"3BHK" பார்த்துட்டு! சொந்தமா வீடு இல்லைனு என் மனைவி அழுதுட்டாங்க! மாரி செல்வராஜ் உருக்கம்
சென்னை: தங்களுக்கு சொந்த வீடு இல்லை என தனது மனைவி அழுததாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். 3BHK எனும் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அவர் அவ்வாறு பேசினார். மேலும் தனக்கு வீட்டை விட சமூகத்தை பற்றிய கனவுதான் அதிகம் இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 3BHK திரைப்படம் வரும் ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சித்தார்த், இது எனக்கு 40ஆவது படம். 40 படங்களை கடந்தது எனக்கு மன நிறைவாக இருக்கிறது. சூர்யவம்சம் படத்தின் பாதிப்பு 300 ஆண்டுகளுக்கும் இருக்கும் என தெரிவித்தார்.
அது போல் இந்த விழாவில் பேசிய சரத்குமார், சொந்த வீடு இல்லாமல் இருந்த போது கூட கண்ணீர் சிந்தியதில்லை. இந்த படம் பார்த்து கண்ணீர் விட்டேன். நானும் தேவயானியும் சூர்யவம்சம் படத்தில் நடித்தோம்.
அந்த படம் திரைக்கு வந்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த நினைவுகளை மறக்க முடியாது என சரத்குமார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய மாரி செல்வராஜ், "படத்தின் பாடல்களை சப்தமாக கேட்டதால் வீட்டையே காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.
எனக்கு வீட்டை விட சமூகத்தை பற்றிய கனவுதான் அதிகமாக இருந்தது. இந்த படத்தை பார்த்துவிட்டு சொந்த வீடு இல்லை என எனது மனைவி அழுதார் என்றார். அப்போது அவரிடம் போதை பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் யாராக இருந்தாலும் போதை பொருள் பயன்படுத்தினால் தவறுதான். இவ்வாறு மாரி செல்வராஜ் தெரிவித்தார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், 'மகாராஜா' இயக்குனர் நிதிலன் சாமிநாதன், 'டிராகன்' இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து, 'அயலான்' இயக்குனர் ரவிக்குமார், 'மாவீரன்' இயக்குனர் மடோன் அஷ்வின், 'டாடா' இயக்குனர் கணேஷ் பாபு, 'லப்பர் பந்து' இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, 'பார்க்கிங்' இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், 'கொட்டுக்காளி' இயக்குனர் வினோத்ராஜ், 'அயலி' வெப்சீரிஸ் இயக்குனர் முத்துக்குமார், இயக்குனர் அரவிந்த், இயக்குனர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இவர்கள் அனைவரும் ஒரு டிவி சேனலில் நாளைய இயக்குநர்கள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தங்களுக்கென சொந்தமாக 3 பிஎச்கே வீடு வாங்க ஆசைப்படும் கதையாக இது அமைந்திருக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications