சிவகார்த்திகேயன் பெயரில் தவறான மெசேஜ்.. ஏமாந்த கலைஞர்கள்! எச்சரிக்கை விடுத்த நிறுவனம்
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளராகவும் இருக்கும் சிவகார்த்திகேயன் தொடர்பாக ஒரு முக்கிய எச்சரிக்கை தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. சினிமா வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களை குறிவைத்து நடைபெறும் மோசடிகளை தடுக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம்
சிவகார்த்திகேயன் நடத்தி வரும் சிவகார்த்திகேயன் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சிலர் போலியான காஸ்டிங் தகவல்களை பரப்பி, பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை உண்மை என்று நம்பி சிலர் அதில் இருக்கும் போன் நம்பருக்கு கால் பண்ணி பேசியிருக்கிறார்கள். சிலர் மெசேஜ் பண்ணி விசாரித்து இருக்கின்றனர். அப்போது அவர்கள் பணம் கட்ட சொல்லி இருக்கிறார்கள். அதற்கு பிறகு தான் இது போலியானது என்று பலருக்கும் சந்தேகம் வந்திருக்கிறது. இது குறித்து பலரும் போஸ்ட் போட தொடங்கி இருக்கின்றனர்.
ஏமாற்று போஸ்ட்
இதையடுத்து சிவகார்த்திகேயனின் எஸ்கே நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஒரு அறிக்கை வெளியிட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில், "எங்கள் நிறுவனத்தின் திரைப்படங்களுக்கான நடிகர் தேர்வு தொடர்பாக எந்த இயக்குநர்களோ, ஒருங்கிணைப்பாளர்களோ, காஸ்டிங் ஏஜென்ட்களோ அல்லது மூன்றாம் தரப்பு பிரதிநிதிகளோ நியமிக்கப்படவில்லை.
சிவகார்த்திகேயன் தரப்பில் விளக்கம்
எங்கள் சார்பான எந்த அறிவிப்புகளும் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் வழியாக மட்டுமே வெளியிடப்படும். இதற்கு மாறாக வரும் வாட்ஸ்அப் செய்திகள், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் அல்லது சமூக வலைதள பதிவுகளை நம்ப வேண்டாம்" என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு தேவை
சமீப காலமாக "சினிமா வாய்ப்பு" என்ற ஆசையை பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. சிலர் காஸ்டிங் கால் என்று கூறி முன்பணம் கேட்பதும், வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் மூலம் போலியான ஆடிஷன் அழைப்புகளை அனுப்புவதும் வழக்கமாகிவிட்டது. "உடனடி வாய்ப்பு", "ஹீரோயின் சான்ஸ்", "புதிய படம் தேர்வு" போன்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளை பயன்படுத்தி இளைஞர்களை நம்ப வைப்பதோடு, பதிவு கட்டணம், பயிற்சி கட்டணம் போன்ற பெயர்களில் பணம் வசூலிக்கும் சம்பவங்களும் அதிகமாக இருக்கின்றன. பலர் உண்மை சரிபார்க்காமல் இந்த வகை தகவல்களை நம்பி ஏமாந்து விடுகின்றனர்.
இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எந்த சினிமா வாய்ப்பு வந்தாலும் அது அதிகாரப்பூர்வமானதா என்பதை உறுதி செய்ய வேண்டும். முன்பணம் கேட்கும் எந்த அழைப்பையும் சந்தேகத்துடன் பார்க்க வேண்டும். நிறுவனத்தின் உண்மையான சமூக வலைதளப் பக்கங்கள் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் தகவலை சரிபார்ப்பது அவசியம். சந்தேகமான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக போலீசில் புகார் அளிப்பதும் முக்கியம்.
கவனம் மக்களே
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி, பின்னர் நடிகராக உயர்ந்து இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் சிவகார்த்திகேயன். அவர் நடித்த படங்கள் மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பல தரமான படங்களை வழங்கி வருகிறார். சிவகார்த்திகேயன் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் புதிய திறமைகளை அறிமுகப்படுத்தும் முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில், சினிமா வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களின் கனவுகளை பயன்படுத்தி சிலர் மோசடி செய்ய முயலும் இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த எச்சரிக்கை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. "வாய்ப்பு" என்ற பெயரில் வரும் ஒவ்வொரு தகவலையும் சரிபார்த்து, விழிப்புணர்வுடன் நடந்துகொண்டால் மட்டுமே இத்தகைய மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும்.












Click it and Unblock the Notifications