இளையராஜா இசை கச்சேரியில் உடைந்த உண்மை.. பருவமே புதிய பாடல் பாடு பாட்டில் என்ன ஸ்பெஷல்
சென்னை: நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்த பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடலுக்கு வித்தியாசமான ஒரு மியூசிக்கை போட்டுள்ளார். இந்த ரகசியத்தை அவர் நேற்று நடந்த இசைக் கச்சேரியிலும் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் இளையராஜா 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த வகையில் நேற்று மாலை 6.30 மணிக்கு நந்தனம் ஒய்சிஎம்ஏ மைதானத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் எஸ்பிபி சரண், மதுபாலகிருஷ்ணன், ஸ்வேதா மோகன் உள்ளிட்டோர் பாடினர்.

இளையராஜாவின் எவர்கிரீன் பாடல்கள் இதில் இடம்பெற்றிருக்கும். மெர்குரி நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த இசை நிகழ்ச்சி சென்னை மட்டுமல்லாமல், லண்டன், பாரிஸ், சூரிச் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லண்டனில் ஆகஸ்ட் 30ஆம் தேதியும் பாரீஸில் ஆகஸ்ட் 31 ஆம் தேதியும் சூரிச்சில் செப்டம்பர் 8ஆம் தேதியும் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இளையராஜா நேற்று நடந்த இசைக் கச்சேரியில் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் இடம் பெற்ற பருவமே பாடல் குறித்து சுவாரஸ்யமான ஒரு சம்பவத்தை தெரிவித்துள்ளார். நடிகர் மோகனும் சுஹாசினியும் ஓடிக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் முகத்தை கூட தெளிவாக பார்க்க முடியாது. அதாவது இருவரும் ஜாக்கிங் செய்வார்கள். இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியது.
இந்த பாடல் ஹிட்டடித்தற்கு இளையராஜா இசை என்பதையும் தாண்டி ஒன்று இருக்கிறது. இதுகுறித்து இளையராஜா கூறுகையில் இந்த பாடல் முழுவதும் வரும் ஜாக்கிங் ஷூ ஓசைதான். இதற்காக ஜாக்கிங் ஷூக்கள் அருகே மைக்கை வைத்து பார்த்த போது அது ஜாக்கிங் ஷூ போல் சப்தம் கேட்கவில்லை. இதற்காக என்னவெல்லாமோ நான் செய்து பார்த்தும் அது போன்ற ஒரு ஓசை வரவில்லை.
கடைசியாக தொடையில் தட்டி அந்த சப்தத்தை வரவழைத்தேன். இப்படித்தான் அந்த பாடல் முழுக்க ஒருவர் தொடையில் தட்டிக் கொண்டே இருக்க இசை அமைக்கப்பட்டது. இது போல் இசையை உருவாக்க வேண்டும் என கூறி அங்கிருந்தவரை தொடையில் தட்டி காட்ட சொன்னார். மேலும் அந்த பாடல் அதிகாலை 4 மணிக்கே படமாக்கப்பட்டது. அடர்ந்த மூடுபனி, சூரிய ஒளியே இல்லாத போதிலும் அசோக்குமார் அந்த காட்சியை சூப்பராக படமாக்கியிருந்தார்.
இந்த படம் முழுவதும் பெங்களூரில் கப்பன் பூங்காவில் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சரத்பாபு, பிரதாப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மோகனை முக்கிய வேடத்தில் தேர்வு செய்தது இதுதான் முதல் முறை.
படம் ஃபிளாப்பானாலும் கூட இளையராஜா டியூன் போட்டாலே அந்த படம் ஹிட்டடிக்கும். பல படங்கள் இளையராஜாவின் பாடலுக்காகவே ரசிகர்கள் தியேட்டர் பக்கம் சென்றதும் உண்டு. அந்த அளவுக்கு தனது இசையால் தமிழ் சினிமாவை புதிய பரிணாமத்திற்கு இளையராஜா அழைத்துச் சென்றார்.
80, 90 களில் வெளியான பெரும்பாலான பாடல்கள் இளையராஜாவின் இசையால் ஹிட்டடித்தது. தனது பாடல்களுக்கு நிறைய வித்தியாசங்களை காட்டியிருந்திருப்பார். இவர் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை உள்ளிட்டவைகளில் தேர்ச்சி பெற்றவர். தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தை சேர்ந்தவர் இளையராஜா.
ஆர்மோனியம், கிட்டார் வாசிப்பதில் கைதேர்ந்தவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியால் இளையராஜாவுக்கு இசைஞானி என பட்டம் கொடுக்கப்பட்டது. இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார்.
20 ஆயிரம் இசை கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். ஒவ்வொரு பாடல்களுக்கும் ஒவ்வொரு இசையின் மூலம் வேறுபடுத்தி காட்டியிருப்பார். ஒரே நாளில் எத்தனையோ பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர். இவர் வீட்டு வாசலில் எத்தனையோ எத்தனை தயாரிப்பாளர்கள் காத்திருந்திருக்கிறார்கள்.
பிரசாத் ஸ்டூடியோவில் விடிய விடிய ரெக்கார்டிங் நடக்கும். அந்த காலத்தில் யூடியூப், டிவிடி இல்லாததால் ஒரு பாடலை கேட்க வேண்டும் என்றால் சினிமா தியேட்டருக்குத்தான் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் ஆடியோ கேசட் வந்தால்தான் கேட்க முடியும். காதல் தோல்வி, நட்புக்குள் சண்டை, மகிழ்ச்சி, கொண்டாட்டம் என எதுவாக இருந்தாலும் அது இளையராஜாவின் இசைதான். பலரின் காதல் தோல்விகளுக்கு மருந்தாக இவருடைய இசை இருந்தது என சொல்லலாம்.












Click it and Unblock the Notifications