விஜயகாந்த் நடிகராக விதை போட்டது இவர்தானா? ராவுத்தரும் எஸ்.ஏ.சியும் கிடையாதாமே! வெளியான சீக்ரெட்
சென்னை: விஜயகாந்த் மக்கள் மனதில் நீங்கள் இடம் பிடிக்க காரணம் யார் என கேட்டால் இப்ராஹிம் ராவுத்தர், எஸ்.ஏ.சந்திரசேகர் என்று மட்டும்தான் சொல்வார்கள். ஆனால் விஜயகாந்த் எனும் செடி ஆலமரமாக தழைத்து நிற்க, அதற்கான விதையை விதைத்தது யார் என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: விஜயகாந்த்-மர்சூக்....
ஒரு மனிதனோட ஒருவரோடு உள்ள கோபம் சில நேரம் இன்னொரு மனிதனுக்கு நன்மை ஆகறது உண்டு. விஜய்ராஜ் என்கிற மதுரை மகன் கேப்டனாக மக்கள் மனதில் இடம் பெறக் காரணம் யாருன்னு கேட்டா எல்லோரும் இரண்டு பேரை சொல்வார்கள். இப்ராஹிம் ராவுத்தர், எஸ்.ஏ.சந்திரசேகர்....இவங்க தான்னு உடனே சொல்வாங்க.

ஒரு செடி வளர தண்ணீர் ஊற்றியது என்னவோ இவர்கள் தான். ஆனால் அந்த செடிக்கான விதையை விதைத்தது முகமது மர்சூக் என்பவர் தான். மர்சூக் மதுரையில் ஒரு வினியோகஸ்தர். அவருக்கு சேனா ஃபிலிம்ஸ் என்கிற கம்பெனி இருந்தது.
விஜய்ராஜ் நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் இடத்தின் மாடியில் தான் சேனா ஃபிலிம்ஸ் அலுவலகம் இருந்தது.
'ஆசை அறுபது நாள்' படம் வெற்றி பெற்று நூறு நாள் ஓடியதால் அதன் வெற்றி விழாவை மதுரையில் நடத்தினார் மர்சூக். அதற்கு விஜயகுமார், ஜெயச்சந்திரன், ஸ்ரீவித்யா, ,ரஜினிகாந்த் என நிறைய நடிகர்கள் வந்தார்கள். அவர்களை நல்லபடியாக கவனித்து அனுப்பும் பொறுப்பை விஜய்ராஜ் குழுவிடம் ஒப்படைத்தார் மர்சூக். அவர்களும் நல்லபடியாக கவனித்து அனுப்ப மர்சூக் விஜயராஜ் நண்பர்கள் குழுவோடு நெருங்கிய நட்பானார்.
அதோடு வேறொரு சம்பவமும் நடந்தது. 78 ஆகஸ்டில் 'பொட்டேலு பொன்னம்மா' என்கிற தெலுங்கு படத்தை வினியோகத்துக்கு எடுக்கிறார் மர்சூக். ரிலீசாகும் சமயத்தில் போட்டிக்கு அதன் மூலமான ஒரிஜினல் 'ஆட்டுக்கார அலைமேலு' தமிழ்ப்படத்தை ரீ ரிலீசுக்கு இறக்குகிறார் போட்டி வினியோகஸ்தர். மர்சூக் விஜயராஜை அழைத்து விஷயத்தை சொல்கிறார்.
"எப்படியாவது நம் படம் வெற்றி பெற வேண்டும். என்ன செய்யலாம்?"
"கவலைப்படாதீங்க. இரண்டு படத்திலும் நடித்த ஆடு சோழவந்தானில் தான் இருக்கிறது. அதை வைத்து படத்தில் ஆடு செய்யும் விஷயங்களை நம் தியேட்டரில் செய்ய வைத்தால் மக்கள் ஆட்டைப் பார்க்க வருவார்கள்..."
இந்த ஐடியாவைச் சொன்ன விஜய்காந்த் அப்போதே மக்கள் மனதை எப்படி படித்திருக்கிறார்கள் பாருங்கள். "அதை நீங்களே செய்யுங்கள்" எனச் சொல்ல ராவுத்தரும்-விஜியும் அப்படியே செய்ய மர்சூக் மனதில் நீங்கா இடம் பிடித்தார் விஜயராஜ்.
வினியோகஸ்தராக இருந்த மர்சூக் ஒரு பெரிய நடிகரிடம் கால்ஷீட் கேட்க (சிவாஜி?) அவர் ஒரு வருஷத்துக்கு பிஸி எனச் சொல்ல கோபத்தோடு அலுவலகத்துக்கு வருகிறார். கீழே பேசிக் கொண்டிருந்த விஜயராஜை உற்றுப் பார்த்து விட்டு மேலே போனவர் ஆபிஸ் பாயை அனுப்புகிறார் அழைத்து வர. மேலே விஜயராஜ் அவரை சந்திக்க "சினிமாவில் நடிக்கிறாயா? சொல்..." எனக் கேட்க விஜய்காந்த் தலையாட்ட அவரே தன் கழுத்தில் கிடந்த சங்கிலியை கழட்டி கழுத்தில் மாட்டி போட்டோ எடுக்க வைக்கிறார்.
போட்டோவுக்கான போஸ்களுக்கு ஐடியா அவரே கொடுக்கிறார். ஆல்பத்தோடு விஜயராஜை அழைத்துக் கொண்டு மர்சூக் இயக்குனர் மாதவனை பார்க்கிறார்கள். அப்போது 'என் கேள்விக்கென்ன பதில்' படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் மாதவன். வாய்ப்பு தந்தால் படத்தின் மதுரை ஏரியாவை வாங்கிக் கொள்வதாக மர்சூக் சொல்ல அவருக்கு வில்லனின் மகன் வேடம் தரப்படுகிறது. இரண்டு டயலாக்கும் பேசிக் காட்சியை எடுக்கிறார்கள்.
இந்தச்செய்தி 'பிலிமாலயா'வில் வர மதுரை முழுக்க விஜயராஜ் நடிக்கும் செய்தி பரவுகிறது. ஆனால் படத்திலிருந்து தான் நீக்கப்பட்டதும், அந்த ரோலில் சிலோன் மனோகர் நடிப்பதும் அறிந்த விஜய்ராஜ் அவர்களோடு கோபப்படுகிறார். இதைக் கேட்ட மர்சூக் 'என் கேள்விக்கென்ன பதில்' திரைப்படத்தை வினியோகிக்கும் ஐடியாவை கை விடுகிறார்.
மதுரை திரும்பி வந்த அவரை திரையில் பார்க்க எல்லோரும் ஆவலாய் இருப்பதை அறிந்து தவித்துப்போகிறார் விஜயராஜ். 'என் கேள்விக்கென்ன பதில்' ரிலீசாகும் முன் தான் ஒரு படத்தில் நடித்து விட வேண்டுமென ராவுத்தரோடு சென்னை வருகிறார் விஜய்ராஜ். அலை அலையென அலைந்து ஸ்டுடியோக்களில் ஏறியும் ஆல்பத்தை முகத்தில் வீசியெறிகிறார்கள் எல்லோரும். டி.என்.பாலு விரட்டி அடிக்கிறார்.
பீட்டர் செல்வக்குமார் "இன்டஸ்ட்ரிக்கு ஒரு ரஜினி போதும்யா..." என ஆல்பத்தை விட்டெறிகிறார். (பின்னாளில் இவருக்கு அம்மன் கோவில் கிழக்காலே படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார்)
அப்பா கோபப்பட்டு பணம் அனுப்புவதை நிறுத்திக் கொள்ள அரை வயிறு, கால் வயிறோடு வாய்ப்பு தேடுகிறார்கள்.
இம்முறையும் மர்சூக் வருகிறார் சென்னைக்கு. நேரே 'ப்ரியா' படப்பிலிருந்த ரஜினியை சந்திக்கிறார்கள். "என்னைப்போலவே ஆல்பத்தில் இருக்கே...எனக்குப் போட்டியா?.." என ரஜினி சிரித்துக் கொண்டே கேட்கிறார். வெளியே வந்த மர்சூக் "ரஜினி மாதிரி நீயும் ஆகிக் காட்டணும்.." எனச் சொல்கிறார்.
நேரே எம்.ஏ.காஜாவை சந்தித்து "இவன் என் தம்பி. ஒரு வாய்ப்பு கொடுங்கள். கொடுத்தால் அந்த படத்தின் மதுரை ஏரியாவை எடுத்துக் கொள்கிறேன்.." எனச் சொல்ல "நிச்சயம் உங்களுக்காக செய்கிறேன். ஒரு வில்லன் ரோல் இருக்கு..." எனச் சொல்லி உடைகளெல்லாம் நீங்களே கொண்டு வந்துடுங்க. இது சின்ன பட்ஜெட் படம் என காஜா சொல்ல ராவுத்தர் திருப்பூர் நண்பர்களிடம் சொல்லி விஜய்ராஜுக்கு உடைகள் ஏற்பாடு செய்ய படத்தில் நடித்து முதலில் வெளியாகிறது "இனிக்கும் இளமை."
விஜய்ராஜ் விஜயகாந்தாகிறார்.
மர்சூக்கின் கோபத்தால் கேப்டன் என்கிற மனிதர் தமிழ்ச் சமூகத்தில் ஊடே எல்லோர் மனங்களிலும் கடந்து சென்றிருக்கிறார். இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications