"நான்கு” தலைமுறையாக மாஸ் காட்டும் "இசைஞானி..” இளையராஜாவின் வாழ்க்கையில் நடந்த 10 ஆச்சரிய சம்பவங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் ஏராளமான இசையமைப்பாளர்கள் வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தொழில்நுட்பங்கள் வந்திருக்கின்றன. இன்று செயற்கை நுண்ணறிவு (AI) கூட இசையமைக்கத் தொடங்கிவிட்டது. ஆனால் 83 வயதிலும் "நான் இன்னும் கற்றுக்கொண்டு இருக்கிறேன்... என்னை விட யாரும் சிறப்பாக செய்ய முடியாது என்று அல்ல, ஆனால் என்னால் இன்னும் சிறப்பாக செய்ய முடியும்" என்ற மனநிலையுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா.

அதனால்தான் அவர் ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்ல... ஒரு காலம். ஒரு உணர்வு. ஒரு பள்ளிக்கூடம். இன்று தனது 83வது பிறந்தநாளை கொண்டாடும் இளையராஜாவின் வாழ்க்கையில் நடந்த சில ஆச்சரியமான, அதே நேரத்தில் ஊக்கமளிக்கும் சம்பவங்களை பார்ப்போம்.

Ilaiyaraaja Isaignani

1. வைகை அணையில் தொடங்கிய வாழ்க்கை

இன்று உலக இசை மேடைகளில் பேசப்படும் இளையராஜா, ஒரு காலத்தில் வைகை அணை கட்டுமானப் பணியில் தண்ணீர் பாய்ச்சும் வேலை பார்த்தவர்.

படிப்பில் ஆர்வம் இருந்தாலும், குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. ஒன்பதாம் வகுப்பில் சேர 25 ரூபாய் கட்டணம் கூட வீட்டில் இல்லாத நிலை.

அந்த நேரத்தில் வைகை அணை பணியில் வேலைக்கு சேர்ந்த சிறுவன் தான் பின்னாளில் உலகமே தலைவணங்கும் இசை மேதையாக மாறினார்.

2. பாடிக்கொண்டே வேலை பார்த்த சிறுவன்

வைகை அணையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதும் அவரது மனதில் இருந்தது இசை மட்டுமே.

தண்ணீர் பாய்ச்சிக்கொண்டே பாடல்கள் பாடுவாராம். அந்த குரலை கவனித்த பொறியாளர் எஸ்.கே. நாயர், இசைத்துறையில் காலடி எடுத்து வைக்க அனுப்பி வைத்ததாக இளையராஜா பல முறை நினைவுகூர்ந்துள்ளார்.

3. ஏழு ரூபாய் சம்பளம்

அலுவலக உதவியாளராக வேலைக்கு சேர்ந்த பிறகு கிடைத்த முதல் மாத சம்பளம் வெறும் 7 ரூபாய். ஆனால் அந்த ஏழு ரூபாய் கொடுத்த மகிழ்ச்சியை இன்று வரை மறக்கவில்லை இளையராஜா."ஏழு ரூபாய் சம்பாதித்த போது கிடைத்த சந்தோஷம், ஏழு கோடி சம்பாதித்த போதும் கிடைக்கவில்லை" என்று அவர் கூறியிருந்தார். அந்த ஒரு வரியிலேயே அவரது வாழ்க்கை தத்துவம் அடங்கியிருக்கிறது.

4. கிராம மேடைகளில் தொடங்கிய இசை பயணம்

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தனது சகோதரர்களுடன் கிராமம் கிராமமாகச் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தினார்.

மக்கள் மத்தியில் நேரடியாக இசையை பகிர்ந்த அந்த அனுபவம் தான் பின்னாளில் அவரது இசையை மண்ணோடு இணைத்து வைத்தது.

5. அன்னக்கிளி மாற்றிய விதி

1976-ல் வெளியான "அன்னக்கிளி" திரைப்படம் இளையராஜாவின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. அந்த படத்திற்கு முன் தமிழ் சினிமாவில் கிராமிய இசைக்கு பெரிய இடம் இல்லை. ஆனால் அன்னக்கிளி வெளியான பிறகு இசையின் மொழியே மாறியது.

6. சிம்பொனி வரை

பண்ணைப்புரத்தில் பிறந்த சிறுவன், பின்னாளில் லண்டன் இசைக் கலைஞர்களுடன் இணைந்து சிம்பொனி உருவாக்குவார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் தொடங்கிய கனவு, உலக இசை அரங்கம் வரை சென்றது.

7. AI வந்தாலும் நான் பின்வாங்க மாட்டேன்

சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு இசை குறித்து பேசிய இளையராஜா, "AI இருக்கலாம். அது ஒரு போட்டியாக இருக்கலாம். ஆனால் அதனால் நான் பயப்பட மாட்டேன். என்னால் அதைவிட சிறப்பாக செய்ய முடியும் என்று நம்புகிறேன்" என்று கூறியிருந்தார்.

இன்று பல இளம் இசையமைப்பாளர்கள் AI-யை பயன்படுத்தும் சூழலில் கூட, தனது படைப்பாற்றலின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கும் 83 வயது கலைஞர் அவர்.

8. இசைஞானி பட்டத்தின் பின்னணி

இன்று உலகமே அவரை "இசைஞானி" என்று அழைக்கிறது. அந்த பட்டத்தை வழங்கியது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி. பின்னர் அந்த பெயரே அவரது அடையாளமாக மாறிவிட்டது.

Ilaiyaraaja Isaignani

9. குடும்பமே இசை உலகம்

கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி என அவரது குடும்பமே இசையுடன் வளர்ந்தது. ஒரே குடும்பத்தில் பல தலைமுறைகள் இசைத்துறையில் சாதிப்பது அரிதான விஷயம்.

10. ஐந்து தலைமுறைகளின் பின்னணி இசை

80களில் காதலித்தவர்களுக்கும், 90களில் வளர்ந்தவர்களுக்கும், 2K கிட்ஸ்களுக்கும், இன்றைய தலைமுறைக்கும் பொதுவான ஒரு விஷயம் இருக்கிறது என்றால் அது இளையராஜாவின் பாடல்கள். ஒரு தலைமுறையின் இசையமைப்பாளர் அல்ல... ஐந்து தலைமுறைகளின் நினைவுகளுக்குள் வாழும் இசைக்கலைஞர்.

அவரது வெற்றி ஆயிரக்கணக்கான பாடல்களில் இல்லை. 83 வயதிலும் "நான் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்", "நான் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும்" என்று நினைப்பதில்தான் இருக்கிறது. வைகை அணையில் தண்ணீர் பாய்ச்சிய சிறுவனுக்கும், இன்று உலக இசை மேடையில் நிற்கும் இசைஞானிக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் திறமையல்ல...

கைவிடாத மனசு... அதனால் தான் ரசிகர்கள் இன்றும் ஒரே குரலில் சொல்கிறார்கள்..."ராஜா என்றும் ராஜாதான்!"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+