“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?”

Subscribe to Oneindia Tamil

சென்னை: 83 வயதிலும் இசையால் கோடிக்கணக்கான மக்களை கட்டிப்போட்டிருக்கும் இளையராஜா, தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவத்தை பகிர்ந்திருந்தார். "ஏழு ரூபாய் சம்பாதித்த போது கிடைத்த மகிழ்ச்சி, ஏழு கோடி சம்பாதித்த போதும் கிடைக்கவில்லை" என்ற அவரது வார்த்தைகள், இன்று அவரது பிறந்தநாளில் சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாகி இருக்கின்றன.

இப்போது ஒரு படத்துக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய இசை மேதை. ஆயிரக்கணக்கான பாடல்களின் சொந்தக்காரர். உலக அரங்கில் சிம்பொனி இசை நிகழ்த்திய பெருமைக்குரியவர். ஆனால் அவருடைய மனதில் இன்னும் அழியாமல் நிற்கும் ஒரு நினைவு இருக்கிறது. அது முதல் சம்பளமாக வாங்கிய ஏழு ரூபாய்.

Ilaiyaraaja Isaignani Tamil Cinema

எட்டாம் வகுப்போடு நின்ற படிப்பு

தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் பிறந்த இளையராஜாவுக்கு சிறு வயதிலிருந்தே படிப்பில் ஆர்வம் இருந்ததாம். ஆனால் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை அவரை தொடர்ந்து படிக்க விடவில்லை.

எட்டாம் வகுப்பு முடிந்து ஒன்பதாம் வகுப்பில் சேர வேண்டுமென்றால் 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த தொகையை கொடுக்க கூட வீட்டில் வசதி இல்லை. அதனால் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

வைகை அணையில் தொடங்கிய வேலை

அந்த காலத்தில் வைகை அணை கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது. அங்கு தண்ணீர் பாய்ச்சும் வேலையில் சேர்ந்தார் இளையராஜா. வேலை செய்தாலும் மனதில் இருந்தது இசை மட்டுமே.

தண்ணீர் பாய்ச்சிக்கொண்டே பாடல்கள் பாடுவாராம். அவருடைய குரலை கவனித்த பொறியாளர் எஸ்.கே. நாயர், பின்னர் அலுவலகத்தில் வேலை கொடுத்ததாக இளையராஜா ஒரு நிகழ்ச்சியில் நினைவுகூர்ந்திருந்தார்.

ஏழு ரூபாய் கொடுத்த சந்தோஷம்

அந்த வேலையில் சேர்ந்த பிறகு, முதல் மாத சம்பளமாக அவருக்கு கிடைத்தது வெறும் ஏழு ரூபாய். ஆனால் அந்த ஏழு ரூபாயை கையில் வாங்கிய போது ஏற்பட்ட மகிழ்ச்சியை இன்று வரை மறக்க முடியவில்லை என்று இளையராஜா கூறியிருந்தார்.

"புத்தம் புதிய ஏழு ரூபாய் நோட்டை கையில் வாங்கியபோது நான் வானத்தில் பறப்பது போல இருந்தது. அந்த மனநிறைவு, அந்த சந்தோஷம், அந்த பரவசம்... பிறகு வாழ்க்கையில் எவ்வளவு சம்பாதித்தாலும் கிடைக்கவில்லை" என்று அவர் பேசியிருந்தார்.

Ilaiyaraaja Isaignani Tamil Cinema

ஏழு கோடியும் தராத மகிழ்ச்சி

அதே பேட்டியில் இளையராஜா சொன்ன ஒரு வரிதான் இன்று சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. "ஏழு ரூபாய் சம்பாதித்த போது கிடைத்த மகிழ்ச்சி, ஏழு கோடி சம்பாதித்த போதும் கிடைக்கவில்லை" என்று அவர் கூறியிருந்தார். இந்த ஒரு வரியே வாழ்க்கையின் உண்மையை சொல்லிவிடுகிறது என ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

பணமா? மனமா?

இன்று 83 வயதை கடந்தும் இசையால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் இடம்பிடித்திருக்கும் இளையராஜா, தனது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் ஒரு பெரிய பாடத்தை சொல்லிச் சென்றிருக்கிறார்.

சந்தோஷம் என்பது வங்கி கணக்கில் இருப்பதல்ல... மனதுக்குள் இருப்பது. அதனால்தான் ஒரு காலத்தில் ஏழு ரூபாய் சம்பளம் வாங்கிய அந்த இளைஞன், இன்று இசை உலகின் ராஜாவாக இருந்தாலும், இன்னும் அந்த முதல் சம்பளத்தை தான் வாழ்க்கையின் மிகப்பெரிய செல்வமாக நினைவுகூர்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+