"கடவுளே நான் அபாக்கியவதி!" இறப்புக்கு முன் சில்க் ஸ்மிதா எழுதிய கடிதம்! லெட்டரில் இருந்த ஒரு பெயர்!
சென்னை: நடிகையும் கனவுக் கன்னியுமான சில்க் சுமிதா இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் என்ன இருந்தது என்பது குறித்து தெரியவந்துள்ளது. அத்துடன் அவர் அந்த கடிதத்தில் ஒரு பெயரையும் குறிப்பிட்டுள்ளார். ஈசிஆரில் பண்ணை வீட்டையெல்லாம் வாங்கிய ஸ்மிதாவின் சொத்துகள் என்ன ஆனது?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: ஏலூரு விஜயலட்சுமியாய் சிறு வயதில் திருமணம் செய்து கணவன் வீட்டில் அடிபட்ட விஜி அங்கிருந்து தப்பி தன் இஷ்டப்பட்ட வாழ்க்கையை தேடி சென்னை வந்தார்.

15 வயதிலிருந்த அந்த தைரியம் 35 வயதில் 'சில்க் ஸ்மிதா'வாக மாறிய பிறகு இல்லை. தன் வீட்டு அறையில் தூக்கு மாட்டி இறந்து போனார். சில்க் மலையாளத்தில் நாயகியாகவே வந்தார்.
'ஒற்றப்பெட்டவர்' படத்தில் நாயகியாக அறிமுகமானார். வண்டிச்சக்கரம் வராமல் இருந்தால் அவர் நாயகியாகவே ஆகி இருக்கலாம். அவர் நாயகியாகத்தான் வருவேன் என அடம் பிடிக்கவில்லை. ஆனாலும் சில்க் சில்க் சில்க், போலீஸ் போலீஸ், அன்று பெய்த மழையில், மிஸ் பமீலா போன்ற படங்களில் அவர் தான் நாயகி.
மூன்றாம் பிறை என்கிற படத்தில் கமல், ஸ்ரீதேவி என்கிற மிகப்பெரிய நடிகர்கள் இருந்தாலும் சில்க் காட்சிகளை நீக்கி விட்டுப் பாருங்கள். அந்தப்படம் எவ்வளவு ட்ரை சப்ஜெக்ட் எனப் புரியும். ரஜினியின் மிக்கப் படங்களிலும் சில்க் இல்லாத வேறு ஒரு நடிகையை அந்தப் பாத்திரத்துக்கு நினைக்க முடியவில்லை.
சிவாஜியையே "ஏய்...மிஸ்டர் உங்களைத்தானே..." என பாடலிலேயே (தீர்ப்பு) சொடுக்கியதோடு, 'வாழ்க்கை' படத்தில் ராஜாவின் 'மெல்ல மெல்ல என்னைத் தொட்டு' பாடலின் டியூனுக்கு தனி வடிவம் கொடுத்து அசத்தியவர்... மிகப்பெரிய இசையமைப்பாளர் எம்.எஸ்.வி... அவர் கேட்டால் சிவாஜியே கால்ஷீட் கொடுப்பார். அவர் மகன் கோபியே சொந்தப் படம் எடுக்க சில்க்கைத்தான் நாயகியாக்கினார்.
கலைஞர் பெண் சிங்கம் எடுக்கும் முன்பே சில்க் மலையாளத்தில் 'பெண்சிங்கம்' என்றொரு படத்தை தயாரித்தார். தெலுங்கில் வீரவிகாரம், பிரேமசேச்சுடு என்கிற இரண்டு படங்களை தயாரித்தார்.
அவரை வைத்து அசோக்குமார் 'அன்று பெய்த மழையில்' என்கிற சொந்தப்படம் எடுத்து இயக்கினார். வெற்றியும் பெற்றார். கங்கை அமரன் கோழி கூவுது, கொக்கரக்கோ, சூரக்கோட்டை சிங்கக்குட்டி படங்களில் நாயகியாக்கினார்.
அதில் அவர் ஈசிஆரில் பண்ணை வீடு வாங்கும் அளவுக்கு உயர்ந்தார். பல பி கிரேட் மலையாள பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இவரால் வாழ்ந்தனர். மம்முட்டி தன் படத்தில் (அதர்வம்) 'புழையோரத்தில் பூந்தோணியெத்தில்லா' என ஹிட் பாடலுக்கு கொண்டு வந்தார். மோகன்லாலோ 'ஏழிமல பூஞ்சோல' என்கிற பாடலுக்கு சில்க்கோடு வந்து(ஸ்படிகம்) என கொண்டு வந்தார். மிஸ்.பமீலா என்கிற சில்க் நாயகியான படத்தில் சுரேஷ்கோபி சிறிய நடிகராக சிறிய ரோலில் நடித்து வளர்ந்தவர்.
இறக்கும் தருவாயில் தன் கடிதத்தில் அவர் இப்படி எழுதி இருந்ததாக செய்தி உண்டு. "அபாக்கியவதி.... கடவுளே, நான் 7 வருஷமா என் வயிற்றுக்காகத்தானே கஷ்டப்பட்டு இருக்கேன். எனக்கு என்று யாருமே இல்லை. நான் நம்பினவங்க எல்லாம் என்னை மோசம் பண்ணிட்டாங்க. பாபு (ராதாகிருஷ்ணமூர்த்தி தாடிக்காரர்) தவிர என் மேலே வேறு யாருக்கும் அன்பு கிடையாது.
என் பின்னால் இருந்தவங்க எல்லாம் செட்டில் ஆயிட்டாங்க. பாபு தவிர மற்ற எல்லோரும் என் உழைப்பை சாப்பிட்டவங்கதான். என் சொத்தை அனுபவிச்சவங்கதான். என் அழிவுக்கும் வழிவகுத்தாங்க. யாருக்குமே என்னிடம் பாசம் இல்லை. வாழ்க்கையில் எனக்கும் நிறைய ஏக்கம் - எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் என்னைச் சுற்றி இருக்கிறவங்க, எனக்கு மன நிம்மதி இல்லாமல் நான் செத்துப்போகிற அளவுக்கு பண்ணிட்டாங்க....."
பல பேர் இன்று சில்க் நல்லப்பெண் என்றெல்லாம் பேட்டிக் கொடுக்கிறார்கள். ஆனால் அன்று அவருக்கு யாரும் இல்லை. சொந்தப் படம் என்கிற சுழலில் மாட்டிக் கொண்டு திரும்பவும் தொடக்கத்துக்கே வந்து விட்டவர் அவர். எல்லாம் கடைசியில் முடிந்து போனது.... கனவுகளை துரத்தியவர் கனவாகிப் போனார்... கனவுகள் எல்லாமே நனவாவதில்லை.... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications