Varusham 16: வருஷம் 16! பூர்ணம் விஸ்வநாதனின் அந்த சீன் நினைவிருக்கா? கொண்டாட மறந்த தமிழ் சினிமா
சென்னை: வருஷம் 16 படம் மலையாளத்தில் சரியாக போகாத நிலையில் தமிழில் வெற்றி பெற்றதற்கான காரணம் என்ன என்பது தெரியுமா? கண்ணன்- ராதிகாவை மறந்துவிட்டு வேறு சில விஷயங்களும் இந்த படத்தில் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் நாம எல்லோரும் 'வருஷம்-16' படம்னா உடனே கண்ணன் (கார்த்திக்)- ராதிகா (குஷ்பு) காதலையும், பிரிவையும் தான் நினைப்போம்.

ஆனா உண்மையில் வருஷம் 16 படத்தை ஃபாஸில் மலையாளத்தில் எடுக்க நினைத்த போது அவர் மனதில் வேறொரு விஷயம் தான் மேலோங்கி இருந்தது. அது கேரளக் குடும்பங்களில் வாழ்ந்த 'காரணவர்'. காரணவர் என்பவர் குடும்பத்தில் மூத்தவர்.
இந்த குடும்பம் உண்டாக காரணமானவர் என நாம் வசதியாக மொழி பெயர்த்துக் கொள்வோம். கேரளா போன்ற மாநிலங்களில் அதிகம் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தவர்கள். ஆதிக்கம் செலுத்தும் நாயர், நம்பூதிரி, மேனன் போன்ற குடும்பங்கள் சுதந்திரத்திற்கு பிறகு செழிப்பாக வாழ முடியவில்லை.
கம்யூனிஸம் முதலாளித்துவத்தை அடித்த போது அடி இந்த தறவாடுகளின் மேல் விழுந்தது. நிறைய தறவாடுகள் தங்கள் நிலங்களை விற்று சாப்பிடும் நிலைக்கு வந்தார்கள். மாப்பிளமார்கள் எனப்படும் இஸ்லாமியர்களும் கடல் கடந்து, உழைத்து பைசா கொண்டு வந்து உள்ளூர் தறவாட்டு நிலங்களை வாங்கினார்கள்.
தறவாட்டு குழந்தைகள் படித்து வேலை தேடி இந்தியா முழுமைக்கும், ஏன் உலகம் முழுக்க வியாபிக்கத் தொடங்கினார்கள். அனேகமாக எல்லா நாடுகளிலும் மலையாளிகள் இன்றும் பணம் சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இப்படி அந்த குழந்தைகள் எல்லாம் போனப் பின்பு அந்த வீட்டின் மூலையில் அதே பழைய பவுசோடு, ஊர் கோவில் மரியாதையைப் பெற்றுக் கொண்டு அந்த தறவாட்டின் மூத்தவர் மட்டும் இருப்பார். அவருக்கு ஆவல் மறுபடியும் குடும்பத்தில் அனைவரும் ஓடி வந்து விளையாண்டு, இந்தக் குடும்பத்தை சில நாட்கள் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். அப்படி ஒரு காரணவர் தான் நெடுமுடி வேணு. தமிழில் பூர்ணம் விசுவநாதன்.
கேரள தறவாட்டு வீடுகளின் தேங்காய்களை விற்றாலே ஒரு குடும்பம் சாப்பிட்டு ஜீவிக்கலாம். காரணவர் தனிமையை 11 மாதங்கள் அனுபவிப்பது 12வது மாதமான திருவிழா மாதத்துக்காக தான். அப்போது தான் வெளி மாநிலங்களில், வெளிநாட்டில் இருக்கும் குஞ்சு, குளுவான்கள் முதல் எல்லோரும் வந்து விடுவார்கள்.
கண்ணன் மிகச்சிறந்த படிப்பாளி. டிஸ்டிங்ஷன் வாங்குபவன். ராதிகாவை அவன் விரும்புவான். தாத்தாவுக்கும் இஷ்டம். ஆனால் குடும்பங்களின் ஈகோவால் சேரமுடியாமல் போகும். ஃபாஸில் மலையாளத்தில் முதலில் 'என்னென்னும் கண்ணேட்டன்ட' என்கிற பெயரில் இதை எடுத்த போது குஷ்பு முறைப்பையன், அவனது துப்பாக்கி, குஷ்பு பரதநாட்டியம், குஷ்பு சாவு, கார்த்திக் 16 வருஷம் ஜெயில், ஃப்ளாஷ்பேக், இளையராஜா எதுவும் கிடையாது.
காதலிப்பார்கள். கடைசியில் ராதிகா அவனை சந்திக்கும் முன் ஊருக்கு சென்று விடுவாள். அவள் ரயிலேறும் முன் மூன்றாம் பிறை கமல் போல் நாயகன் ரயில் நிலையத்துக்கு ஓடி வருவான். அவளும் தன் கைக்குட்டையில் 'என்றென்றும் கண்ணனுடைய...' என எழுதி கைக்குட்டையை எறிந்து விட்டு ரயில் போய் விடும். அவன் அழுது கொண்டு நிற்பதோடு படம் முடிந்து விடும். கைக்குட்டை அனாதையாக காற்றில் பறக்கும்...
ஃபாஸில் இங்கு தான் தோல்வியை வெற்றியாக்க முறைப்பையனை வைத்து நாயகியை சாகடித்தார். நாயகி செத்ததுமே நாயகன் கொல்லுவான் அவனை. பின் 16 வருட சிறை தண்டனை. சிறையிலிருந்து வெளி வந்து ஃப்ளாஷ்பேக்காக படம் ஓடும்.
குடும்பத்தை இழந்து காதலை இழந்து அரசு சிறையிலிருந்து வெளிவந்து, தன் தறவாட்டு சிறையில் தாத்தா பூர்ணம் போலவே அவன் அமர்வதோடு படம் முடியும்.
ஃபாஸிலின் இந்த அற்புத தமிழ் சென்டிமெண்ட் சரியாக வேலை செய்தது. குஷ்பு இறந்தது தமிழ் ரசிகர்கள் எதிர்பார்க்காத திருப்பம். அந்தக் காதலை அப்படி அமைத்திருப்பார் ஃபாஸில். முதலில் மோதல். அப்புறம் டீஸிங். பிறகு காதல். பின் பிரிவு. விடலை பையன்கள் செய்யும் விளையாட்டுக்கள் எல்லாம் கார்த்திக் செய்வார். தமிழ் ரசிகர்களுக்கு இந்தக்கூட்டு குடும்பம் ரொம்பவே பிடித்துப் போனது.
கதையை மிக மிக ஜாலியாக பாட்டு, காமெடி, காதல் எனக் கொண்டு போய் கடைசி பதினைந்து நிமிடத்தில் ரசிகனுக்கு ஷாக்கை தந்து வெளியேற்றுவார் ஃபாஸில். பொதுவாக சிறைவாசம் முடிந்து வெளிவரும் நாயகன் தன் குடும்பத்தோடு எஞ்சிய காலத்தை கழித்ததாகவே கதை முடியும்.
மகாநதி கூட அப்படியே. இங்கு ஃபாஸில் தந்த அதிர்ச்சி சிறைவாசம் முடிந்து வந்தாலும் கார்த்திக்குக்கு என்ன இருக்கிறது. அவனும் இனி கோவில் திருவிழாவுக்கு வரும் குழந்தைகளுக்காக காத்திருப்பான். இந்த பிரிவு தான் வலி. இந்த தனிமை தான் வலி.
தாத்தா கண்ணன் மேல் மிகுந்த அன்பு வைத்திருப்பார்.
ஆட்டுக்குட்டிக்கு கூட பேரன் கண்ணனின் பெயரை வைத்திருப்பார். பாத்ரூமிலிருந்து கார்த்திக் வெளிவந்ததும் வடிவுக்கரசி பேசியதும் பூர்ணம் தளர்வாக ஒரு நடை வருவார் பாருங்கள். ஆஹா...பூர்ணம் விஸ்வநாதனை ஏனோ இந்த திரையுலகம் மதிக்கவேயில்லை...
இந்த வலிதான் வருஷம்16 படத்தின் வெற்றி. தாத்தாக்கள் பேரன் மேல் வைத்திருக்கும் அன்பை இரண்டு விதமாக காட்டி இருப்பார் ஃபாஸில். பூர்ணம் தாத்தா காட்டும் கண்டிப்பான பாசம். வி.கே.ராமசாமி தாத்தா காட்டும் நட்பான அன்பு. இந்த தாத்தாக்களின் அன்பை எல்லா தமிழனும் மாமா, சித்தப்பா போன்ற கேரக்டர்கள் மூலம் அனுபவித்திருப்பார்கள். இந்த நிஜம் தான் அப்படத்தோடு நம்மை ஒன்றிப்போகச் செய்தது.
தறவாட்டு காரணவரின் அன்பு பற்றி படமாக்கி கேரளாவில் தோற்ற ஃபாஸில் அதை தமிழ்நாட்டில் சூப்பர் ஹிட்டாக்கினார். அதற்கு காரணம் ஃபாஸிலின் அந்த மூலமான தாத்தாக்களின் பிரிவும், தனிமையும் தான். கார்த்திக் க்ளைமாக்ஸில் ஜனகராஜிடம் சொல்லுவார்.
"ராஜாமணி..எல்லோரையும் லெட்டர் போட்டு வரச்சொல்லு. இந்த வீடு பழைய மாதிரி ஆட்டமும், பாட்டமும் நிறைஞ்சி சந்தோஷமா இருக்கணும்...." இந்த சென்டிமென்ட் தான் ஃபாஸிலின் வெற்றி....பிரிவும், தனிமையும்... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications