பாக்தாத் திருடனில் ஹீரோ நானா, இல்லை அந்த அம்மா? நடிகை எஸ்.என்.லட்சுமியால் திகைத்த எம்ஜிஆர்!
சென்னை: அம்மா நடிகையாக இருந்தாலும் எஸ்.என். லட்சுமிக்கு எப்படி சினிமா வாய்ப்பு கிடைத்தது என்பதை காணலாம். மேலும் தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்து எம்ஜிஆர், கமலை ஆச்சரியப்பட வைத்தவர் இந்த பெண்!
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அம்மா நடிகை என அலட்சியமாக நினைக்க வேண்டாம். வாழ்க்கை அவருக்கு மிகப்பெரிய துணிச்சலை தந்திருந்தது. பாக்தாத் திருடன் படத்தில் சிறுத்தையோடு சண்டை போட்டதைக் கண்ட எம்.ஜி.ஆரே நான் ஹீரோவா, இல்லை இந்த அம்மாவா என வியந்ததுண்டு.

காட்சி-1:
ஜெமினி ஸ்டுடியோவில் ரிகர்சல் நடந்து கொண்டிருக்கிறது. படத்தில் மிகப்பெரிய ட்ரம்களின் மேல் ஆடும் பெண்களுக்கான அந்தப் பயிற்சியில் சில ஸ்டெப்களை செய்ய அந்தப் பெண்ணால் முடியவில்லை. நடன இயக்குனர் அந்தப்பெண்ணை விலக்கி வைத்து விட்டு ரிகர்சலைத் தொடர அந்தப்பெண்ணுக்கு கண்கள் கலங்கித் தவித்துப் போகிறார்.
இனி ஊருக்குத் திரும்ப போகவும் முடியாது. காரணம் ஆறு வயதில் மூத்த அண்ணன்கள். பதிமூன்றாவது பிறந்த அந்த சிறிய தங்கையை அவர்களுக்கு அவ்வளவு இஷ்டமில்லை. அப்பாவும் இறந்து விட்டார். அம்மா மட்டுமே. பக்கத்து வீட்டு நடனப் பெண்மணி ஒருவர் சேர்த்து விட்ட நாடகக் குழுவோடு பயணித்து மன்னார்குடி வந்தாள். மன்னார்குடியிலிருந்து வரும் ரயிலில் வேறொரு குடும்பத்தோடு ஏறி சென்னை வந்த பெண்ணுக்கு ஒரு லாரி டிரைவரின் மனைவி மூலம் ஜெமினி ஸ்டுடியோவுக்கு வந்தாயிற்று.
நாடக அனுபவம் மூலம் வாய்ப்பும் வந்தது. ஆனால் இப்போது இப்படி ஒதுக்கி விட்டால் என்ன செய்வது. கண்கள் கலங்கித் தவித்து தன் வாய்ப்பு போய் விடுமோ எனத் தவித்தாள். அப்போது ஜெமினி ஸ்டூடியோவின் மேனேஜர் வெங்கட்ராம ஐயர் அங்கு வர தன் நிலையை சொன்னாள் அந்தப்பெண். இன்றைய கேமராமேன் பாபுவின் தாத்தாவான வெங்கட்ராம ஐயருக்கு அந்தப்பெண்ணுக்கு உதவத்தோன்றிற்று. நடன இயக்குனரை அழைத்த அவர் ஸ்டெப்ஸ்களை மாற்றி அமைத்து அந்தப் பெண்ணுக்கும் வாய்ப்புத் தரச் சொல்ல அவருக்கும் வாய்ப்பு வந்தது.
சந்திரலேகாவின் ட்ரம்ஸ் நடனத்தில் மூன்றாவதாக நிற்கும் அந்தப்பெண் தமிழக மக்களின் மனதில் இடம் பிடிக்க அதிக காலமாகவில்லை.

காட்சி-2:
காரில் புட்டபர்த்தி சாய்பாபாவைத் தரிசிக்க போய்க்கொண்டிருக்கும் போது அழைப்பு வருகிறது. அழைத்தது கமல்ஹாசன். தான் புட்டபர்த்தி போய்க் கொடிருப்பதாகச் சொல்ல 'சாமி தரிசனம் முடிந்து தன்னை வந்து பார்க்கும்'படி கமல் சொல்ல அவரும் அங்கு போகிறார். அப்படி கமலின் 'தேவர் மகன்' படத்தில் வாய்ப்புக் கிடைக்கிறது. நாஸர் வெட்டுப்பட்டுக் கிடக்க "ஆத்தி....ஆத்தி..நான் கொடுத்த பாலெல்லாம் ரத்தமா ஓடுதே..."ன்னு அவர் நடித்த போது கலங்காத மனமே இருக்காது.
அப்படி அழகா நடிச்சு கமல் மனதில் இடம் பிடித்தார் அவர். மகாநதியில் பொறுப்புள்ள மாமியார், மைக்கேல் மதனகாமராஜனில் திருட்டு பாட்டி, காதலா காதலாவில் வீட்டு ஓனர் நூர்ஜஹான், விருமாண்டியில் பாட்டி என அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கக் காரணமே கமல் அவரிடமிருந்த திறமையைக் கண்டு தான். மைக்கேல் மதனக்காமராஜனின் பாட்டி ரோல் கமலை சிந்திக்க வைத்தது. சாய்பாபாவைத் தரிசிக்க சென்ற தனக்கு பெரும் வாழ்வை தேவர்மகன் மூலம் அந்த பாபாவே தந்ததாக சொன்னார்.
எஸ்.என்.லக்ஷ்மி..... அமைதியான அம்மா நடிகை. சாகும் வரை தன் காரை தானே ஓட்டிக் கொண்டு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கும், ஷூட்டிங்குக்கும் வரும் துணிச்சல் அவருக்கிருந்தது. எஸ்.என்.லக்ஷ்மியின் அபார விஷயம் டயலாக் டெலிவரி தான். மைக்கேல் மதன காமராஜனில் அவர் அடிக்கும் டயலாகுகள் மற்றும் செய்கைகள் வெடிச் சிரிப்பை வரவழைத்து விடும். கவுண்டமணி போன்ற காமெடி நடிகர் இன்றி எஸ்.என்.லக்ஷ்மி, விஸ்வநாதன், கிரேஸி மோகன் போன்றவர்களை வைத்து கமல் காமெடிக்கு புது பரிமாணத்தை தந்திருக்கிறார் என்றால் மிகையானது அல்ல.
வாழ்க்கையில் துணிச்சல் இருந்தால் வெற்றி சுலபமானது என்பதை லக்ஷ்மியின் வாழ்க்கையிலிருந்து படிக்கலாம். சினிமாவில் நுழைந்து உழைத்து பதினொரு வருடங்கள் காத்திருந்து பின் தன் குடும்பத்தோடு சேர்ந்தவர் அவர். பதினொரு வயதில் கை விட்ட சொந்தங்களெல்லாம் அவர் சம்பாதித்ததும் திரும்ப வந்து சேர்ந்து கொண்டன.
வாழ்க்கை சிலரை வாழவைக்கும். சிலர் வாழ்க்கையை வாழ வைப்பார்கள். லக்ஷ்மி அவருக்கு கிடைத்த பதிமூன்றாவது குழந்தை என்கிற ஏழை வாழ்க்கையை சாகும்முன் வசதிகளெல்லாம் கொடுத்து அதை வாழ வைத்தவர். உயர வைத்தவர்...
பாஸிட்டிவ் பாட்டி..... இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications