எத்தனை கோடி தந்தாலும் இதை மட்டும் செய்ய மாட்டேன்..! ராஜ்கிரணை போல ஜிவி பிரகாஷ் அதிரடி!
சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி. பிரகாஷ் குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, "மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலான சில விளம்பரங்களில், எவ்வளவு பணம் கொடுத்தாலும் நான் நடிக்க மறுத்துவிட்டேன்" என்ற அவரது கருத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜிவி பிரகாஷ் பேட்டி
அந்த பேட்டியில் அவர், பணம் மட்டுமே முக்கியம் என்ற எண்ணத்தில் செயல்பட முடியாது; பொதுமக்களின் நலன் பாதிக்கப்படும் விஷயங்களில் பிரபலங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அல்லது தவறான தகவல்களை பரப்பக்கூடிய தயாரிப்புகளை விளம்பரம் செய்வது குறித்து அவர் கவலையை பகிர்ந்து இருக்கிறார். சமூகத்தில் பிரபலங்களுக்கு இருக்கும் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஜிவி பிரகாஷ் மறுப்பு
பணம் மட்டும் முக்கியமில்ல, நம் மீது மக்களும், ரசிகர்களும் வைத்திருக்கும் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நம்மை நம்புகிறார்கள் என்பதற்காக அந்த நம்பிக்கையை வைத்து நம்ம தப்பான பொருட்களை விளம்பரப்படுத்தி பணம் சம்பாதிப்பது தவறு என்று அவர் வெளிப்படையாக கருத்து சொல்லி இருப்பது ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
வேஷ்டி விளம்பரம்
இதேபோன்ற ஒரு சம்பவம் குறித்து நடிகர் ராஜ்கிரண் பற்றிய பழைய தகவலும் தற்போது மீண்டும் பேசப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வேஷ்டி நிறுவனத்திலிருந்து வந்த விளம்பர வாய்ப்பை அவர் நிராகரித்த சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜ்கிரண் அதிகமான படங்களில் வேஷ்டியில் தான் இருப்பார். அதனால் அந்த நேரத்தில், ஒரு வேஷ்டி நிறுவனம் ராஜ்கிரணிடம் விளம்பரத்தில் நடிக்க கேட்டார்களாம். நாங்க மற்ற நடிகர்களுக்கு ஒரு நாளைக்கு சில லட்சங்கள் சம்பளம் கொடுக்கிறோம் ஆனால் நீங்க அதில் மூன்று பங்கு அதிகமாக வாங்கிக்கோங்க என்று கேட்டார்களாம்.
ஆனால் அதற்கு ராஜ்கிரண் முடியாது என்று சொல்லி விட்டாராம். இறுதியில் ஒன்றரை கோடி ரூபாய் வரை கொடுக்க தயாராக இருந்தார்களாம். ஆனால், எவ்வளவு பெரிய தொகை வழங்கினாலும், அந்த விளம்பரத்தில் நடிக்க முடியாது என்று ராஜ்கிரண் உறுதியாக மறுத்துவிட்டார்.
நடிகர் ராஜ்கிரண் பெருந்தன்மை
அதற்கான காரணமாக அவர் கூறிய விளக்கம் தான் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. "பொதுவாக வேஷ்டி அணிவது விவசாயிகள். அவர்கள் அதை குறைந்த விலையில் வாங்குகிறார்கள். ஆனால் என்னிடம் கோடிகளில் பணம் கொடுக்கிறீர்கள் என்றால், அந்த செலவு இறுதியில் அந்த விவசாயிகளிடம்தான் வசூலிக்கப்படும். அவங்க உடுக்குற உடைக்கு கூட என்னால பிரச்சனை வந்திடக் கூடாது" என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த கருத்து அப்போது சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஜி. வி. பிரகாஷ் குமார் எடுத்துள்ள நிலைப்பாடு, ராஜ்கிரண் முன்பே எடுத்த முடிவை நினைவூட்டுகிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். "பணம் மட்டுமே முக்கியமல்ல; மக்களின் நலனும் equally முக்கியம்" என்ற எண்ணத்தை இருவரும் தங்களின் முடிவுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர் என ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

பல திறமை
ஜி. வி. பிரகாஷ் குமார், தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார். இளம் வயதிலேயே இசையில் அறிமுகமான அவர், பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார். இசையமைப்பாளராக மட்டுமின்றி, நடிகராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள அவர், கதாநாயகனாக நடித்த பல படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
சமூக பிரச்சனைகள்
மேலும், சமூக பிரச்சனைகள் குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதில் ஜி. வி. பிரகாஷ் குமார் எப்போதும் முனைப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான், அவரது சமீபத்திய இந்த கருத்தும் சாதாரணமாக இல்லாமல், சமூக பொறுப்புணர்வை நினைவூட்டும் ஒரு முக்கியமான கருத்தாக பார்க்கப்படுகிறது.
ஜிவி பிரகாஷ் செய்த உதவி
அதுபோல ஜிவி பிரகாஷ் பல படங்களுக்கு பணம் வாங்காமலேயே பாடல்களுக்கு இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார் என்று அவரிடம் உதவி பெற்றவர்கள் கூறி இருக்கிறார்கள். சமீபத்தில் கூட கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசை அமைத்திருந்தார். ஆனால் கருணாஸ் கேட்டுக் கொண்டதற்காக எந்த பணமும் வாங்கவில்லை என்று கருணாஸ் பெருமையாக பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications