களை கொண்டு போவதற்காக ரோடு போட்டு சென்றோம். அங்கு எல்லா நடிகர்களும் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இந்த படத்தை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்தார்கள்" என்று ஆர்.கே. செல்வமணி குறிப்பிட்டார்.
ரம்யா கிருஷ்ணன் உருக்கம்
இந்தப் படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது குறித்து மன்சூர் அலி கான் ரம்யா கிருஷ்ணன் போன்ற பலரும் பேசி இருக்கிறார்கள். அதில் ரம்யா கிருஷ்ணன் "நான் சினிமாவில் அறிமுகமான போது தமிழில் எனக்கு வாய்ப்பு வராததால் தெலுங்கு பக்கம் சென்றேன். அங்கு ஒரு சில படங்கள் நடித்துவிட்டு 'கேப்டன் பிரபாகரன்' படத்தில் இரண்டாவது கதாநாயகி என்று தான் சொன்னார்கள். ஆனால் 'ஆட்டமா தேரோட்டமா' பாடல் இப்போது வரைக்கும் எவர் கிரீன் பாடலாக உள்ளது. விஜயகாந்த் தான் எனக்கு தமிழில் ஒரு நல்ல பெயரை பெற்றுத் தந்தார்" என்று கூறினார்.
"இந்தப் படம் மீண்டும் வெளியான போது விஜயகாந்த் இருந்திருந்தால் அவர் ரொம்பவும் சந்தோஷப்பட்டு இருப்பார்" என்று ஆர்.கே. செல்வமணி நெகிழ்ந்து போனார். மேலும் இப்போதும் இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications