நான் பண பேயா? குடும்பத்தை பிரித்தவளா? ஜெயம் ரவியிடம் ஆதாரம்? 100 கோடி கடன், ஆர்த்தி ரவி அம்மா சுஜாதா அறிக்கை
சென்னை: நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய போவதாக கடந்த வருடத்தில் அறிவித்திருந்தார். அப்போது இவருடைய விவாகரத்திற்க்கு காரணம் ஆர்த்தியின் அம்மா தான் என்று பல குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்த நிலையில் ஆர்த்தி ரவியின் அம்மாவான தயாரிப்பாளர் சுஜாதா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
சுஜாதா வெளியிட்ட அறிக்கையில், வணக்கம் கடந்த 25 வருடங்களாக திரைப்படத்துறையில் ஒரு தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். ஒரு பெண்ணாக இத்தனை காலம் இந்த துறையில் நீடித்திருப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது உங்களுக்கு தெரியும். இத்தனை ஆண்டுகளில் பட வெளியீட்டின் போது அந்த படம் சம்பந்தமில்லாமல் வேறு எதற்காகவும் நான் மீடியா முன்பு வந்தது இல்லை. இப்பொழுது முதல்முறையாக என்னைப்பற்றி எழுந்துள்ள அவதூறுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன்.

தயாரிப்பாளர் சுஜாதா அறிக்கை
கடந்த சில காலமாக கொடுமைக்காரி, குடும்பத்தை பிரித்தவள், பணத்தை அபகரித்தவள் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் என்னை பற்றி உலா வருகின்றனர். அப்பொழுது இதற்கு விளக்கம் தர வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி மௌனமாய் இருந்து விட்டேன். இப்பொழுதும் நான் பதில் சொல்லவில்லை என்றால் என்னை பற்றி திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு வரும் பொய்கள் உண்மையாகிவிடும் என்பதால் இந்த விளக்கம் கொடுக்கிறேன்.
முதல் திரைப்படம்
கடந்து 2007 ஆம் ஆண்டு வீராப்பு என்ற திரைப்படத்தை முதலில் தயாரித்தேன். திரு சுந்தர் சி அவர்கள் கதாநாயகனாக அந்தப் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் எனக்கு வெற்றியை கொடுத்தது தொடர்ந்து சின்னத்திரை தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த எனக்கு 2017 ஆம் ஆண்டு என் மாப்பிள்ளை திரு ஜெயம்ரவி அவர்கள் நீங்கள் திரைப்படமும் தயாரிக்க வேண்டும் என்று யோசனையை வழங்கினார். அதனால் மீண்டும் திரைப்படம் தயாரிக்க தொடங்கினேன்.
ஆனாலும் உறவு ரீதியாக நெருங்கிய ஒருவரை தொழில் ரீதியாக அணுகும் பொழுது அது குடும்பம் மற்றும் தொழில் இரண்டையும் பாதித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட அடங்கமறு என்ற திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றி படமாக அமையவில்லை. இருந்த போதிலும் தொடர்ந்து திரைப்படங்கள் தயாரிக்க வேண்டும் என்கிற ஆலோசனையை என் மாப்பிள்ளை ஜெயம் ரவி அவர்கள் கூறினார்.
ஜெயம் ரவியின் ஆலோசனை
அந்த ஆலோசனையின் பெயரில்தான் நான் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இந்த காலகட்டத்தில் ஒரு திரைப்பட தயாரிப்பாளரின் பணி அந்த திரைப்படத்தின் துவக்கத்தின் போது கேமராக்களுக்கு முன் கைகூப்பி நிற்பதும், பட வெளியீட்டின் போது பைனான்சியர்களின் முன் கைகட்டி நிற்பது என்று ஆகிவிட்டது. இதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.
100 கோடி கடன்
அடங்கமறு, பூமி மற்றும் சைரன் என மூன்று திரைப்படங்களை தொடர்ந்து என் மாப்பிள்ளை ஜெயம்ரவி அவர்களை கதாநாயகனாக வைத்து தயாரித்திருந்தேன். இந்த படங்களுக்கு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கு மேலாக பைனான்சியர்களிடமிருந்து கடன் வாங்கி இருக்கிறேன். அந்த பணத்தில் 25 சதவீதத்தை திரு ஜெயம் ரவி ஊதியமாக வழங்கி உள்ளேன் இதற்கு என்னிடத்தில் அவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம், அவர் வங்கி கணக்கு செலுத்திய பரிமாற்றம், அவருக்காக நான் செலுத்திய வரி என அனைத்து ஆதாரங்களும் உள்ளன.
பொய் குற்றசாட்டு
இப்போது திரு ஜெயம் ரவி அவர்கள் இந்த படங்களின் வெளியீட்டின் போது அவரை நான் பல கோடி ரூபாய் என்னுடைய கடன்களுக்காக பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. அவரை வெறும் கதாநாயகனாக மட்டுமே நான் பார்த்திருந்தால் கூட அப்படி நிர்பந்தியப்படுத்தி இருக்க மாட்டேன். ஆனால் அவரை என் மாப்பிள்ளை என்பதை தாண்டி என் சொந்த மகனாகவே கருதினேன். அதனால் அவருக்கு எந்த ஒரு கஷ்டமும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஆதாரம் காட்ட வேண்டும்
ஒரு பெண் என்ற நிலையை கடந்த ஒவ்வொரு படம் வெளியாகும் போது விடியற்காலை 5 மணி வரை வாங்கிய கடனுக்காக கிட்டத்தட்ட ஒரு வெள்ளை சுவரை தவிர பைனான்சியர்கள் காட்டும் எல்லா இடங்களிலும் கையெழுத்து போட்டு பல கோடி ரூபாய் நஷ்டத்தையும் மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக்கொண்டேன். மாறாக அவர் சொன்னது போல் அவரை நிர்பந்தப்படுத்துவதற்காக அல்ல. திரு ஜெயம் ரவி அவர்கள் சொன்னது போல் அவரை கோடி கணக்கான... இல்லை ஒரே ஒரு ரூபாய்க்கு அவரை நான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை, அப்படி ஒன்று இருந்தால் அதை அவர் எங்கு வேண்டுமானாலும் வெளியிட வேண்டும் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
இன்றும் நான் மகனாகவே நினைக்கும் திரு ஜெயம் ரவி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், எப்பொழுதும் உங்களை ஒரு கதாநாயக பிம்பத்திலேயே நாங்கள் பார்த்திருக்கிறோம், ரசிக்கிறோம். நடந்து வருகின்ற பிரச்சனையில் உங்கள் மீது அனுதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அறிக்கைகளில் நீங்கள் சொல்கின்ற பொய்கள் அந்த கதாநாயக பிம்பத்தில் இருந்து உங்களை தரம் தாழ்த்தி விடுகிறது. என்றும் நீங்கள் ஹீரோவாகவே இருக்க வேண்டும்.
வேண்டுகோள்
இது வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் அம்மா அம்மா என்று அழைப்பீர்களே அந்த அம்மாவின் ஆசை. இன்றுவரை என் பேரகுழந்தைகளுக்காக அந்த குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன். அழகாக வாழ்ந்து வந்த ஒரு மகளை வாழ வெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனதிற்கு தான் தெரியும். அந்த துர்பாக்கியம் எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது. ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தை பிரித்தவள் சித்திரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனைகளையும் என் மீது சுமத்தாதீர்கள். அதை தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை என்று அந்த பதிவில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications