மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை! ஜேம்ஸ் வசந்தனின் கொந்தளிப்புக்கு காரணமான விஜய் நிகழ்ச்சி
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கலந்து கொண்ட அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ஜேம்ஸ் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. நல்ல சிந்தனையாக நல்ல ஒரு பாடகிச் சிறுமியைப் பாடவைத்தது பாராட்டத்தக்கது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பக்கம் எல்லாம் சரி. ஆனால் பாட வருகிற தொழில்முறைப் பாடகர்கள் அவர்கள் பணியின் அடிப்படையைப் புரிந்து கொண்டுப் பாடுதல் அவர்களுக்கும் நல்லது; அந்தப் பணிக்கும் நல்லது.
நான் ஒருசில ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் இந்திய நாட்டுப் பண் ஆகியவற்றைப் பாடும் இசை சார்ந்த வழிமுறைகள் பற்றி எழுதியிருந்தேன். யார் யார் எந்த சுருதியில் பாடவேண்டுமென்று. மேற்கண்டப் பாடல்கள் ஓரிருவர் பாடி பிறர் கேட்பதல்ல. இவை சமூகப் பாடல்கள்.
ஒரு நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைவரும் ஒன்றிணைந்துப் பாட வேண்டும். எல்லாரும் பாடவேண்டுமெனில் அதற்கு ஏற்ற சுருதியில் இவை பாடப்பட வேண்டும். இதை முன்னின்று வழிநடத்துகிற தொழில்முறைப் பாடகர்கள் சரியான சுருதியில் பாடினால்தான் இது சாத்தியமாகும்.
இந்நிகழ்ச்சியில் பாடிய அந்தச் சிறுமி 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் பாடியவர் என்று நினைக்கிறேன். அவருக்குக் கிடைத்த அனுபவத்தை அவர் சரியாகப் பயன்படுத்தவில்லை. அந்தக் குழந்தையை சம்பந்தப்பட்டப் பெரியவர் யாரும் சரியாக வழிநடத்தவுமில்லை.
கையில் ஒரு கைபேசியை வைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட சுருதியில் பாடினால் அவரால் நன்கு பாடவும் முடியும்; கேட்கவும் இனிமையாக இருக்கும்; பொதுமக்களும் இணைந்து பாடமுடியும்.இவர் D (2 கட்டை) சுருதியில் பாடினார். இறுதியில் கீச்சென்று எட்ட முடியாத உயரத்தில் சுருதி சேராமல் முடித்தார். இது ஏன் நிகழ்ந்தது?
பின்னணியில் சுருதி இல்லாத காரணத்தால் மட்டுமே. சரியான திட்டமிடல் இல்லாததே. MSV ஐயா அவர்கள் பின்னணிப் பாடகர்களை வைத்து C சுருதியில் பதிவு செய்தப் பாடலையே நம்மால் பாட இயலாது. இந்தக் குழந்தை சுருதியை இன்னமும் கூட்டிப் பாடியதால் கேட்கவும் பாடவும் கடினமானது. எவ்வளவு நல்ல பாடகரானாலும் நம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை (Bb) ஆறரைக் கட்டை சுருதியில் பாடுவதே எல்லாருக்கும் உகந்ததாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்பு பிக்பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளர்களில் ஒருவரான முத்துக்குமரன் சிவாஜி பேசிய மிக நீளமான வசனங்களை பேசியிருந்தார். அப்போதும் ஜேம்ஸ் வசந்தன் அவரது தமிழ் உச்சரிப்புகள் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். அது போல் பிக்பாஸில் பெண் போட்டியாளர்கள் மீது ஆணாதிக்கம் செலுத்தப்படுவதாகவும் அவர்களை விஜய் சேதுபதி விசாரிக்காமல் பெண்ணை சிறுமைப்படுத்தியுள்ளது, தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் எதிர்காலத்தைக் குறித்த அச்சம் மேலோங்கியது என ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications